Tuesday, 20 May 2025
மரண வாயிலில் இருந்து...
Monday, 19 May 2025
புத்தகத்திற்கு இப்படியொரு உவமை!
பொதுவாகவே புத்தகம் எனப்படுவது கருத்தாழம் மிக்கதாக இருக்க வேண்டும். அதன் செறிவு படித்து முடித்த பின் உள்ளத்துள் பொருள் சுரந்து அறிவை விரிவு செய்ய வேண்டும்.
அதற்காக; சிக்கலான சொற்களால் எளிதில் படிக்க இயலாமல் இருக்கக் கூடாது. பல புத்தகங்களின் பொதுப்பொருள் படிக்க எளிதாகவும், அதன் உட்பொருள் உணர்ந்து உள்வாங்க அரிதாகவும் இருக்கும்.
இந்தக் கருத்துக்கு ஓர் உவமை சொல்லி எழுதப் பெற்ற நாலடியார் பாடல் ஒன்று வியக்க வைத்தது. உலகியல் அறிந்து எழுதிய பாடல் இது.
பொருளுரை: பெறத்தக்கப் பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேம்போக்கான நெறிப்படி படிப்பவர் எல்லோருக்கும் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.
பொது மகளிர் விரும்பி அதைச் செய்யவில்லை என்பதையும், அவர் நெஞ்சுக்குள்ளே பல கனவுகள், மனக்காயங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. நூலின் உட்கருத்தை அறிய நூலாசிரியரின் போக்கிலேயே, அவரின் காலத்திற்கே சென்று படிக்க வேண்டும். அதுவே சரியான நெறியாகும்.
செவ்விலக்கியப் பரப்பில் பாக்கள் மிகுதி. பல குறட்பாக்களின் வழியாக இந்த துய்த்தலின்பத்தை வள்ளுவர் அடிக்கடி வழங்குவார்.
பொதுமகளிர், பரத்தை போன்ற சொற்பயன்பாடுகளில் சிலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், “மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி: (அகநானூறு 146). என்ற வரியிலிருந்து பரத்தன் என்ற சொல்லும் வழக்கிலிருந்தமை அறிய முடிகின்றது.
Wednesday, 7 May 2025
இயலுமா?
மலர்கிறோம் என்பதை
மலர்கள் அறியுமா?
பாய்கிறோம் என்பதை
அருவிகள் உணருமா?
ஓடும் ஆறுகள்
ஓய்வினைத் துய்க்குமா?
தேங்கிய ஏரிகள்
ஓடிட எண்ணுமா?
நூறு கூறாய் நொடியைத் துணித்த,
இம்மியளவு இடைவெளியில்;
உள்ளில் கிளர்ந்த
மகிழ்வின் நிகழ்வை,
மறுபடியொருமுறை
மனம் பெற இயலுமா?
Saturday, 3 May 2025
கூட்டுப்புழு
இலைகளின் மீது
கவிதைகளாய்ப் படரும்
தூவானக் கண்ணாடிகளில்
முகம் பார்க்கக்
காத்துக் கிடக்கின்றன,
இலைகளின் முதுகில்
கூட்டுப் புழுக்களாய்…
பட்டாம் பூச்சிகள்.
03-05-2025