Tuesday 14 April 2020

ஊர் போய் சேர்ந்து விட்டீர்களா?


அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.
காற்று இரண்டு நாள்களில்
கடந்துவிடும் நெடுந்தொலைவில்,
ஓடுகள் உதிர்ந்து கிடக்கும்
அவள் வீட்டு முற்றத்தில்
பெரியதாய் ஓர் இலந்தை மரம் உண்டு.
அதனடியில் ஆடிய நினைவுகளைத்
தலையில் சூடி,
கற்பனைக் குளிர்ச்சிக்குள்
காலெடுத்துவைத்து நடக்கிறாள்.
முன்னே,
செருப்பணிந்து சென்றவர்களால்
தேய்ந்து கிடக்கிறது சாலை.
மரங்களற்றப் பெருவழியெங்கும்
நிலம் சேர்ந்து கிடந்தான்
கதிரவன்.
கைக்குள் கிடந்த குழந்தை
நாவறண்டு மார்புதீண்ட,
இல்லாத நிலையறிந்தத்
தாயுள்ளம் ஏங்கியழ,
கண்கள் பனித்து,
காயும் முன் குழந்தையின்
வாயில் விழுந்தன
கண்ணீர்த் துளிகள்.
தாகம் தீர்த்தத் தாய்முகம் பார்த்துச்
சிரித்தது குழந்தை.
அவள் இன்னும் அழுதாள்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்