Friday 17 January 2020

திசைகளில்லை



சுற்றிலும் இருள்
பேரமைதி
மேலலகும் கீழலகும்
உரசுவதை உணர்கிறேன்
கூர் பார்க்கவேண்டி
இருளில் குத்துகிறேன்.
விரிசலின் ஓசை
வெளிச்சக் கீற்று
இறகசைக்கும் காற்று.
ஓசை எழுப்புகிறேன்
எறும்புகள் கூட
திரும்பிப் பார்க்கவில்லை.
தொலைவில் கதிரவன்
வெம்மை தாங்காது
நிழல் தேடி
மெல்ல நடக்கிறேன்.
என் காலடித்தடம் கடக்கவே
ஏழெட்டு முறை
தாவிக் குதிக்கிறேன்.
நான் சென்று தொடும்முன்
நகர்ந்தது மரநிழல்,
எனக்கு முன்னே நடந்தது
என் நிழல்,
பின்புறம் கதிரவன்.
மெல்ல இருண்டது.
மறுநாள் விடியலில்
சிறகசைத்து மரக்கிளை
அடைந்தேன்.
உச்சிக் கதிரவனை
எட்டிப்பிடிக்க
உயரே பறந்தேன்.
உயரே உயரே.
இப்பொழுது
எனது பாதையில்
திசைகளில்லை.
ஆனாலும் நான்
எங்கும் பார்க்கிறேன்
யாதும் காண்கிறேன்.
புற்களின் மீது என்
சிறகின் நிழலால்
ஓவியம் வரைகிறேன்.
ஓசையேதும் எழுப்பவில்லை
ஆனாலும்,
அண்ணாந்து பார்த்து
பெரு மூச்செறிகிறான் ஒரு மனிதன்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்