Wednesday 20 March 2019

மக்கள்..... ஆட்சி



நெஞ்சாங்குலையின் நரம்புகள் மீது
பின்னிப் படர்ந்து கிடக்கின்றன
மதங்களின் நச்சுக் கொடிகள்.

ஈரக்குலையின் இண்டு இடுக்குகளெங்கும்
கொதிக்கக் கொதிக்கப்
பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது
சாதியக் குருதி.

நுரையீரல்களின் காற்றறைகள்
எங்கும்
கெட்டுப்போன பணத்தின்
வீச்சம்.

வாயின் ஓட்டை
நிறைந்து ஒழுகும்
வஞ்சம் நிறைந்த
வண்ண வண்ணப்
பொய்கள்.

கால்கள் இரண்டிலும்
கொள்கை அறுத்து
உப்பைத் தடவி
உணக்கிய தோலில்
செய்த செருப்புகள்.


மரங்களற்ற ஆறுவழிச்சாலைகளில்
மணலற்றுப் போன ஆற்றுவெளிகளில்
நீரின்றி மாய்ந்த குளத்தங்கரைகளில்
நெல்லற்றுப் போன களத்துமேடுகளில்
என
எல்லா இடங்களிலும்
வல்லடியாய் நடந்து போகின்றன,
தேர்தல் நேரத்து
ஆலிப்பொம்மைகள்.

சிராப்பள்ளி ப.மாதேவன்,
20-03-2019
 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்