Tuesday 19 March 2019

மௌனம்

ஒரு நொடி ஒளிர்ந்து மறைந்த
அந்த
மின்னலின் வெளிச்சத்தில்
கண்ணில் படுகிறது,
மனதுக்குள் கிடக்கும்
மௌனக் குவளை.

அது
சொற்களால் நிரம்பிக்கிடக்கிறது;
ஒரு பெருவெடிப்பின்
வருகைக்காய்.

மின்னல் வீசியெறிந்த
மன்னிப்பின் மலர்கள் பட்டு
உடைந்த குவளையிலிருந்து
ஒழுகுகின்றன சொற்கள்,
வேறு வேறு கோடுகளில்.

 மௌனம் நடந்துசென்ற
தடம் அறிய
சொற்களுக்குத் தெரிவதில்லை.

ஆனாலும்,
எல்லா மௌனங்களின்
உள்ளேயும்
சொற்களே காத்துக்கிடக்கின்றன.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்