Tuesday 14 April 2020

ஊர் போய் சேர்ந்து விட்டீர்களா?


அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.
காற்று இரண்டு நாள்களில்
கடந்துவிடும் நெடுந்தொலைவில்,
ஓடுகள் உதிர்ந்து கிடக்கும்
அவள் வீட்டு முற்றத்தில்
பெரியதாய் ஓர் இலந்தை மரம் உண்டு.
அதனடியில் ஆடிய நினைவுகளைத்
தலையில் சூடி,
கற்பனைக் குளிர்ச்சிக்குள்
காலெடுத்துவைத்து நடக்கிறாள்.
முன்னே,
செருப்பணிந்து சென்றவர்களால்
தேய்ந்து கிடக்கிறது சாலை.
மரங்களற்றப் பெருவழியெங்கும்
நிலம் சேர்ந்து கிடந்தான்
கதிரவன்.
கைக்குள் கிடந்த குழந்தை
நாவறண்டு மார்புதீண்ட,
இல்லாத நிலையறிந்தத்
தாயுள்ளம் ஏங்கியழ,
கண்கள் பனித்து,
காயும் முன் குழந்தையின்
வாயில் விழுந்தன
கண்ணீர்த் துளிகள்.
தாகம் தீர்த்தத் தாய்முகம் பார்த்துச்
சிரித்தது குழந்தை.
அவள் இன்னும் அழுதாள்.

Wednesday 8 April 2020

இப்பொழுதேனும் சொல்லிவிடு கண்ணே



"இன்னும் சில நிமிடங்களில் கிளம்பிவிடப் போகிறேன் கண்ணே. இப்போதேனும் சொல்லிவிட மாட்டாயா?" முருகனின் மனதுக்குள் ஏக்கம் மிகுந்து..  பொற்கொடியைப் பார்த்தான்.

வண்டிச் சாவியையும், தலைக் கவசத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்.  அவன் இப்பொழுது கிளம்பிவிடுவான் என்பது பொற்கொடிக்கும் தெரியும். அவனது பார்வையில் இருக்கும் "அந்த" ஏக்கமும் அவளுடைய பதிலை எதிர்பார்த்துத் தத்தளிக்கும் அவனது உள்ளமும் அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்வாள். அப்பாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. அம்மாவுக்கும் உடல் நிலை அத்தனைச் சரியாக இல்லை. அப்பாவிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். அம்மா... கேட்கவே வேண்டாம்.

அவனுக்கு அவளைவிட நான்கு வயது அதிகம். இருவருக்கும் பொதுவான விருப்பங்கள் பலவுண்டு. அது போல வேறுபாடானவையும் சில உண்டு. முரண்பாடுகள் இருந்தாலே வாழ்கை இனிக்கும். அதை அவளைப் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் அவன் உணர்ந்திருக்கிறான். எல்லாம் சரிதான். இதில் மாறுபட்டால் எப்படி?

முருகன் மனதில் தோன்றிய உணர்வை அவளிடம் கொட்டித் தீர்த்து இன்றோடு நான்கு நாள்கள் ஆகிவிட்டது. அவள் தான் இன்னும் பதிலேதும் சொல்லவில்லை. ஏதாவது ஒரு பதில் சொல்ல வேண்டாமோ? ஒன்றுமே சொல்லாமல் இருந்தால் எப்படி. பெண்களே இப்படித்தானோ? வேறு வழியில்லை. விதி இப்படித்தான் என்றால் என்ன செய்வது?

 "சரி... அப்ப நான் கெளம்பட்டுமா?"

"ம்..." என்ற பொற்கொடியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்பா என்றால் அவளுக்கு உயிர். மனதுக்குள் இருந்த உணர்வை அவளும் மறைத்துக் கொண்டுதான் நின்றாள். 

கிளம்ப மனமின்றிக் கிளப்பியதில் வண்டியின் சத்தம் கொஞ்சம் அதிகமாகக் கேட்பது போல் இருந்தது முருகனுக்கு. கிளட்சைப் பிடித்துக் கொண்டு கியர் இடுவதற்கு காலை அழுத்த முயன்ற நொடியில்....

"ஒரு நிமிசம் இருங்க... முக்கியமான ஒண்ணு .." என்று சொன்ன படி வீட்டுக்குள் போனவள் சில நொடிகளில் திரும்பி வந்தாள்

"இந்தாங்க.. முதல்ல இந்த முகமூடிய மாட்டுங்க. அப்புறம் இன்னும் ரெண்டு முகமூடி இந்தப் பையில இருக்கு. அப்பாவையும் அம்மாவையும் ஒண்ணாக் கூட்டிக்கிட்டு வர முடியுமான்னு தெரியல. வயசானவங்க. எங்கிட்டாவது விழுந்துரப் போறாங்க. அதனால அம்மாவ மொதல்ல கூட்டிட்டு வாங்க. அப்புறம் அப்பாவ கூட்டிட்டு வாங்க."

"ம்...ம்.." என்றபடி முருகன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.

"என்ன பண்றது. கொரொனா பயம் எல்லாருக்கும் தான் இருக்கு. போலீசு வேற சும்மா அலையிறவங்கள தொரத்துதாம். அம்மாவால இப்ப சமைக்க முடியாது. என்ன பண்ணுவாங்க. அதான், மதுரைல இருக்கிறவங்கள விருதுநகருக்கு எப்படியாவது கூட்டிட்டு வாங்கன்னு அவருகிட்ட சொன்னேன். மனுசன் யோசிச்சாரு. வேற எதாச்சும் ஏற்பாடு பண்ணலாம்னு பாத்தாரு. நான் வேண்டாம்னு சொல்லுவேன்னு நெனச்சிருப்பாரு போல. ஏக்கமா பாத்துக்கிட்டெ இருந்தாரு மூணு நாளா. ஒண்ணும் வசப்படல.. சரின்னு மனசில்லாம கெளம்பிப் போயிட்டிருக்காரு. எனக்கும் அவர அனுப்புறதுல சங்கடந்தான், என்ன செய்ய எல்லா உசுரும் ஒன்னுதானே."

"ஆமா... நீங்க என்ன நெனச்சீங்க?"

Sunday 5 April 2020

முற்றாக் காதல் - நல்லந்துவனார்



உலகின் பெருநகரமொன்று சுறுசுறுப்படைந்தது. கதிரவன் மேலேறிவிட்டான். வணிகர்கள் கடைதிறந்து, கொள்வோர் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அங்கிருந்து சில கல் தொலைவில் பரங்குன்றில் முருகனுக்கு ஏதோ விழாவெடுக்க மக்கள் குழுமத் தொடங்கினார்கள். கூடல் நகருக்கும் பரங்குன்றிற்கும் நடுவே இருந்தச் சிற்றூர் ஒன்றிலிருந்து குயிலி தன் தோழிகளுடன் திருப்பரங்குன்று நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

செல்லும் வழியெல்லாம் பூஞ்சோலைகளாக இருந்தன. தேனூறும் பூக்களைத் தேடி வண்டுகள் அங்குமிங்கும் பறந்தவண்ணம் இருந்தன. இடையிடையே தேனீக்களும் பறந்தன. அவை எழுப்பும் ஒலிகள் ஏழு துளைகள் கொண்ட குழலும், ஐந்து துளைகள் கொண்ட குழலும் இயைந்து ஊதுவதுபோல் இருந்தன. இடையிடையே வீசிய மெல்லிய காற்றில் காந்தளின் மணம் நிறைந்திருந்தது. பலவிதமான மலர்கள் பூத்துக் குலுங்க நடையின் சலிப்பு அறியாது பரங்குன்று வந்து சேர்ந்தார்கள் மகளிர். நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது.

"என்ன குயிலி அவன் வந்துவிடுவான் என்று சொன்னாய். இன்னும் காணவில்லை?" - தோழி ஒருத்தி வினவினாள்.

"ம்... கண்டிப்பாக வருவேன் என்றுதான் சொன்னான். என்னவென்று தெரியவில்லை. காத்திருப்போம்"

அந்த நேரம்..  மேலிருந்து "குயிலி" என்று அவன் அழைக்கும் குரல் கேட்டது. மலையைப் பார்த்தாள். ஒரு சந்தன மரத்தடியில் அவன் நின்று கொண்டிருந்தான். வாவென கையசைத்தான். குயிலி விறுவிறுவென மலையில் ஏறத் தொடங்கினாள். தங்களுக்குள் பேசியவாறே தோழியரும் பின் தொடர்ந்தனர்.

"பாருடீ.. சொன்ன நேரத்திற்கு முன்பே வந்துவிட்டான். என்ன ஆசையோ?"

"அது அவனது ஆசை மட்டும் இல்லையடி. பரங்குன்றின் இயல்பே அதுதான்."

'அப்படியா?"

"ஆமாம். நீ வேண்டுமானால் உன் காதலனை அழைத்து வரச்சொல்லி இந்த வண்டுகளைத் தூதாக அனுப்பிப் பாரேன். அவை மூதூர் கூடலின் கோட்டை மதில்களில் எதிரொலிக்கும் அளவுக்கு நகரில் இருப்பவர் அனைவரும் அறிய உங்கள் களவைச் சொல்லி அலர் பரப்பும் என்றால் பார்த்துக் கொள், இந்த குன்றம் எப்படிப் பட்டது என்று"

"வியப்பாக இருக்கிறது"

"மாவடுவை நேராகக் கீறி வைத்தது போன்ற அழகிய கண்களை உடைய பளபளக்கும் கறுப்பழகியே, இன்னும் கேள். மென்மையான நீண்ட மூங்கிலைப் போன்ற உன் கைகளும், அளவில் சிறிய மேல்கை "தொடி" வளையும் உன் இளவயதைக் காட்டுகின்றன. இவற்றைப் பார்க்கும் இந்தக் குன்று உன் உள்ளத்தில் அள்ளக் குறையாத இன்பத்தை உருவாக்கும். இந்த நேரம் உன் தலைவன் இருந்தால் இந்த அழகிய மலைச் சோலையில் விழுந்து கிடக்கும் மலர்கள் உங்களுக்குப் பாயாக மாறும்"

"இப்படிச் செய்யுமா ஒரு மலை?"

"இது மட்டுமா? இந்த மலையில் இருந்தால், நீ வேண்டாம் என நினைத்தாலும் தலைவனுக்கு இயைந்து விடுவாய். அளவற்ற இன்பம் பெறத் துணிந்து விடுவாய். அது உங்கள் காதலை என்றும் இளமையாய், முற்றாக் காதலாக வைத்திருக்கும். "

"அப்படியெல்லாம் சட்டென்று உடன் பட மாட்டேனடி.. என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?"

"இப்படி நிறைய பேர் சொல்லி நானும் கேட்டுவிட்டேன். பிறகு நடந்ததை நான் அறிவேன். நல்ல ஆண்மகனின் உள்ளத்தைக் கவர்ந்து அவனைத் தலைவனாகக் கொண்ட உன்னைப் போன்ற இளம் பெண்கள், இங்கு வந்தால் நாள் முழுதும் அவன் மார்பிலிருந்து அகலாமல் இருப்பார்கள். காற்றடிக்கும் போது, மெல்லிய மலர் காய்ந்து இன்னும் மெலிந்த சருகு பறந்து இருவருக்கும் இடையே விழுந்தால் தாங்க மாட்டார்கள். அந்த இடைவெளியே அதிகம் என்று எண்ணுவார்கள். அதைப் பார்ப்பதற்கு மகன்றில் பறவைகள் இணைந்திருப்பது போல இருக்கும்."

"ம்..."

"என்ன தலைவன் நினைப்பு வந்துவிட்டதா?.. ஒருநாள் அவனோடு பரங்குன்றுக்கு வந்து பார். என்றுமே வாடாத, மறக்கவே முடியாத மகிழ்ச்சியை வழங்கும் இந்த மலை. .. நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீ என்ன தேடுகிறாய்?"

"ம்.. தூது சொல்லியனுப்ப வண்டுகளைத் தேடுகிறேன். "

இருவரும் மெல்லச் சிரித்தார்கள்.

==============================

ஒரு மலையின் இயற்கை வளம் மக்களின் உள்ளத்தளவில் தாக்கம் செலுத்துவதை, முற்றாக் காதல், புலரா மகிழ்ச்சி என அழைத்து மகிழ்கிறது நல்லந்துவனாரின் இந்த வரிகள் . வரிகள் கீழே.

பரிபாடல் - 8 - செவ்வேள்
வரிகள்:-  36 முதல் 46 வரை
இயற்றியவர் - நல்லந்துவனார்
இசையமைத்தவர் - மருத்துவன் நல்லச்சுதனார்.
===============================

'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்/
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;/
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,/
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்/
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,/
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;/
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,/
அடியோர் மைந்தர் அகலத்து அகலா/
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,/
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்/
சிறப்பிற்றே தண் பரங்குன்று./

===============================

அருஞ்சொற்பொருள்

ஏய - அனுப்பப்பட்ட
தொழுதி - கூட்டம்
முரல்வு - ரீங்காரம்
கம்பலை - அலர், ஊரறியச் சொல்லுதல்
வடுவகிர் - மாவடு கீறிய
பணை - மூங்கில்
குறுந்தொடி - குறுகிய மேல் கையணி
ஆராக் - தெவிட்டாத 
ஆர் பொழில் - அடர்ந்த சோலை
வரை - மலை
இயைக்கும் - இணங்கிப் பொருந்தும்
வரையா - அளவற்ற
அடியோர் - மனதைக் கவர்ந்தவர்
அகலம் - மார்பு
அலர் ஞெமல் - மலர்ச் சருகு
மகன்றில் - மகன்றில் பறவை, ஒரு நீர்ப்பறவை



Saturday 4 April 2020

மலர்ச்சோலை அழுதது - ஔவையார்



தன்னிழல் தன்னடி ஆகும் வேளையில் வீட்டிலிருந்து கிளம்பி ஊரெல்லையில் இருக்கும் அழகிய சோலைக்கு வரச் சொல்லியிருந்தான் மத்தி.  உச்சி கடந்து ஒருநாழிகை ஆகும் போது தானும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். 

வீட்டு வாயிலில் அமர்ந்து முற்றத்தில் நின்று கொண்டிருந்த புன்னை மரத்தைப் பார்த்துக் கொடிருந்தாள். அதன் நிழல் மரத்தை ஒட்டி கீழே  இருந்த கேணியில் முழுவதுமாக விழும் வரைக் காத்திருந்தாள். அருகே தென்னை ஓலையில் உணக்குவதற்காக வைக்கப் பட்டிருந்த மீன்களைக் காகம் ஒன்று எடுத்துச் செல்வதில் கூட அவள் கவனம் செல்லவில்லை. விழி மூடாது கேணியையே பார்த்திருந்தாள். ஒருவழியாக அந்த நொடியும் வந்தது. வேளை உச்சிப்பொழுது என்பதை உணர்ந்தாள். உள்ளே ஓடிச் சென்று ஓலைப் பொதியில் வைத்திருந்த சுட்ட திருக்கைத் துண்டங்களை எடுத்துக் கொண்டு மெல்ல வெளியே ஓடினாள். வீட்டின் பின்புறமிருந்து படலை விலக்கிக் கொண்டு "கயற்கண்ணீஈஈ.. என்றழைத்த அம்மாவின் நீளமான குரல் கூட அவள் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை.

தொலைவில் இருந்து பார்க்கும் போதே, கதிரவனின் ஒளியில்; வண்ண வண்ணப் பூக்களால் நிறைந்து கிடந்த அந்தச் சோலை பேரழகாக மின்னியது. அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே சோலையில் நுழைந்தாள். முகப்பில் இருந்த சிறு குளத்தில் நெய்தல் மலர்கள் பூத்துக் கிடந்தன. மெல்லிய காற்றில் அசைந்த அவை மத்தியின் வரவை அறிவிப்பது போல் இருந்தன. இன்னும் ஒரு நாழிகையேனும் பொறுக்க வேண்டும். ம்...

தொலைவில் நாழிகைக் கணக்கர் காலம் சொல்ல, அதை ஊருக்கு அறிவித்துக் கொண்டிருந்தது பறையும் சங்கொலியும். அருகில் துறையொன்று இருப்பதால் இது நாளும் நடக்கும் நிகழ்வு. கயலுக்கு உள்ளம் துள்ளாட்டம் போட்டது. காதைத் தீட்டி, மடல்களில் கைகுவித்துக் கேட்டாள். குளம்படி கேட்காத அந்த மணல் வெளியில் மத்தியின் தேரை இழுத்துவரும் குதிரையின் கழுத்தில் கிடக்கும் மணிகள் எழுப்பும் ஓசை அவள் காதுகளை எட்டியது. கொங்கண் அல்லவா? இசையொலிக்கும் இனமணிகள் அவனது குதிரையின் கழுத்துப் பட்டியில் தொங்கிக் கொண்டிருந்தன.

மத்தி வந்துவிட்டான். தேரிலிருந்து இறங்கி குதிரையை மரமொன்றில் கட்டிவிட்டு அவளிடம் வந்தான்.  உச்சி முகர்ந்தான். 

"பகற்குறி தவறவிடாது வந்து விட்டாய். அம்மா பார்க்க வில்லையா கயல்?"

"வெளியேறும் போது அழைத்தார்கள். செவியில் விழாதது போல் வந்துவிட்டேன்"

"கையில் என்ன பொதி?"

"நல்ல திருக்கைத் துண்டம். மெந்தீயில் சுட்டு வைத்திருக்கிறேன். இளந் திருக்கையா.. அதனால் சுடும்போது  நல்ல  நெய் உருகிச் சேர்ந்திருக்கிறது."

"அடடா... எடு எடு. முதலில் அதை உண்கிறேன்"

"முதலில் அதை என்றால் பிறகு?"

"தெரியாதது போலவே கேட்கிறாய். எப்பொழுதும் முதல் நாள் போல் உன்னால் எப்படி இருக்க முடிகிறது கயல்?"

"நீங்கள் மட்டும் எப்படியாம்?" சிரித்தாள்.

அருகில் இருந்த பனைமரத்திலிருந்து அன்றில் பறவையின் "உளறல்' ஒலி கேட்டது. மத்தி கயற்கண்ணியின் அழகான கண்களை உற்றுப் பார்த்தான்.

குதிரையின் மெல்லிய கனைப்பொலி கேட்டு கயல் தலை உயர்த்தினாள். குளத்தில் நெய்தல் மலர் கூம்பத் தொடங்கியிருந்தது. அவள் மனதுக்குள் வாட்டம் வந்தது.

எழுந்து குளம் நோக்கி நடந்தாள். இறங்கி முகம் கழுவித் திரும்புகையில் தன் நிழல் கிழக்கில் நீண்டு நடப்பதைக் கண்டாள். மேற்கே வானமலையில் கதிரவன் இறங்கத் தொடங்கியிருந்தான். வானம் சிவப்பை அணிந்திருந்தது. ஈரக்கால்களில் நடக்கும் போது கூட வெம்மை தெரியவில்லை. கொஞ்ச நேரம் முன்புவரை முதுகெல்லாம் சூடு கொண்டது. இப்பொழுது நிலம் சூடு தணிந்திருந்தது.

அவனும் எழுந்து ஆடையிலிருந்த மணலைத் தட்டிவிட்டுக் கொண்டு குதிரையை நோக்கி நடக்கலானான். கயல் வாயிலில் நிறுத்தி வைத்திருந்தத் தேரின் அருகே வந்து நின்று கொண்டாள். குதிரையின் கழுத்து மணிகள் மீண்டும் ஒலித்தன. ஆனால் இம்முறை அது அவளுக்கு இன்பமாயில்லை. திரும்பிச் சோலையின் உள்ளே பார்க்கிறாள். இருள் கவ்வத் தொடங்கியதில் வண்ணமற்றுப் போயின பூக்கள். பொழுது சாய்ந்து விட்டது.

குதிரையைத் தேரில் பூட்டியவன் கிளம்ப அணியமானான். 

"வரட்டுமா... கயல்....."

"ம்..." என்று கை உயர்த்தினாள். அவ்வளவுதான். தேர் கிளம்பிச் சென்று மறைந்துவிட்டது. அவன் எந்தத் திசையில் சென்றான் என்பது கூட அவளுக்கு உணர்வில் இல்லை. தனக்குத் தானே பேசிக்கொள்ளத் தொடங்கினாள்.

"மெய்யெங்கும் நிறைந்த காமத்தோடு... உயர்த்திய கை இறக்காமல், உள்ளத்தில் அழுது ஒழிகிறேன். தேரோ சென்று மறைந்து விட்டது. தேன் தேடும் வண்டுகள் சுற்றிப் பறந்து பாடும், தேன் நிறைந்த பூமாலை சூடி வந்தான். அவன் மார்பில் ஆடிய மின்னல் போன்று ஒளி பொருந்திய பூண்நகையோடு நானும் இன்பமாய் நகைத்து படர்ந்து விளையாடினேன். இன்பம் நுகர்ந்தேன். எனக்கே அழுகை வருகிறதே, பாவம் இந்தச் சோலை என்ன செய்யுமோ?"

என்று தனக்குத் தானே சொல்லியவாறு வீட்டை நோக்கி நடந்தாள் கயற்கண்ணி.

===========================================

பெண்மனம் குறித்து உரக்கப் பேசும் ஔவையாரின் பாடல் இது. நற்றிணையில் 187 வது பாடல்.

பாடல் கீழே

நற்றிணை – 187 – நெய்தல் ஔவையார்
========================================
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,/ 
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,/  
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;     /
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,/
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,/ 
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு/ 
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட/ 
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,/
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு/    
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?/

மெய்ப்பாடுஅழுகை
பயன்அவாவுயிர்த்தல், கேட்பவர் பெருமூச்செறிதல்
==========================================

அருஞ்சொற்பொருள்

கூம்ப - குவிந்து மூட
குணக்கு - கிழக்கு
அல்கின்று - இருள் சூழ
இனமணி - குதிரைகளின் கழுத்து மணிகள்
இமிரும் - ரீங்காரமிடும்
கோதை - பூமாலை
இவர் - ஒளிரும்
கொடும் பூண் - வளைந்த பொன் அணி
கொண்கண் - நெய்தல் தலைவன்




Friday 3 April 2020

சண்டையிடக்கூட அன்பு வேண்டும் - அள்ளூர் நன்முல்லையார்



சேந்தன் மனதில் பெரும் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். பளிங்கு போல் நீர் மெல்ல ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றில் கால்கள் இரண்டும் இளைப்பாறிக் கொண்டிருந்தன. தங்கத்துகள்கள் போல் மின்னும் மணல், நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது. வண்ணங்களின்றிக் கண்ணாடியில் செய்ததுபோல் இருந்த அவை மெல்ல அவனது கால்களில் இருந்த அழுக்கையும், ஊறிக்கிடந்த இறந்த தோல் செதில்களையும் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவன் அதையெல்லாம் உணர்ந்தானில்லை. எப்படியேனும் கொமரி,  கடநங்கையிடம் ஏதாவது எடுத்துச் சொல்லி அவளை அமைதிப் படுத்தியிருப்பாள். ஒருவேளை கடநங்கை உடன்படவில்லை எனில் என்ன செய்வது? செய்த தவற்றின் பொருண்மை இப்பொழுதான் அவனுக்கு உறைக்கத் தொடங்கியது.

நல்லூரிலிருந்து கிழக்கே, கடுக்காய்க்கரைப் பொற்றைக்கு இடையே வளமையான வயலொன்றைப் பெரும்பாடுபட்டுத் திருத்தி வைத்துக் கொண்டான். நாஞ்சில் பொருனின் நாடு அது. நெல் குதிர்ந்து விளையும் மண். ஆண்டு முழுவதும் வற்றாதப் பழையாற்றின் வண்டல் கொடை. நல்ல விளைச்சல் எடுக்கும் ஆவலில் அடிக்கடி சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டி வந்தது. வயலோரம் சிறு குடில் ஒன்றைக் கட்டிக்கொண்டு சமைத்து உண்டு வேளாண்மையைச் செய்து வந்தான். ஓரிரு மாதங்கள் கழிந்த பின்பு  அந்தச் சிற்றூரில் இருந்த பெண்ணோடு காதல் பிறந்தது. அடிக்கடி இங்கே வரலானான். அவனுடைய தோழி முத்துச்செல்லி எத்தனையோ முறை சொல்லிப்பார்த்தாள் இவன் கேட்பதாயில்லை. ஒருநாள் யாரோ பார்த்து அவன் துணைவி கடநங்கையிடம் சொல்லிவிட்டார்கள். அவள் கடுஞ்சினம் கொண்டாள்.

இது தெரிந்து ஊடல் கொள்ளுவாள், பின்பு அமைதியடைவாள் என்று சேந்தன் எண்ணியிருந்தான். ஆனால் அப்படி நடக்கவில்லை. இருவருக்கும் சண்டை வந்தது. அவனோடு பேசுவதையே நிறுத்திவிட்டாள். சேந்தனும் நல்லூரிலிருந்து கிளம்பி வயலுக்குப் போகாமல் இங்கே ஆற்றின் கரையில் குழப்பத்துடன் கொமரியின் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறான்.

கொமரி சேந்தனின் தோழி. அவன் மனைவிக்கும் நெருக்கமானவள். இவன் இனி தவறிழைக்க மாட்டேன் என்று கூறியதை கடநங்கையிடம் எடுத்துச் சொல்லி அமைதிப் படுத்த கேட்டுக் கொண்டான். அவளும் போயிருக்கிறாள்.

பெரிய வீடாக இல்லையென்றாலும் செம்பருத்திச் செடிகள் நிறைந்த சிறு முற்றம் செந்தனின் வீட்டில் இருந்தது. மூலையில் முல்லைக் கொடி ஒன்று படர்ந்திருந்தது. அதையொட்டிய படிப்புரையின் கீழே சிறு பலகையிட்ட கோழிக்கூட்டை சாத்திக் கொண்டிருந்தாள் கடநங்கை. அவளருகே வந்து நின்ற கொமரி...

"சேந்தன் செய்த தவறுக்கு வருந்துகிறான் தெரியுமா?"

"ம்"

"ஏனோ நிறைய பேர் செய்வது போல இவனும் செய்துவிட்டான், நீ அவனிடம் சண்டையிட்டது சரிதான் நங்கை"

"ம்"

'ஆனால் அதை உணர்ந்து மாறிவிட்டான் போல. ஆற்றங் கரையில் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான். வா என்றேன். அவள் சினம் தணியட்டும் என்றான். அதற்காக நீ அவன் வந்தவுடன் அமைதியாக இருந்து விடாதே. அவனிடம் ஊடல் கொள். குழம்பி நிற்கட்டும் அவன்"

இதைக் கேட்டதும் கடநங்கைக்குச் சினம் உச்சிக்கு ஏறியது. 

"இங்கே பார் கொமரி. துணையின் பெறவேண்டிய நலங்கள் தொலைந்து போனாலும், அதனால் என் உடல் நலிவுற்றுச் சாய்ந்தாலும், என் உயிரே போய் விடுவதாக இருந்தாலும் பரவாயில்லை இப்படி மட்டும் என்னிடம் பேசாதே தோழி. யார் அவன் எனக்கு அன்னையா? அப்பனா? அவர்களென்றால் காக்க வேண்டியது கடமை. இவன் யார்? அவனிடம் ஊடல் கொள்ள கடுகளவேனும் அவன் மீது எனக்கு அன்பு இருக்க வேண்டுமல்லவா?  என் உள்ளம் அன்புகொள்ளாத ஒருவனிடம் நான் எப்படி ஊடல் கொள்வது?"

"இல்லை... நங்கை"

"கொமரி.. அவனுக்காகப் பரிந்து பேசாதே. இல்லை போய் விடு." என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள் நங்கை. 

சேந்தனிடம் என்ன சொவது என்று தெரியாமல் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருக்கிறாள் கொமரி. அவள் வருகைக்காகக் காத்திருக்கிறான் சேந்தன். பழையாறு அதன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அள்ளூர் நன்முல்லை என்ற பெண் எழுதிய இந்தப் பாடல் குறுந்தொகையில் இருக்கிறது. 

பாடல் கீழே

குறுந்தொகை - 93 - மருதம் - அள்ளூர் நன்முல்லையார்
==================================================

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.

அருஞ்சொற்பொருள்
=====================
உரையல் - சொல்லுதல்
அத்தன் - தந்தை
புலவி - ஊடல்