Friday 24 January 2020

தொல்காப்பியம் சொல்லும் மந்திரம்




பெருநூல் தொல்காப்பியத்திற்கு பழம் உரையாசிரியர் அறுவர். இதில் இளம்பூரணர், பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் மட்டுமே பொருளதிகாரச் செய்யுளியலுக்கு உரை கண்டிருக்கிறார்கள். 

காலம்
இளம்பூரணர் – 11 ஆம் நூற்றாண்டு
பேராசிரியர் – 12- ஆம்  நூற்றாண்டு இறுதி
நச்சினார்க்கினியர் – 14 ஆம் நூற்றாண்டு.

பொருளதிகாரச் செய்யுளியலுக்கு எழுதப்பெற்ற பழைய உரைகள் இந்த மூன்று மட்டுமே. வேறில்லை. இவற்றில்; இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை எனவும், பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது எனவும், நச்சினார்க்கினியர் உரை இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது எனவும் போற்றுகின்றார் சான்றோர்.

இனி செய்திக்கு வருவோம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப. “ தொல்-பொருள்-செய்யுளியல் 1436

முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி, பண்ணத்தி என்ற செய்யுள் வகைகளைக் குறிப்பிடும் நூற்பாக்களில் மந்திரச் செய்யுள் குறித்த இரண்டாவது நூற்பா இது.

இனி, இந்த நூற்பாவிற்கான முதுபெரும் உரைகளைப் பார்ப்போம்.

1. இளம்பூரணர் உரை
என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.
அது வல்லார்வாய்க் கேட்டுணர்க.

2.பேராசிரியர் உரை
இது,  மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று.
நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையராவார். ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப்  புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும்  என்றவாறு.
அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. “தானே'” யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும்; பாட்டாகி அங்கதமெனப் படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க.
 அவை,

"ஆரிய நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா"

எனவும்,

"முரணில் பொதியின் முதற்புத்தேழ் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானத்தஞ் சேர்க்க சுவா"

எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின. மேற் பாட்டுஉரை நூல் என்புழி அங்கத மென்றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்ன வாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டா கலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தே பற்றிப் பிறரும்?

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்' (குறள் உஅ) என்றாரென்க. 

அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை,
'அங்கதப் பாட்டவற் றளவோடு ஒக்கும்”
என மேற்கூறினானென்பது.

3. நச்சினார்க்கினியர் உரை
இது மந்திரச் செய்யுள் கூறுகின்றது.
 (இ-ள்.) சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்று பயக்கச் சொல்லு மாற்றலுடையார் அவ்வாணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு.
அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க.  தானேயென்று பிரித்தார், இவை தமிழ்மந்திரமென்றற்கும்,  மந்திரந்தான் பாட்டாகி யங்கத மெனப்படுவன வுள, அவை நீக்குதற்கு மென்றுணர்க.
அவை

“ஆரிய நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா”

“முரணில் பொதியின் முதற்புத்தேழ் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானத்தஞ் சேர்க்க சுவா”

இவை தெற்கில் வாயில்திறவாத பட்டிமண்டபத்தேல் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும்பாடி யின்னவாறாக வெனச் சவித்தற் பொருட்டாய்வந்த மந்திரம் பாட்டாய்வருதலின் அங்கதமாயிற்று.
இதனான்

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’ (திருக். உஅ) என்றார்.

இவற்றிலிருந்து நாம் அறிந்து கொண்டவை.
1.   நிறைமொழி மாந்தர் - சொல்லிய சொல்லின் பொருண்மை என்றும் குறைவின்றிப் பயக்கச்  சொல்லும் ஆற்றலுடையவர்.
2.   மறைமொழி - புறத்தார்க்குப்  புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர்.
3.    தானே'” யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும் தானே என்ற சொல்லால் பிரித்ததால் இவை தமிழ் மந்திரம் என்பதற்கும்,

பழம்பெரும் உரையாசிரியர் யாரும் தொல்காப்பியத்தின் ‘நிறைமொழி மாந்தர்’ என்பதற்கு “முற்றுந்துறந்தவர்” என உரையெழுதவில்லை. ‘மந்திரம்’ தமிழ் மந்திரம் என்றும் குறிப்பிடுகின்றனர். அப்படியிருக்க, இணையப் பக்கங்கள் சிலவற்றில் வேறு பொருள் குறித்தான உரைப்பொருள்கள் காணப்படுகின்றன. பேராசிரியரைக் காட்டிலும் சிறந்த பண்டைய உரைகாரர் யாரெனத் தெரியவில்லை. நச்சினார்க்கினியரும் சொல்லாத அந்தப் பொருள் எங்கிருந்து வந்தது என்றும் அறியக் கிடைக்கவில்லை. சரி, எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே எனும் சூத்திரப்படி நோக்கினாலும், “நிறைமொழி மாந்தர்” என்பதற்கு முற்றும் துறந்தவர் என பொருள்கொள்ள இயலவில்லை.

வள்ளுவன், பேராசான், பேரறிஞன் "நிலத்து" என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறான். தொல்காப்பியன் "தானே" என்றது போல. வெண்பாவின் இலக்கணம் வெளிப்படையாய்ச் செய்து வைத்த தொல்காப்பியம் இருப்பதனால் நக்கீரன் பிழைத்தான். இல்லையென்றால் அவனும் "சுவாகா" தான்.

ஆனாலும், வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். பாவாணர் இதுபோன்று சொன்ன போது "என்ன அறிஞர்களை இப்படிக் கூறுகிறாரே என்று எண்ணியதுண்டு. ஆனால் பட்டறிவும் காலமும் அதை மெய்யென்று அறிவித்தன. எப்படியானாலும் எச்சரிக்கையாயிரு தமிழினமே. ஒவ்வொரு முறையும் நீ உள்ளிருந்தே வீழ்த்தப் படுகிறாய். உன் மண்ணில் கிணறு தோண்டி நீரெடுத்துக் காய்ச்சி, உன் மண்ணின் மரங்களின் வேர்களில் பாய்ச்சுகிறார்கள்.

விழுதுகள் வீழ்த்த முனைகின்றன, மூதாலமே கவனமாயிரு. 

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்,
24-01-2020

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்