Saturday 7 March 2020

பெருமை கொள்கின்றன வரிகள்

மூக்கின்

ஒரு துளையில் காற்றோட்டமும்

மறு துளையில் போராட்டமும்

மூச்சாகிப் போக;

மூப்பும் பிணியும் மூட்டுவலியோடு

நொண்டி நொண்டி, பின்னே நடந்துவர,

முழுத்திறனோடு

முன்னே ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள்.

கோலமிட்டுச் சோறாக்கிக்

குழந்தை பேணிக் குடும்பம் காத்து,

பொதுவெளியில் மாந்தர்படும்

துயரம் பொறுக்காது,

பொழுது புலர்ந்ததும்

போராட்டத்தின் ஒளிக்கற்றைகள் தீண்டும்

முற்றம் கடந்து முன்னே வந்து

களப்பணிச் செய்தார்.



இவர்கள்,

அதிகாரப் பெருவெள்ளத்திலும்

அடிவேர் அசையாத நாணல்கள்.

கொடுங்காற்றிலும் குடைசாய்ந்துவிடாத

பெரு வேம்புகள்.

ஊர்நடுவே இளைப்பாறல் தரும்

ஆலமரங்கள்

கொல்லைப் புறத்தில்

உணவாய், மருந்தாய் நிற்கும்

முருங்கை மரங்கள்.

முதுகில் முள் சுமந்தாலும்

முகத்தில் நகை பூக்கும்

அருஞ்செடிகள்.



உம்மை அறிந்து

உம்பணி தெரிந்து;

பெண்குழந்தையொன்று பேசுவதாய்

என்னில் விளைந்த வரிகளுண்டு.

அதிலொன்றே இந்நாளில்

அன்புநிறை மகளிருக்கு உம்மொழியும்;

என்பங்கின் வாழ்த்துமாமே.



கேடுசூழ் நாடிதனை

ஊடாடிச் சீர்செய்வோம்.

கேளாச்செவி அனைத்தும்

கேட்கும்வரை குரல்கொடுப்போம்.

பாழாகும் சமுதாயம்

பார்த்து விழிமூடோம்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்