Wednesday 9 February 2022

எது சரி?



உலகெங்குமே தனித்தனிக் குழுக்களாக மாந்த இனம் வாழ்ந்துகொண்டிருந்த போது இத்தனை கலகங்கள் இல்லை. வழிபாட்டு முறைகள் எளியதாய் தனித்தனியாகவே இருந்தன. வாழிடங்களும் காடுகளும் வளங்களும் சுரண்டப்படாமல் எளிமையான வாழ்வியலோடு காலம் சென்றுகொண்டிருந்தது.

பொருள் முகாமையான பின்னே வணிகம் தலைதூக்கியது. அது தனது குழந்தைகளாக நிறுவனமயமான மதங்களைப் பெற்றுப் போட்டது. இதில் எந்த மண்ணில் பிறந்த எந்த மதமும் விதிவிலக்கில்லை. ஆசீவகம், சமணம், சைனம், பவுத்தம், கிருத்தவம், இசுலாம் என நிறுவனமயமான எல்லா மதங்களும் வளங்களைச் சுரண்டவே அரசியலாளர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 

பண்டைய தமிழகத்தின் வணிகப் பெருவழிகளில் கிளைத்து வளர்க்கப்பட்ட ஆசிவகம், வளங்களைச் சுரண்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதெல்லாம் அமைதிப்படுத்தி, மக்களை மழுங்கடிக்கவே பயன்பட்டிருக்கிறது. உடனே அறிவியல், வானவியல் என்றெல்லாம் தூக்கிக் கொண்டு அருள் கூர்ந்து யாரும் வராதீர்கள். இன்றும் அறிவியலின் பெயரைச் சொல்லித்தான் பெருமளவு சுரண்டல் நடைபெறுகிறது. நம்மை மழுங்கடிக்க ஒன்று தேவைப்படுகிறது, அவ்வளவுதான். பண்டைய தமிழகத்தில் நிகழ்ந்த போர்களுக்கான காரணம் தேடுங்கள். அதன் பின்னணியை சிந்தியுங்கள்.

தமக்கு உரிமைப்பட்டது எனக் கருதுகின்ற ஒன்றை (இடம், பொருள்) மற்றொருவர் உரிமை கொள்ள நினைக்கின்ற பொழுது எதிர்த்து நிற்பது, உரிமைக்காகப் போராடுவது, தக்கவைத்துக்கொள்வது என்ற விலங்குப் பண்பு மாந்தனுக்கும் மிகவும் பொருந்தும். இனக்குழு வாழ்க்கையிலிருந்து மெல்ல மெல்ல வேளிர் குலங்களாக வளர்ந்து அரசுகளாக, பேரரசுகளாகப் பரிணமிக்கும் வரை மிகப்பெரும் எதிர்ப்புகளை ஆள நினைப்பவர்கள் சந்தித்திருப்பார்கள். எதிர்த்து ஆள நினைப்பவரை போரில் வீழ்த்தலாம். மக்களை என்ன செய்வது? எதிர்க்காமல் தாமாகவே அடங்கிவிட என்ன செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடுகளே மதங்களை ஆதரிப்பதும் வளர்ப்பதும் ஆள்பவர்களின் வேலையாகிப் போகிறது. 

வரலாற்றில் நிறைய போர்களை நிகழ்த்தியவை கிருத்தவமும் இசுலாமும். பவுத்தத்தின் கோர முகத்தை மியான்மரிலும், ஈழத்திலும் கண்டிருப்பீர்கள். சைவமும், வைணவமும், சமணமும் தங்களுக்குள்ளேயே பெரும் போர் புரிந்தவை. மாந்த இனத்தைச் சுரண்டாத ஒரு மதத்தைக் கூட நாம் அடையாளம் காண இயலாது. காரணம் அவற்றை இயக்கும் பின்னணியில் இருப்பது வணிகம்.

பொதுவாக இயங்கினால் பெரும் பொருள் ஈட்டலாம் என்பதால் வணிகம் எதிரிகளுக்கிடையே, எல்லாத் தரப்பு மக்களிடையே ஒரு பொதுத்தன்மையை உருவாக்க அல்லது இருப்பதை வளர்க்க எத்தனிக்கிறது. அவற்றை நிறுவனமயமாக்குகிறது. தங்களைப் பொதுவானவராகக் காட்ட முனைகிறது. முதலில் எல்லா மொழிகளையும் எல்லா  பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்தாள்கிறது. ஆனால், மெல்ல மெல்ல ஒரு பொதுத்தன்மை நோக்கி எல்லோரையும் நகர்த்திவிடுகிறது. இதைப் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் நிகழ்ச்சிகளை, விளம்பரங்களைப் பாருங்கள். நான் சொல்வதை நேரடியாக உணர்வீர்கள்.

பின்னாட்களில் சைவம் வைணவம் என இங்கு பிறந்த எல்லாமே அதற்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அன்பானவர்களே வழிபாட்டு முறையையும் மதங்களையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வேறு வேறு. இந்து, கிருத்தவம், இசுலாம், பவுத்தம், சமணம் என எதை எடுத்தாலும் மக்கள் வேறு வேறு வழிபாட்டு முறைகளோடு ஒரே மதத்திற்குள் இருக்கிறார்கள்.

கூர்ந்து நோக்குங்கள் இந்த மதச் சிக்கல்களுக்குள் வராத பழங்குடிகள் தங்கள் வாழிடங்களில் சிக்கல்கள், சுரண்டல்கள் வரும்போது நம்மைப் போன்று மதங்களுக்குள் கட்டுப்பட்டவர்களை விட தீவீரமாக சுரண்டலை எதிர்க்கிறார்கள். உலகெங்கும் மதங்களால் கட்டப்பட்ட அரசுகளை வைத்துக் கொண்டு நாம் தான் அவர்களைச் சட்டரீதியாக இராணுவங்களைக் கொண்டு சிதைக்கிறோம். அதன் பின்னணியில் மதங்களும் வணிகமும். அதற்கான சான்றுகள் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.

நாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறோம். உரிமைகள் குறித்துப் பேசும் சிந்தனையிலிருந்து இயலாமைகளை ஏற்றுக்கொள்கிற மனநிலை நோக்கி மழுங்கடிக்கப் பட்டிருக்கிறோம். வணிகத்தின் எண்ணங்களை, ஆள்பவர்களின் அரசியலாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை நோக்கி நகர்த்தப் பட்டிருக்கிறோம்.

கடவுளை ஏற்றுகொண்ட மதங்கள்தான் இப்படி என்றால் கடவுளை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்களும் இதையே நெடுங்காலமாகச் செய்து வந்திருக்கின்றன. அவை கடவுளை ஏற்றுக்கொளாத மதங்களாக இயங்கி வந்திருக்கின்றன அவ்வளவே. அவற்றின் வேலையும் வணிகத்திற்கு ஆதரவான, ஆள்பவருக்கு உதவுகிற பொதுத் தன்மை நோக்கி மக்களை நகர்த்துவதே. 

இவை எல்லாமாகச் சேர்ந்து மரபின் வேர்களை அறுத்து நமது உண்மைத் தன்மையிலிருந்து நம்மை மாற்றியிருக்கின்றன. நாற்பது வயதைக் கடந்தவர்கள், சிறுவயதில் ஊர்க் கோயில்களில் சாமி ஆடி வருபவர்களை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். மாடனோ, ஐயனாரோ, முனீசுவரனோ ஆடிக்கொண்டிருக்கும் போதே, யாராவது ஒருவர் வந்து  ஆடுபவரின் இடுப்பில் கைவைத்து வேட்டியை இறுகப் பிடித்தபடி கேள்வி கேட்பார். "என்ன சொள்ளமாடா நீ கேட்டதெல்லாம் செய்தாச்சு. இப்ப சொல்லு எப்ப மழை வரும்?" ஆடுபவர் சொல்வார் அல்லது கையால் சைகை செய்வார். 

"அப்படியா? பவுர்ணமி தாண்டுனா மழ வந்துருமா?"

"ம்... ம்..."

"வரல்லன்னு வச்சுக்கோ இந்த வருசம் உனக்கு கொடை கிடையாது பாத்துக்கோ?" என்று சாமியிடமே தாக்கல் சொல்வார். பௌர்ணமி தாண்டி மழை வராவிட்டாலும் சாமியிடம் போய் அழுது வடிவதில்லை. ஊர் குளத்து நீரை சரியாகப் பாய்ச்சி, கமலை இறைத்து எப்படியோ விளைச்சல் கண்டுவிடுவார்கள். நம்மோடு கூடவே சுடலைமாடன் வேளாண்மை செய்ய வருவார் என்றெல்லாம் அவர்கள் நம்புவதில்லை. வராத மழைக்கு சாமியிடம் வருந்துவதுமில்லை. எல்லாவற்றையும் நாம்தான் செய்தாக வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்தனை எளிதாக இருந்த மனிதர்களை நினைவிருக்கிறதா?

அவர்கள் இப்பொழுது விதை நெல் தொடங்கி அறுவடைக்கான இயந்திரம் வரைக்கும் வணிகர்களை எதிர்நோக்கியே இருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியின் உண்மையான(?) நிகழ்ச்சிகளை, விளம்பரங்களை நம்பி, கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு "அட்சயத் திரிதியை" யில் ஒரு மலையாளி அல்லது மார்வாடியின் கடை வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள். 

வயல் வேலை செய்துகொண்டு, வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் "வேதக் கோயிலுக்கு"ப் போய்க்கொண்டு சிக்கலின்றி வாழ்ந்த பண்டைய மனிதர்கள் இப்பொழுது "ஆராதனை செபக் கூட்டங்களிலே" காத்துக் கிடக்கிறார்கள்.

"நாங்கள் இங்கேதான் இருந்து கொண்டிருக்கிறோம். மதங்களே வெளியிலிருந்து எங்களிடம் வந்தன." என்று பழனி பாபா சொன்னது போல எண்ணிப் பாருங்கள்.

"சிறீ ராம்" என்றவர்களும் "அல்லா ஃகூ அக்பர்" என்றவரும் காலகாலமாக இங்கேதான் இருக்கிறார்கள். இந்த இரண்டு சொற்றொடர்களும் வந்து சேர்ந்தவை. அந்த இரண்டில் ஒன்றையே நாமும் சொல்வோமானால்,  அது சரியாக இருக்கவியலாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேகேதாட்டில் அணைகட்டுவதற்கு அனுமதியளிக்கும் நிலையில் ஒன்றிய அரசு வந்துவிட்டது. அதோ உரிமைக்குக் குரல் கொடுக்கும் அந்த இருவரும் இங்கே நீரில்லாமல் வேளாண்மையை இழக்கப்போகிற இந்துவுக்கும் இசுலாமியருக்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். மாட்டவே மாட்டார்கள். கருநாடகத்தில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகத் தாக்கப்பட்டபோது, வெளியேறியபோது இவர்கள் அங்கேதான் இருந்தார்கள். சும்மா இருந்தார்கள்.

இதையெல்லாம் தாண்டி உடை, தனிமனித உரிமை அதனால் தான் நாங்களும் "அல்லா ஃகூ அக்பர்" என்று சொல்லி ஆதரவு கொடுக்கிறோம் என்றால், நிறைய கிருத்தவ கல்வி நிறுவனங்களில் பெண்பிள்ளைகள் பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது என்ற வரம்பும் நடை முறையும் இருக்கிறதே. அப்பொழுது "சிறீ ராம் என்பதும் சரிதானே?" என்ற அவர்களது கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?

மதம் எந்த நிறத்தில் இருந்தாலும் அது வணிகத்தால் இயக்கப்படும்   கைப்பிள்ளையாகவே இருக்கிறது. மாந்தவினத்தின் திறனை மழுங்கடிப்பதாகவே இருக்கிறது. நேரடியாக அல்லது மறைமுகமாக ஆட்சியாளர்களுக்கு உதவுதாகவே இருக்கிறது. இனங்களை அவற்றின் மரபுக்கூறுகளைச் சிதைத்து அவை எழுச்சியுறாமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த முறையும் அதையே நிகழ்த்தியிருக்கின்றன இரு மதங்களும். நாம் எந்தப் பக்கம் நின்றாலும் வருங்காலத் தலைமுறைக்குத் தீங்கிழைக்கிறோம் என்பதே எனது பார்வையாக இருக்கிறது.

ஒரு பெண்ணைக் கூட்டமாகச் சென்று அச்சுறுத்திய வகையில் அவருக்கு ஆதரவாகப் பேசுவது வரவேற்கத் தக்கதுதான். அதற்காக அதே ஆயுதத்தைத் தூக்குவது...

===================================

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

09-02-2022

==================================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்