Wednesday, 29 October 2025

மெய்யற விளக்கவுரை

 


இன்று மனநிறைவான நாள். இந்த நிறைவை அளித்த பெரியவர் வ.உ.சிதம்பரனாருக்குத் தலை தாழ்ந்த வணக்கம். 

பெரியவர் வ.உ.சிதம்பரனார் இயற்றிய மெய்யறம் எனும் நூலின், மாணவரியல் முழுமைக்கும் விளக்கவுரையை எழுதி முடித்து,  உரியவர்களிடம் சேர்த்துவிட்டேன். அச்சேறி நூலாக வரும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.

வாழ்க்கைப் பேராறு தன் போக்கிலேயே ஓடிக்கொண்டிருந்தாலும், பல துடுப்புகளின் உதவியோடு என் படகிலேயே பயணம் செய்கிறேன் என்பது பெரும் பேறுதான். இந்தப் பேற்றை எனக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

முகன்மையாக,

எனது எழுத்துகளை முதன்முதலில் நூலாகத் தவழச் செய்த நாகர்கோவில், தெ.தி.இந்துக்கல்லூரியின் மேனாள் தலைவர், அமரர் பெ.ஆறுமுகம்பிள்ளை,

உரையாசிரியனாய் என்னை மாற்றி, நூற்களை வெளியிட்ட நண்பர், திருவானைக்கா திரு ச.முத்துக்குமாரசாமி,

தன்னலம் கருதாத இவ்விருவரின் செயலே இன்று பெரியவரின் 'மெய்யறம்' நூலுக்கு விளக்கவுரை எழுதி முடிக்க முழுமுதற் காரணம்.

இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தளிகையாக, ஒரே வெண்பா இருவருக்குமாகின்றது.

நான்தேடா நல்லமுது நல்லோர் மகிழ்ந்திருக்க/
வான்வாடா வண்ணமழை வண்டமிழ்க் காதலால்/
தாமாக என்னெழுத்தை நூலாய்ப் பதிப்பித்தக்/
கானுலாப் பாதைக் கதிர்/

என் வலைப்பக்கத்திலும், முகநூல் பக்கத்திலும் எழுதியதியதைப் படித்துக் கருத்திட்ட, அழைத்துப் பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களது கருத்துகள் என்னைச் செம்மைப் படுத்தியதாலும், மேலும் படிக்கத் தூண்டியதாலும் நிலை உயர்ந்திருக்கிறேன் என்பதில் ஐயமில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெரியவரின் 'பாடல்திரட்டு' நூலின் சில பாடல்களுக்கு உரை எழுதத் தொடங்கியபோது திரு ரெங்கையா முருகன் முகநூலில் அறிமுகமானார். நேரில் சந்திப்பு. உரையாடல்கள்.

ஒருநாள், "பெரியவரின் மெய்யற ஆண்டு இது. மெய்யறம் குறித்து இணையவழியில் பேச இயலுமா?" என்றார். "பேசுவதற்குச் சூழலும், காலமும் இடந்தருமா எனத் தெரியவில்லை ஐயா. உரையாக எழுத முயல்கிறேன்" என்றேன்.

சனவரி மாதம் ஏழாம் தேதி 2025ல் முதல் அதிகாரத்தின் விளக்கத்தை எழுதி அனுப்பினேன். முப்பது அதிகாரங்களுக்கும் விளக்கமெழுதி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நூலளவை விட நெடுங்காலம் எடுத்துவிட்டதுபோல் தோன்றுகின்றது. ஆனாலும் முடித்துவிட்டேன் என்ற மகிழ்வில் குறைவில்லை. தமிழில் துறைபோகிய பெரியவர் வ.உ.சிதம்பரனாரின் மனதோடு மிக நெருக்கமாக இருந்த இந்த நாட்களுக்காக அவருக்கு உளமார்ந்த நன்றி.

பெரியவரால் 1914ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மெய்யறத்திற்கு, நூறு ஆண்டுகள் தாண்டிய பின், முதன்முதலில் விளக்க உரையெழுதும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு திரு ரெங்கையா முருகனுக்கு மனமார்ந்த நன்றி. அவரின் தூண்டுதல் இல்லை என்றால் இது நிறைவுற்றிருக்குமா? என்று தெரியவில்லை. இந்த வேலையின் பின்புலத்தில் இருக்கும் வ.உ.சி ஆய்வுவட்டத்திற்கும், திரு குருசாமி மயில்வாகனன், திரு அறிவழகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

எந்தச் சூழலிலும் என்னோடு உறுதுணையாய் நிற்கும் என் துணைக்கும், அன்பு மகனுக்கும், மருமகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. அவனது திருமணம் நடந்தேறியதும் இவ்வாண்டின் மகிழ்ச்சிகளில் ஒன்று.

எனைப் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தலைதாழ்ந்த வணக்கம்.

ஐந்து வியாழவட்டம் நிறைவுற்றிருக்கிறது.

"முதலிரண்டு படிப்பில் போக,
மூன்றும் நான்கும் பொருளில் கரைய
ஐந்தில் பிறந்தேன் எழுத்தாய்
அழகிய தமிழ்த்தாய் வளர்த்தனை.

அறிந்தேன் பலவும்
அறிந்தேன் பலரை
அருள் பல பெற்றேன்.

கற்றவை எடுத்து விளம்பிட
உற்றவர் போல் உதவுவோர்
நற்றமிழ் போல் நலமுறுவாரே"


என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
29-10-2025

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்