Sunday 23 June 2019

வேப்பம்பழம்


கல்லாய் இருக்கும் கடவுளுக்கு
காதுகள் இல்லையடா.
சொன்னால் கேட்கும் சொந்தங்களும்
தொலைவில் ஆனதடா.
தொட்டவுடன் விளிக்கும் கைப்பேசி
தொடர்பு எல்லைக்கு வெளியே
எப்போதோ போனதடா.
காலம் ஒளித்துவைத்த
காவிரியின் நீர் போலே - என்
கண்ணீரும் போனதடா.
ஊர்வலத்தில் தேர்போலே வாழ்க்கை
ஒருநாள் ஆட்டமடா.
கார்காலம் முடிந்தவுடன்
கைமறந்த குடைபோலே — எனை
யார் நினைப்பார் என
மனது ஏங்குமடா.
காதுக்குப் பசியென்றால் என்
கவிதை தீர்க்குமடா.
வயிற்றுப் பசிதீர்க்க என்
வாழ்வால் ஆகாதடா.
பாலுக்குப் பிள்ளையழும்
பசியாலே தாயழுவாள்
படிக்கையில் சிரித்தேனடா.
மனையாள் நோயென்று
மடிமீது சாய்ந்திருக்க
மேட்டூர் அணைபோலே
வங்கிக் கணக்கிருக்க
பசித்தழுத தாய்மனது — என்
நெஞ்சாங்குலை ஆனதடா.
கையில் காசின்றி
கடும்பசி சூழ்ந்துநின்றால்
பத்தென்ன மொத்தமுமே
பட்டமெனப் பறக்குமடா.
காசிருந்தால் வாழ்க்கை
கரும்பென இனிக்குமென்றால்
வேப்பமரம் மருந்தென ஏன்
இயற்கை விதித்ததடா.
யாருக்கும் என் எழுத்தால்
மருந்தாவேன்
பாருக்குத் தேவையென சில
பாடல்கள் சொல்லி வைப்பேன்
ஊருக்குத் தேவையென்றால்
ஓரமாய் வையுங்கள்
வேண்டாமென நினைத்தால்
வீசிவிட்டுப் போய்விடுங்கள்
வேப்பம்பழம் காக்கைக்கு
உணவாகும்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்