Wednesday, 1 October 2025

இனியவை 25 - சிறுகதை தொகுப்பு



கொற்றவை முன்செல்ல;

நாடாளும்
கோனுக்கு வில்லும் வாளும்,
கோன் புகழும்
பாணர்க்குப் பறையும் யாழும்,
களமாடுங்
கூத்தர்க்கு மெய்ப்பாடு எட்டும்,
காக்கும்
மருத்துவர்க்கு இலையும் வேரும்,
எமக்கோ,
கோலும் எழுத்துமே
ஆய்தம்.
===============================
இனியவை 25.
இனிய இருபத்தைந்து கதைகளின் தொகுப்பு, புத்தகமாக...
இரண்டாம் பரிசு பெற்ற எனது கதையும் இடம்பெற்றிருக்கிறது.

நேற்று கையில் கிடைத்தது.
நன்றி - Kyn Hood Productions.
01 - 10 - 2025 - ஆய்த பூசை.

தோழர் தி.மா.ச. நினைவேந்தல்


காலை நேர மேற்குவானில் வெள்ளை யானை ஒன்று தும்பிக்கையைத் தூக்கி நீர் பீய்ச்சுவது போன்ற மிகச் சரியான தோற்றம் கண்டு, குழந்தைக்குக் காட்டிவிடவேண்டுமென்று வீட்டுக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கி வந்து காட்ட முனைகையில் காற்றில் கலைந்து போன மேகத்தைப்போல காற்றோடு போய்விட்டது தி.மா.சரவணன் அவர்களின் பெருவாழ்வு. எதற்கு என்னைத் தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக ஓடிவந்தாய் என்ற கேள்வி நிறைந்த குழந்தையின் பார்வைக்கு விடைசொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் தந்தையின் நிலையில் என் போன்றோர் உள்ளம்.

சிற்றிதழ் சேகரிப்பு. பரவலாக அறியப்பட்ட செயலா என்றால்; சிலர் ஆம் என்று சொல்லலாம். பலர் இல்லையென்றும் சொல்லலாம். எதற்காக இந்த சேகரிப்பு அல்லது இந்த சேகரிப்பால் சமூகத்திற்கு என்ன நன்மை விளையும் என்று கேட்டால் பெரும் பான்மையோர் உதட்டைப் பிதுக்குகிறார்கள். அல்லது “யோசிக்க வேண்டும்’” என்று விடையிறுக்கிறார்கள். அவரோ இருபைத்தைந்து ஆண்டு காலம் இதழ் சேகரிப்பையே தன் வாழ்நாளின் முகாமையான பணியாகக் கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறாயிரம் இதழ்கள், சில அரிய நூல்கள், நாளேடுகள் என அவரது “கலைநிலா நூலகம்” இதழ்களால் நிறைந்து கிடக்கிறது. என்னதான் செய்து கொண்டிருந்தார் அவர்.