Tuesday 5 September 2017

வ.உ.சி - வாராது வந்த மாமணி




1872-09-05                       1936-11-18
இன்று பிறந்தநாள்
                                                     

            காலம் மறக்கமுடியாத தலைவர்களில் ஒருவர் வ.உ.சி. இன்றைய காலக்கட்டத்தில் அவருடைய சில முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் சமூகப்பார்வைகளை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. வெறும் கப்பலோட்டியத் தமிழனாகவே அவரை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதை விடுத்து இன்றைய காலத்தேவையோடு அவர் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த நாடு சரிசெய்யப்படாத முரண்களோடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் வ.உ.சி யின் வழியாகவும் அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் வ,உ,சி யையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். "நீட்"டி முழக்காமல் குறிப்புகளாகத் தொகுக்கிறேன் "நீட்"டைப் போல.

      வ.உ.சி இந்த நாட்டின் போக்கையும் அதன் கோர முகத்தையும் உணர்ந்தவர் என்பதை அவருடைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

        சாதியக் கொடுமையச் சாடிய வ.உ.சி 1927 சனவரி 19 ல் நடந்த திராவிடர் கழகத்தின் 18 வது ஆண்டுவிழாவில் அந்தக் கொடுமைகள் களைய "நம்மவர் கடமை" என்றத் தலைப்பில் பேருரையாற்றினார்.

         இன்றளவும் பல்வேறு இயக்கங்கள் அகற்றிட விரும்பிப் பாடாற்றிவரும் ஒரு நிலைப்பாட்டிற்கான விதையை வ.உ.சி விதைத்திருக்கிறார். அன்றைய காங்கிரசுப் பேரியக்கத்தின் சிறப்புக் கூட்டமொன்று கோவையில் 1927 சூலைத் திங்கள் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்றது. அதில் "பிராமணர் அல்லாதோர் கைகளுக்குக் காங்கிரசுப் பேரியக்கம் வரவேண்டும்" என்று முழங்கினார்.

       அதே ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தில் மாவட்டக் காங்கிரசு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவராக வ.உ.சி இருந்தார். தலைமையுரையில் "சூத்திரன்" என்ற பதம் பொது ஆவணங்களிலிருந்து கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.




        இள வயதில் துறவியாக விரும்பி தலை மழித்து மதுரை வரை நடந்து சென்று அதன் பிறகு அந்த ஆசையைத் துறந்தவர் வ.உ.சி. இதை அவரே சுயசரிதையில் குறிப்பிடுகிறார். அன்றையச் சமூகச் சூழல் அவரிடம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவருடைய பேச்சுக்கள் அன்றைய சமூகநிலையை நமக்குக் காட்டுகின்றன.

      1920 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதி காங்கிரசின் 26 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை வ.உ.சி கொண்டுவந்தார்.


1. நாடு முழுவதும் தொழிற்சங்கங்களைத் தோற்றுவித்து குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமானக் குடியிருப்பு, முழுமையான தடையற்றச் சங்கம் அமைக்கும் உரிமை.
        இந்தத் தீர்மானம் நிறைவேற அவர் நிறைய வாதிட வேண்டியிருந்தது. அடுத்த தீர்மானம் இட ஒதுக்கீடு பற்றியது.

2. பொதுத்துறையில் பணியாட்களைத் தேர்ந்தெடுக்கும் போது பிராமணர் அல்லாதாருக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

         அடிப்படையில் இந்த நாட்டின் பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதற்கான எதிர்வினைகளையும் ஆற்றியிருக்கிறார் வ.உ.சி.

         நேர்மையான தொழிற்சங்கவாதி.

         பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என முழங்கியிருக்கிறார்.

        1928 சனவரித் திங்கள் தேவக்கோட்டை மாணவர் சங்க ஆண்டுவிழாச் சொற்பொழிவில்
       "பிறப்பினால் உயர்வு தாழ்வு நமது நாட்டு வழக்கமன்று. ஆரியர் நூல்கள் தமிழில் கலந்த பின்னரே பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றக் கோட்பாடு வந்தது. ஒருவன் நம்மைப் பார்த்து தாழ்ந்தவன் என்று கூறினால், அவ்வாறு கூறாதே என்று நாம் சொல்லலாம். கேட்கவில்லையென்றால் சட்டபூர்வமாகவோ, அசட்டபூர்வமாகவோ அவன் சொல்லாதிருக்கும்படிச் செய்யலாம். பார்ப்பனரல்லாதாருடைய பணங்கள் பார்ப்பனர்களால் கவரப்படும் போது அதனை ஒழிக்கச் செய்யும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்கும் எதனையும் ஒதுக்கித்தள்ளுமாறு மனம் தூண்டுகிறது. பிதுர் கடன், சிரார்த்தம் போன்ற பெயர்களில் நடத்தப்படும் வைதீகச் சடங்குகள் பொய்யே ஆகும். நமக்குக் கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக் கொண்டு ஆராய்வோம். இதில் ஈடுபடலாகாது, விழிப்புடன் இருக்கவேண்டும். என்றெல்லாம் உரையாற்றினார்.

    நேர்மை எதுவென்று தோன்றுகிறதோ அதை நேரடியாகப் பேசும் பேராண்மை வ.உ.சி க்கு இருந்தது. காந்தியை மதித்தார். ஆனால் அவரது ஒத்துழையாமை இயக்கத்தை வெறுத்து ஒதுக்கினார். ஒத்துழையாமை இயக்கம் தமிழர்களிடம் கோழைத்தன்மையை உருவாக்கிவிடும் என்று தீர்க்கமாக முழங்கியவர்.

     பெண்களுக்குக் கல்வி வேண்டும் என முழங்கியவர்.

  அவர் அமைத்தக்  கப்பல் கம்பெனி 1882 கம்பெனிகள் சட்டப்படிதான் அமைக்கப்பட்டது. 10 லட்ச ருபா முதலீடு. ரு 25 வீதம் 40000 பங்குகள். ஆசியாவைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம். ( இது அறியாமல் நிறைய முகநூல் பதிவுகளில் வ.உ.சி க்கு அவர் உதவினார், இவர் உதவினார் என்று நிறையச் செய்திகள்).

          கம்பெனியில் முக்கிய பொறுப்புகளை பிறருக்குக் கொடுத்துவிட்டு உதவிச் செயலாளர் பொறுப்பை வ.உ.சி எடுத்துக் கொண்டார்.

         ஆனால்..... கம்பெனியின் நட்டம், சிறை, கொடுமைகள் அனைத்தையும் அவர் ஒருவரே ஏற்றுக்கொண்டார் செம்மல் வ.உ.சி.

     
  
     அவர் காலத்தில் ஊடாடிக்கொண்டிருந்த பிரச்சனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை உணர்கிறோம். காரணத்தையும் கருவிகளையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார் செம்மல் வ.உ.சி, தொடர்வோமா?
    
       

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்