Sunday 28 June 2020

பட்டினப்பாலை – சிறப்புப் பாயிரம்




பொய்யாக் காவிரிப் புகுவாய் நின்று
எய்ப்புநீக் குறந்தை யொய்யெனச் சேர,
தையலாள் இழையொழிய, தனியிருத்தித் தான்
வெய்கானம் கடக்க விழையா அறிவன்,
மெய்யுரை சொன்ன கடியலூர்க் கண்ணன்,      - 5

வற்றா நீரும், வளநாட்டுச் சிறப்பும்,
பட்டினப் பெருமையும், பகல்விளை யாட்டும்,
கட்டாண் மாக்கள் களரியில் பொருதலும்,
நட்டணை யிலார் நள்ளிரவுத் துஞ்சலும்,
கொட்டகா ரத்து ஏற்றமும் இறக்கமும்,          -10

செவ்வேள் வெறியாடுஞ் சீர்மிகுந் தெருக்களும்,
வெவ்வேறு வணிகர்தம் வெளிப்படு கொடிகளும்,
வெவ்வினை பயிலா வேளாண் வாழ்க்கையும்,
அவ்வழி நின்றநல் லறவணிக நேர்மையும்,
செவ்வனம் பன்மொழி செப்பு மொக்கலும்,       -15

அண்டர்க் கொடுஞ்சிறை வண்மதி லேறி,
பண்டுடைத் தாயம் பழுதின்றிப் பெற்று,
முண்டுபகை வேந்தர் முடிகீழ டக்கி,
பண்கெழு நாட்டின் பல்வளம் பெருக்கி,
எண்திசைப் பேரெழ எழுந்த மாவளவன்,         -20

கோயில் சிறப்பும், குடும்பம் நிறுத்தலும்,
வாயில், முற்றம், வயவர் காத்தலும்,
ஏயின் கேட்க ஏறுபோல் மன்னரும்,
காயல் சிறப்பும், கவினுறு பட்டினமும்,
தாயோ லையென வெழுதித் தந்தநல்           -25

பட்டினப் பாலை, படித்து வுணர்ந்து,
கொட்டிக் கிடக்கும் குடியுயர் வாழ்க்கை,
முட்டாச் சிறப்பின் முன்னோர் வணிகம்,
தட்டாச் செய்யுள், தண்டமிழ் யாப்பு,
அட்டியின் சுவையென் ருந்திச் சுவைப்பீரே.   -30

(நிலைமண்டில ஆசிரியப்பா)

28-06-2020

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்