Friday 29 June 2018

வடு...

வடு என்றால் தழும்பு என்று பொருள் தருகின்றன அகராதிகள்.அதாவது காயமோ அல்லது புண்ணோ நன்றாக ஆறியபின் அது ஏற்படுத்தும் தழும்பையே வடு என்கின்றன. நாமும் அந்தச் சொல்லை அதே பொருள்பற்றியே சொல்லிவருகிறோம். ஆனால் வள்ளுவர் மட்டும் எப்படி ஆறாத வடு என்று சொல்லிப் போந்தார்? என்றச் சிந்தனையோடு நாம் வகுப்பறைகளிலும், மேடைகளிலும் அடிக்கடி கேட்ட, மிக எளிதாய் மனதில் நிறுத்திவைத்திருக்கிற ஒரு குறளைத் தேடிப்போனேன்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

என்றக் குறள்தான் அது. தீயினால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். தீய சொற்களால் ஏற்பட்ட புண் ஆறாது. என்ற எளிய விளக்கமே போதுமானதுதான். சொல்லப்போனால் திருக்குறளில் காணப்பெறும் எளிமையான குறள்களில் இதுவும் ஒன்று. ஆனால் "ஆறாதே வடு"  என்பதுதான் இந்தக் குறளுக்குள் நம்மை இழுத்து மூழ்கடிக்கிறது. சொல்விளக்கம் அதிகம் தேவைப்படாத குறள் இது.


உடம்பில் நெருப்புப் பிடித்து தீக்காயம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நெருப்பு சுடுகிறபோது பெரும் வேதனையைத் தரும். புண்ணாகும். புண்ணின் அளவைப் பொறுத்து மருந்திட்டோ அல்லது இயல்பாகவோ அந்தப் புண் ஆறிவிடும். சில வேளைகளில் தீக்காயமும் வடுக்களை ஏற்படுத்தும். தீ திசுக்களை எரித்து தீய்த்துவிடுகிறபோது பெருங்கொடுமையை அது ஏற்படுத்தும். அதனால் உண்டாகும்  வடுவோ அதனினுங் கொடுமை. நாம் இதை நிறையப் பார்த்திருப்போம். எனில் தீயினாற் சுட்டாலும் வடு வரலாம். ஏனெனில் ஆறிய புண் தான் வடு.

நாம் ஒருவரை கடுஞ்சொல்லால் தாக்கிவிடுகிறோம். அது அவரது உள்ளத்தில் புண்ணை உண்டாக்கி விடுகிறது. அந்தப் புண் ஆறாது என்று வள்ளுவர் சொல்லியிருந்தால் இன்னும் எளிதாய் இருந்திருக்குமே. ஆனால் அவரோ வடு என்கிறார். அப்படியென்றால் நாவினாற் சுட்ட இந்த வடுவும் ஆறித்தானே போயிருக்க வேண்டும்.

நான் குறளுக்கு உரையெழுதும் நோக்கில் வரவில்லை. குறள் என்பது ஒரு பேரறிவுவாழ்க்கையின் சாறு என்று உணர்கிறேன். அந்தச் சாற்றை பிழிந்தெடுக்க வள்ளுவர் பயன்படுத்தும் சொல்லாட்சியைக் கண்டு பெருவியப்போடு நிற்கிறேன். அந்த வியப்பின் துளிகளை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே. இப்பொழுது குறளுக்குள் போகலாம்.

நமக்குத்  தீயினால் எற்பட்ட வடு இருக்கிறது என்று கொள்வோம். அந்தத் துன்பம் நிகழ்ந்து ஆண்டுகள் பலவும் கடந்துவிட்டது. இப்பொழுது தீப்புண் ஏற்பட்ட அன்று நாம் அடைந்த வலியை, வேதனையை அப்படியே மீண்டும் நினைவு படுத்திவிட முடியும் என்று எண்ணுகிறீர்களா? கடினம் தான். இது உடலியற்கை. அந்த வடு வெளியில் தெரிந்தாலும் நம்மால் முற்றுமுழுதாக அந்த வலியை மீட்டுணர முடியாது. உள்ளத்தில் அந்த வலியின் பொருண்மை குறைந்துவிடும் அல்லது இல்லாமலேயே போய்விடக்கூடும். ஆம், தீப்புண் ஏற்படுத்திய புண்ணின் வலி "உள்ளாறும்".

ஒரு கடுஞ்சொல்லோ, பழிச்சொல்லோ, சிறுசொல்லோ நம்மைக் காயப்படுத்தும் போது அந்தப் புண் உள்ளத்தில் உண்டாகிறது. தீயினால் உடம்பில் காயம் ஏற்படும் போது, காயம்பட்ட இடத்தைத் தவிர ஏனைய உறுப்புகள் அதனதன் வேலைகளைச் செய்துவிடும். அதில் பெருந்தடங்கல் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் உள்ளம் புண்ணாகிறபோது மொத்த உடலுமே தன்னிலை தடுமாறக்கூடும். காலம் ஒருவேளை அதை மறக்கச்செய்யலாம். ஆனால் எப்பொழுதேனும் அந்த நினைப்பு வரும் போதோ அல்லது சொன்னவரைப் பார்க்க நேரும்போதோ மீண்டும் அதே வலி நம் உள்ளத்தில் எழும். சிலருக்கு வலி மிகும்.

விந்தையைப் பாருங்கள். புண் நம்மிடம் இருக்கிறது. வடு இன்னொருவராய் அல்லது இன்னொரு சொல்லாய் இருக்கிறது. தீ ஆயுதமாகும் போது வடு அந்த ஆயுததின் மீது படிவதில்லை. ஆனால் நாக்கு ஆயுதமாகும் போது, புண்பட்டவரை விடுத்து வடு ஆயுதத்தின் உரிமையாளர் மீதே படிந்துவிடுகிறது. அந்த வடுவைப் பார்கிற போதெல்லாம் அல்லது எண்ணுகிற போதெல்லாம் காயம்பட்டவருக்கு வலி ஏற்படுகிறது. ஆம் உடலில் ஏற்பட்ட வலியை உள்ளம் மறக்கலாம். உள்ளம், தானே கொண்ட வலியை எப்படி மறக்கும்?

நினைவிற்கொள்ளுங்கள்.அடக்கமுடைமை அதிகாரத்தில் வரும் இந்தக் குறள் காயம் பட்டவருக்காகச் சொல்லப் பட்டதில்லை. காயப்படுத்துபவருக்காகச் சொல்லப்பட்டது. யாரையும் சொற்களால் காயப்படுத்தாதீர்கள். வள்ளுவர் சொல்கிற வடுக்களைச் சுமந்து திரியாதீர்கள். பெருமை கொள்வதற்கு அவை விழுப்புண்களல்ல.
----------------------------------------------------

சில செய்திகள்

நாவலர் சோமசுந்தர பாரதியார்  உரை செய்கிறபோது "ஆறுதல் வடுவின் தன்மையன்று. புண்ணின் தன்மையே. ஆகவே ஆறாது என்று கொள்ளாமல் மாறாது என்று கொள்ளவேண்டும். நாவினால் சுட்டு அதனால் உண்டாகிய புண் ஆறியும் வடுவானது மாறாது நிலைத்திருக்கும். இதை நோக்கியே மாறாது என்றார் வள்ளுவர்".. இவர் உள்ளாறும் + மாறாதே என இக்குறளைப் பிரித்து நாவினால் சுட்ட வடு (தழும்பு) 'எப்பொழுதும் மாறாமல் நிலைத்திருக்கும் எனப் பொருள் கண்டுள்ளார். மற்றவர்கள் உள்ளாறும் + ஆறாதே எனப்பிரித்து உரை கண்டிருக்கிறார்கள்.


----------------------
வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிய உரையில் இக்குறளில் ஒரு பாடபேதம் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். 

"தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
வாயினாற் சுட்ட வடு. 

வாயினாற் என்பது எதுகையும் மோனையும் ஒத்துத் தொடையின்பம் பயத்தல் காண்க. அன்றியும், வாய் என்பது ஆசிரியர் அடிக்கடி வழங்கும் சொற்களில் ஒன்று. ஆகலான், "வாயினாற்" என்பதே ஆசிரியர் பாடம் எனக்கொள்ளப் பட்டது."
வ.உ.சி,  ஆசிரியர் என்று குறிப்பிடுவது வள்ளுவரை.

---------------------------
மொழிஞாயிறு தேவனேயப் பாவாணர் மரபுரையில் "சூடிடுதல் சில நோய்க்கு மருந்துமாகலின், சுடுசொல் இருவகியில் தீயினுங்கொடியதாம்". என்கிறார்.
 -------------------------------

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்