Tuesday 6 February 2024

தொழுதுண்ணல்

 


அப்பா சாப்பிடும்போது முதலில் சில சோற்றுப் பருக்கைகளை, இட்டலி என்றால் சிறு துண்டொன்றைத் தரையில் வைத்துவிட்டு அதன் பிறகே சாப்பிடத் தொடங்குவார்.

சாப்பிடும்போது “கீழ சிந்தாம திண்ணு, சின்னப்பிள்ள மாதிரி சிந்திற்று கெடக்க” என்று சொல்லி வளர்க்கப்பட்ட எனக்கு அப்பாவின் இந்தச் செய்கை வியப்பாகவும், புரியாமலும் இருக்கும். அவரிடம் கேட்க முடியாது. (அப்பொழுதெல்லாம் பலருக்கும் என்னைப்போலவே அப்பாவிடம் விரிவாகப் பேசுவதற்கு அச்சம் இருந்திருக்கும்). சில வேளைகளில் அவர் மீது சின்னப் பொறாமையாகவும் இருக்கும். “நானும் வளந்து மீசையெல்லாம் வச்சதுக்குப் பொறவு கீழ போட்டுத் திம்பேன் பாரு” என அம்மாவிடம் சொல்வதுபோல் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்.