Thursday 20 September 2018

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1


 
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
இன்று எங்கள் வீட்டில் "நாள் கருது" ஆதலால் இன்று காலை மட்டும் என் பேரனுக்கு விடுப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம், 

இன்று எங்கள் வீட்டில் "புத்தரிசி" ஆதலால் இன்று மதியம் மட்டும் என் பேரனுக்கு விடுப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம் 

என கிறுக்கலான கையெழுத்தில் ( தெக்குப் பள்ளத் தெரு சந்தியில பரப்பிய மணலில் சுட்டுவிரல்கொண்டு எழுதிக் கற்றுக் கொண்டதாம் )  எழுதிக் கையொப்பமிட்டு என் தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள்  1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் சொல்லும் போது "இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா" என்று சிரிக்கிறான்.  ஆனால் கொடுத்தார்களே, அது உண்மைதானே.

இந்தப் பேச்சு ஆரம்பித்த இடம் சுவையானது. அண்மையில் கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பேரியாற்றின் கதை தேடுகையில் சேரமான் கோதையும், பிட்டங்கொற்றனும், பொலந்தார் குட்டுவனும் எதிர்ப் பட்டார்கள். அப்பொழுது என் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சென்ற பிட்டங்கொற்றனே இதற்குக் காரணம். புறநாநூற்றின் 168 வது பாட்டு பிட்டங்கொற்றனை கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் பாடியது.  புறநாநூற்றின் எல்லா படல்களுக்கும் கால வரையறை செய்யப்படவில்லையென்றாலும் இந்தப் பாடல் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு மறுப்புரை எதுவும் காணக்கிடைக்கவில்லை. 

"அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி  - 5

நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
 உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி  -10

வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல் – 15

நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் – 20
பாடுப வென்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே". (புறநாநூறு -168) 
குதிரைமலையின் ஒரு அருவி

அருவி பேரிரைச்சலுடன் நீரூற்றும் அகன்றவிடத்து மூங்கில்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றின் மீது மிளகு கொடிகள் படர்ந்து நிற்கின்ற மலைச் சாரலில் காந்தள் பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன.  காந்தட் செடியின் கொழுத்துச் செழித்தக் கிழங்கை காட்டுப்பன்றிகள் தன் கூட்டத்தோடு வந்து கிண்டித் தோண்டியெடுக்கின்றன. வெள்ளை வெளேரெனக் கிழங்கு மிளிர்கின்றதாம். அவை கிளறிவிட்டுச் சென்ற மண் ஏர் பூட்டி உழுதது போல் இருக்கிறது. 
 
"நன்னாள் வருபத நோக்கி". பண்டைய தமிழர் மரபில் ஆட்டை தொடக்கமும், வேளாண்மைக்கான பாட்டமும் ( விதைப்புக்கான நாட்களும் ) பறையறைந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இவை பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கலாம். அப்படியொரு  நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து, குறவர் தாம் உழாமல், பன்றிகள் கிளறிவிட்டுப் போன நிலத்தில் சிறிய தினையை விதைக்கிறார்கள். அது பெரிய தோகை விரித்து விளைந்து பருத்தக் கதிர் முற்றிக் கிடக்கிறது. அந்தப் புதுவிளைச்சலை அறுத்து, புதிது உண்ணவேண்டி திட்டமிட்டு வேலை நடக்கிறது.

முந்தைய நாள் மான் இறைச்சி வேகவைத்த,வெளிப்புறம் கழுவப்படாமல்  வானின் கருவண்ணத்தில் இருக்கிற, புலால் நாறும் பானையில் காட்டுப் பசுவின் தீஞ்சுவைப்பால் கறக்கப்பட்டு நுரையுடனே அடுப்பிலேற்றப் படுகிறது. அதனுடன் தினையரிசியும் இடப்படுகிறது. விறகாகச் சந்தன மரத்துண்டுகள்
எரிக்கப்படுகின்றன. சிறிது நேரத்தில் பாலும் தினையும் சேர்ந்து வெந்த புன்கம் (பொங்கல்) சமைக்கப் பட்டுவிட்டது.

அங்கே ஒரு அழகிய வெளி. "குளவி" தண்புதல் வளர்ந்து கிடக்கிறது. மிகச் சிறந்த நறுமணம் கொண்ட அதன் மலர்கள் பூத்துக் கிடக்கின்றன, இந்தக் குற்றுக் கொடிவகையச் சேர்ந்த தாவரத்தின் மலர்களிலிருந்து வீசும் மணம் புலவு நாற்றத்தைக்கூட விலக்கிவிடும் என்கிறது அகநாநூற்றின் 268 ம் பாடல். அந்தப் புதரின் மீது படர்ந்து கவிந்து கிடக்கிறது "கூதளம்" எனும் கொடி. அதுவும் பூத்துக் குலுங்குகிறது.  கூதளம், நறுமணம் கொண்ட குளவியின் மேல் படரும் என்பதை புறப்பாடலொன்று 
 
 "நாறிதழ் குளவியொடு கூதளம் குழைய" (புறம் 380)  என சான்று பகர்கிறது. அப்படியொரு அழகிய நறுமணம் நிறைந்த முற்றத்தே வந்து அமர்கிறான் பிட்டங்கொற்றன்.

அவன் "ஊராக் குதிரைக் கிழவ"ன். ஊராக்குதிரை என்பது குதிரை மலை. 
குதிரைமலை
(இன்று அந்தப் பகுதி "குதிரே முக்" என அழைக்கப்படுகிறது.
குதிரை மூக்கு என்ற பழைய தமிழ்ப் பெயருடன் தென் கன்னடம் மாவட்டத்தில் உப்பினங்காடி வட்டத்தில் வழங்கி வருகிறது. இந் நாட்டில் மேற்கரை என்னும் தமிழ்ப் பெயர் மர்க்காரா என்றும், வடகரை, படகரா என்றும் வானவன் தோட்டி, மானன்டாடி என்று உருத்திரிந்தும் வழங்குகின்றன). பிட்டங்கொற்றன் குதிரைமலைத் தலைவன். சேரமான் குட்டுவன் கோதையின் படைத்துணைவன்.  பெருவீரன். பெருங்கொடையாளன்.

முற்றத்தில் இரும்பை அடித்து வடித்துச் செய்யப்பட்ட "வடிநவில் அம்பு" தோளில் சாற்றிய விற்போர் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே நறைக்கொடியின் நாரில் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலை அணிந்து, கூரிய வேல் தாங்கி அமர்ந்திருக்கிறான் பிட்டங்கொற்றன். குளவியும், கூதளமும் பூத்துக் குலுங்கிய கார்காலத்தில் (ஆவணி, புரட்டாசி) வந்த விருந்தினரும், குதிரைமலை மக்களும் சுற்றியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும்  கொழுத்துக் குதிர்ந்த வாழையின் அகன்ற இளைகள் போடப்படுகின்றன. அதிலே தீஞ்சுவைப் பாலில் வேவைத்த தினைப் புன்கம் சுடச்சுட விளம்பப் படுகிறது. எல்லோரும் மகிழ்வுடன் உண்கிறார்கள். பிட்டங்கொற்றன் முகமலர்ச்சியோடு அமர்ந்திருக்கிறான்.கதப்பிள்ளைச் சாத்தனாரும் புன்கம் அருந்தியிருப்பார் போலும். அகமகிழ்ந்து பாடுகிறார்.

கையால் அள்ளியள்ளி வழங்கும் கொடைத்தன்மையுடைய கொற்றனே, உன் புகழை உலகத்து எல்லையுள் "தமிழகம்" கேட்க, பொய்யுரைக்காத நாவுடைய புலவர்கள் வாழ்த்திப் பாடுவர். அதைக் கேட்டு கொடாத வேந்தர் நாணுவர் என்று வாழ்த்திப் பாடுகிறார்.

அடடா. ஒரு பாடல் எத்தனைச் செய்திகளைத் தாங்கி நிற்கிறது. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகள் தாண்டியும் நிற்கின்ற ஒரு பண்பாட்டு நீட்சியை, எம் நிலத்தின் பரப்பை, நிலத்தின் பெயரை, உணவை, இயல்பை எடுத்தோதிக்கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் வரலாற்றின் அறிவுகொண்டு நோக்காமல், பள்ளிப் பாடங்களில் முழுமையாக வைத்திராமல், பண்பாடுகளின் வேர்களைத் தெரியாமல் நாமும் வளர்ந்து நம் மக்களையும் வளர்க்கிறோம். எங்கே தொலைந்தது நம் அறிவு. பண்பாட்டுக் கூறுகளைச் சடங்குகளுக்குள் புகுத்திச் சிதைத்து வைத்திருக்கிறோம்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் வீட்டில் நடைபெறும் "நாள்கதிரும்" "புத்தரிசியும்". அது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். 1970 முதல் 1980 வரை எல்லோரையும் போல எனக்கும் மறக்கமுடியா பொற்காலம். 

 "வாற வெள்ளியாச்ச நெறைக்கதுக்கு நல்லநாளு, அண்ணைக்கு நெறச்சரலாம்" என்று தாத்தா அப்பாவிடம் சொல்லிவிடுவார். சித்தப்பாமார்களும், சித்திமார்களும் அவர்களின் பிள்ளைகளும் வியாழக்கிழமை அன்றே வந்துவிடுவார்கள். (இரண்டு சித்தப்பாக்களும் வேலையிலிருந்தவர்கள். அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வருவார்கள்). அன்று இரவில் சித்தி, அக்கா, தங்கை எல்லோரும் சேர்ந்து பச்சரிசியை ஊறவைத்து அரைத்தெடுத்த மாவில், தாத்தாவின் பழைய கைத்தறி வேட்டியிலிருந்து கிழித்தெடுத்த துணியை முக்கி வீடெங்கும் கோலமிடுவார்கள். (முற்றம் முழுவதும் நிறைந்திருந்த அந்த ஒற்றைக் கோலத்தைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது).
 
வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே எங்கள் எல்லோரையும் எழுப்பி குளிக்கச் சொல்வார்கள். பின்பு வயலுக்குச் செல்வோம். வரப்பில் வளர்ந்திருந்த சிறு புற்கள் கால் விரலிடுக்கில் கிச்சுகிச்சு மூட்டியதை, அவற்றின் மீதிருந்த சிறு நீர்த்திவலைகள் காலில் குளிரூட்டியதை இன்னும் மறக்கமுடியவில்லை. 
தாடகை மலை
நல்ல விளைந்த வயலின் வரப்பில் எங்களையெல்லாம் நிற்கச் சொல்வார்கள்.  தாத்தா ஒரு மூலையில் (வடகிழக்கு மூலையென நினைப்பு) இறங்கி சூரியனை வணங்கிவிட்டு கதிரருவாள் கொண்டு அறுக்கத் தொடங்குவார். இரண்டு மூன்று கை கதிர் அறுத்தவுடன் "இனி நீங்க அறுங்கப்பா" என்று கரையேறிவிடுவார். இரண்டு மூன்று பேர் தொடர்ந்து அறுக்கத் தொடங்குவார்கள். தாத்தா போதும் என்று சொல்லும் வரை கதிரை அறுத்து சிறு சிறு கட்டுகளாகக் கட்டிவைப்பார்கள். பின் அறுத்த தாளின் மீது வாழையிலையை விரித்து வீட்டிலிருந்து கொண்டுவந்த சாணத்தை பிடித்துவைத்து, அதைச் சுற்றிவருவார் தாத்தா. பின் கையில் கதிர் கட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு அப்பாவை பேர்சொல்லி அழைப்பார். அவரும் சென்று தாத்தாவிடமிருந்து அந்தக் கட்டைப் பெற்றுக்கொள்வார். பின் சித்தப்பாமார்கள் பெரியவர்கள் என மூப்பு அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கதிர்க்கட்டு கிடைக்கும். எங்களுக்கும். எனக்கு ஏழெட்டு வயதாய் இருந்தபோது நெற்கதிர் என் நெஞ்சளவு உயரம் இருந்தது. கையில் பிடிக்கையில் நெல்மணிகள் தரையில் உரசாமல் இருக்க யாரேனும் முன்பக்கம் ஒரு முடிச்சிட்டுத் தருவார்கள். அத்தனை உயரமான நெற்கதிர்களை இப்பொழுது இணையத்தில் படங்களாய் மட்டுமே பார்த்துக் கொள்கிறேன்.
  
வயலிலிருந்து குளத்தங்கரை வழியாக வருவோம். பள்ளத் தெரு இறக்கத்தில், தலைச் சுமட்டில் கொண்டுவரும் ஏராளமான கட்டுகளை சுமந்து வந்தவர்கள் கோயிலை நோக்கி இறங்கிவிடுவார்கள். நாங்கள் நடந்து  தெருவழியாய் வீட்டுக்கு வரும் போது ஒரு திருவிழாவின் மகிழ்ச்சி மனதில் ஓடும். வீட்டின் "அரங்கில்" கொண்டுவந்த கதிர்களை வைத்துவிட்டு, ஏதாவது தின்றுவிட்டு கோயிலுக்குச் செல்வோம்.
குலச்சாமியல்ல, அது ஒரு பிள்ளையார் கோயில். (ஏன் என்பதற்கு தனியாக பத்து பக்கம் எழுதவேண்டும்).

கோயிலில் படையலாக வைக்கப்படும் பாயாசத்தில், அறுத்துவரப்பட்ட புதுக் கதிரிலிருந்து நெல்மணிகள் உதிர்க்கப்பட்டு, கையால் தேய்த்து உமி நீக்கிய புதிய அரிசி ஒரு கையளவு சேர்க்கப்படும். இன்னொரு படையல் சருக்கரைப் பாகு சேர்த்து செய்யப்பட்ட அவல். வழிபாடு முடிந்து கோயிலில் இருந்தும் திரும்பும் அனைவருக்கும் படையல் பொருட்களும், ஒரு கதிர் கட்டும் வழங்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவோம். 

நாள்கதிர் பானை -பேராசிரியர் தங்கப்பன், கடுக்கரை
 
வீட்டில் அரங்கினுள் ஒரு பானை இருக்கும். "நாள்கருதுப் பானை" என்றே சொல்வோம். அதில் ஒவ்வொருவராய் (வயது மூப்பின் அடிப்படையில்) புதுக்கதிரில் ஒன்றிரண்டை எடுத்து வைப்போம். பின் "களம்", பத்தயப் புரை" என்று அறுவடை மற்றும் நெல் சேமிப்புத் தொடர்பான இடங்களில் கதிர் கட்டுவோம். இதையே "நாள்கருது" என்றும் "நிறை" என்றும் அழைப்போம்.

இது போன்றதொரு நிகழ்வே "புத்தரிசி" எனப்படும் புது அரிசி சமைக்கப் படும் நாள். விடுப்பு, உறவுகள், கோலம், மகிழ்ச்சி எல்லாம் "நாள் கருதின்" வழமை போலவே இருக்கும். 

அறுவடை முடிந்து ஒரு நாள் இரவில்  "புதுநெல் அவிப்பு" நடக்கும். ஆச்சி முருகண்ணன், வேலப்பண்ணன் இவர்களோடு விழித்திருந்தால் ஒரு "சுக்காப்பி" கிடைக்கும். "வா கீறீட்டான்னு பாரு முருகா" என்று சொல்கேட்டு முருகண்ணனோடு நானும் வாய் கீறியதைப் பார்த்திருக்கிறேன். (நெல் வேகும் மணமும், வாய் கீறிய அதன் பருவத்தையும் பார்க்கமுடியாமலேயே போய்விட்டது பெரும் இழப்புதான்). 

அந்தப் புழுங்கலைக் குத்தி அரிசியெடுத்து "புத்தரிசி" சமைப்பார்கள். அன்று கண்டிப்பாக வாழையிலை தான் விளம்புவார்கள். எல்லாக் கறிகளும் வைக்கப்பட்டிருக்கும். "புத்தரிசி" அன்று முதலில் விளம்பும் சோற்றில் தேங்காயும், சருக்கரையும் கலந்து சாப்பிடுவது வழக்கம். மொத்த குடும்பமும் ஒன்றாய் அமர்ந்து உண்போம். அன்று "கழியடைக்காய்" செய்வார்கள். அது "கடையடைக்காய்", "சீடை" என்றும் அறியப்படும்.

என்ன வியப்பு. "வான்கே ழிரும்புடை கழாஅத" பிட்டங்கொற்றனின் பானை போல இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாட்டின் நீட்சி என் இலையில் விளம்பப்பட்டிருக்கிறது. இடையே வந்துதித்த சாதி, மதக் தாக்கங்களைத் தாண்டி சில அடிப்படை பண்பாட்டுக் கூறுகள் இன்னும் நம் கருமயப் பதிவுகளில் இருக்கின்றன. இந்தத் தாக்கங்களிலிருந்து விடுபட இவை ஒருவேளை உதவலாம்.

மாந்த ஆய்வியலில் நான்கு கூறுகளில் பண்பாட்டியல் முகாமையானது. அதன் மற்றைய கூறுகளான தொல்லியல், சமூகவியல் ஆய்விற்குக் கூட பண்பாட்டியல் உதவும். பண்டு இருந்த மக்களின் கொடுக்கல்,வாங்கல் முறைகளும் அவர்கள் மதிப்பு மிக்கதாய்க் கருதிய பொருட்களையும் அறிதல் பண்பாட்டியலின் பணி. பண்பாடுகளை ஆராயாமல் மாந்தவியலை ஆராய முடியாது என மாந்தவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நான் ஆய்வாளன் இல்லையெனினும் இந்த நோக்கில் நண்பர்களிடமும், உறவுகளிடமும் கேட்டேன். முகநூல் வழியாகவும் வேண்டுகோள் விடுத்தேன். நிறைய நண்பர்கள் வேறு வேறு ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் தொடர்பு கொண்டார்கள். அவர்களிடமிருந்து கிடைத்தவை "அறிவும்", "வியப்பும்". அவற்றை அப்படியே கீழே தருகிறேன். 

ஆனால், அருள் கூர்ந்த்து நாளை வரைக் காத்திருங்கள். நன்றி.
 
என்ரென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
20/09/2018.

2 comments:

  1. எங்கெங்கோ மேய்ந்து கடைசியில் உங்கள் பக்கத்திற்கு வந்த பின்னர் வெளியே செல்லும் மனமில்லை. இனி இங்கேயே நிறைய மேய்வதாக உத்தேசம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நிறை குறைகளைத் தெரிவியுங்கள். நன்றி

      Delete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்