Thursday 20 July 2023

மனச்சான்று மரித்துக்கிடக்கும் மணிப்பூர்

 




எல்லா மொழிகளிலும் கேட்கிறது

பெண்ணின் அலறல்.

 

எல்லா நிலங்களிலும் சிந்துகிறது

அவள் குருதி.

 

எல்லா தெய்வங்களும்

காட்சிமறைத்தன,

அவள் கண் இருண்டபோது.

 

எல்லா மதங்களும்

கட்டுண்டு கிடக்கின்றன,

பிடுங்கி எறியப்பட்ட

அவள் மயிர்ச் சுருளில்.

 

எல்லா சாதிகளும்

ஒளிந்துகொண்டன,

வீசி எறியப்பட்ட

அவள் ஆடைகளுக்குள்.

 

மனிதம் மறைந்துகொண்டது

உடல் கிழித்தவன்

விரல் நகக்கண்ணில்.

 

மனச்சான்று மரித்துக்கிடக்கிறது

வாக்குச் சாவடிகளின்

வாயில்களில்.

 

இடுகாடும் சுடுகாடும்

எல்லைகளாக இருப்பதா

நாடு?

 

வெட்கம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்