Friday, 13 March 2020

தமிழ்






யாப்பணியா எம்பாவை -மனதின்
பூப்பணிந்தச் சிறுபூவை -உலகின்
மூப்பணிந்த தென்தமிழே -உன்
முன்வைத்தேன் ஏற்பாய் நீ.

கோள்பிறந்து குளிரடங்கி நீர்பிரிந்து நிலம்தெரிந்து
உயிர்பிறந்து ஊர்ந்து நடந்து ஓர்நாள்
மாந்தனாய் எழுந்துநின்ற மறுநொடியில் பிறந்தவளே,
பிறப்பறியா மூப்பறியா பெருந்தமிழே,
பனையேறி நீரெடுத்துப் பழம்பறித்துப் பகுத்துண்ட
பனைநாட்டின் குமரிமகன் பழந்தமிழன்
ஒலியெழுப்பி சைகைசெய்து மொழி வளர்க்க
உமைப்பெற்றோம் எம்தாயே உலகத்தின் தாய்மொழியே.

உயர்ந்திருந்த மரமேறி பெருத்திருந்த பழமறுக்க
ஒருநூறு தீஞ்சுளைகள் ஒருசேர உள்ளிருக்க
தனித்தனியே பிரிந்துவர சக்கையென்று பெயர்சொன்னான்.
தண்டிற்கும் மடலென்றே தமிழ் சொன்னான்.
இன்றுவரை ஈதேயெம் குமரிநில வழக்கம்
என்றுமே ஓயாதெம் இயற்சொல் முழக்கம்.

சக்கை மரம்பிளந் தாரக்கால்கள் செய்து
சக்கைஆரம் என்றே சக்கரம் செய்தான்.
குமரிக் கண்டத்தின் குறுக்கும் நெடுக்கும்
உனது மகனோடி உயிர் நிறைத்தான்,
உலக வரலாற்றைத் தொடங்கி வைத்தான்.

பார்த்த நிகழ்வைப் படமாய் எழுதி
ஓர்த்தல் பிறழ்கையில் ஒலி போதாதென
கோடுகள் சேர்த்தே குறிகள் செய்தான்.
வரிகள் மாறின வட்டெழுத் தாயின.
பட்டறிந்த யாவையும் பதிவு செய்திட
வட்டெழுத் தெடுத்தோர் வரைமுறை செய்தான்.
பனையோலை நறுக்கெடுத்துப் பட்டறிந்த தெழுதி
பொத்தக மென்றே பெயர்ச்சொல் வைத்தான்.

கடல்கோள் கொண்டதில் நிலம் பிரிந்தான்,
கட்டுமர மேறியும் கடல் கடந்தான்,
கால்நடை யாகவும் நிலம் கடந்து
காடுகள் யாவிலும் குடி புகுந்தான்,
ஆண்டுகள் ஆயிர மான காலையில்
அகிலம் முழுதும் நிலை பெற்றிருந்தான்.

பாறையில் பதிவதும் கல்லில் வடிப்பதும்
பழக்கமாய்க் கொண்ட பழந்தமிழ் மாந்தன்
வரிகளும் குறிகளும் வடித்தெடுத் துந்தன்
ஒலியையும் எழுத்தையும் ஓயாமல் காத்தான்.

ஆண்டுகள் போயின பல்லாயிரம் தாண்டின
பண்டு நகர்ந்தப் பழந்தமிழ் மாந்தனை
தண்ணலும் வேனலும் தென்றலும் வாடையும்
முன்னம் இருந்தமெய் நிலைமாற்றிச் செய்தன.
மூக்கினில் பிறழ்ந்து முகிழ்ந்து திரிந்து
நாக்கின் நுனியில் நடுத்தொண்டை யடியில்
காற்றும் வெயிலும் கலந்து திரிந்திடப்
பாக்களில் நிலைபெற்றப் பழந்தமிழ்ச் சொற்கள்
பிறழ்ந்தும் நீண்டும் திரிந்தும் மருங்கியும்
பிறந்தன தமிழுக்கு ஆயிரம் குழவிகள்.

பிறந்த விடத்தில் பெரும்பேறு பெற்றதமிழ்
கறந்த பாலென களங்கமற் றிருந்தது.
சங்கம் வளர்த்தது புலவர் பாடினர்
மங்காப் புகழுடன் செந்தமிழ் தழைத்தது.
முதலும் இடையும் கடல் கொண்டோட
மூன்றாம் சங்கமும் முளைத்துத் துளிர்த்தது.

மலைகடந்து போனவன் தன்னிலை மறந்தான்
ஊரும் பேரும் ஒப்பிலாச் சொல்லும்
கற்றதும் பெற்றதும் மற்றவர்க் களித்தான்.
வேர்மறந்து போனான் வேற்றின மானான்.

அதனை யறிந்தவர் அந்நிலை யடைந்திட
மந்தை களோடும் மடந்தைய ரோடும்
கைபரில் நுழைந்து எம்வள நாட்டின்
வடபுலத் திரிதமிழ் எழுத்துக்கள் கோர்த்தனர்.
நாடோடி ஒலிகட்கு எழுத்துகள் கிடைத்திட
நற்றமிழ் கிரேக்க இலக்கணஞ் சேர்த்து
நாகரிகத் தமிழரின் வாழ்வியல் குழைத்து
புத்தின மென்றொரு புனைவினஞ் செய்தனர்.

கச்சியில் பல்லவர் காலமும் வந்தது
வேள்விகள் செய்தவர்த் தோள்களி லேறினர்.
சேரரும் சோழரும் சிற்றரசர் நூற்றுவரும்
களப்பிரர் தாமும்  பாண்டியர் தோளும்
சோர்ந்திருந்த வேளையிலே சோலைத்தமிழ் நாட்டில்
சமயம் வளர்த்ததமிழ் சமற்கிருதம் சேர்த்ததுவே.
ஆட்சிமொழி தமிழெனினும் அரசன் சொற்கள்
வேற்றுமொழி கலந்ததனால் மக்கட் பேச்சும்
வேரறுந்து விதிமறந்து வேற்றொலி கேட்டுக்
காற்றில் கரைந்தன கன்னல்தமிழ்ச் சொற்கள்.

காலம் கடந்தது காட்சிகள் மாறின
உற்றவர் இல்லா ஒற்றைப் புனைமொழி
அற்றுப் போனது அழிவினைத் தொட்டது
வேரின்றி வீழ்ந்தமொழி வேதமொழி யானது.

அழகு தமிழ்மொழியில் அமிலம் கலந்திருக்க
ஆங்கிலமும் நுழைந்தங்கே அழுக்குச் சேர்ந்துவிட
இன்தமிழ் இறுத்து வன்தமிழ் ஆக்கிட
ஈந்தனர் உயிரை எம்தமிழ் மாந்தர்கள்.

உருவற்றுப் போனமொழி ஊமையாய் உள்ளிருந்தே
ஊர்ந்திங்கே வருகுதடா மீண்டும் ஆள.
எழுந்திடுவாய் என் தமிழா விழித்திடுவாய்
ஏற்கும்மொழி தமிழ் ஒன்றே என்றுரைப்பாய்.

பழந்தமிழின் பாட்டிசைத்துப் பகல் விழிப்போம்
பாவாணர் பயிலரங்கைப் படைவீடாய்ச் செய்வோம்
பாராண்டத் தமிழினத்தின் பேராண்மை கொண்டு
ஊராளும் மன்னவர்க்கு உரைகல் செய்வோம்.

பாட்டன் சுந்தரனார் பாட்டெடுத்துச் செந்தமிழின்
வாழ்த்தென்று வகுத்து வைத்த நல்லவர்கள்
காற்றில் கரைத்துவிட்ட ஓரடியை எம்பாவின்
ஈற்றடியாய் எடுத்துவைத்து இனிதே முடிக்கின்றேன்
ஆரியம் போலுலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

சிராப்பள்ளி மாதேவன்.
------------------------------------------------------------------------
(13-08-2014 ல்  உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு  ஆய்வு நிறுவனம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை இணைந்து திருச்சிராப்பள்ளியில் நடத்திய "சமற்கிருத ஆதிக்கமும் தமிழக பாதிப்புகளும்" கருத்தரங்கப் பாவீச்சு.)

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்