Tuesday 31 October 2017
Monday 30 October 2017
Saturday 28 October 2017
Saturday 21 October 2017
இருட்டறைக்குள் பாயும் கீழடி வெளிச்சம்
இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான இடைவெளியை அகழ்வாய்விலும் தொல்பொருள் ஆய்விலும் கிடைக்கும் தரவுகளின் துணைகொண்டு சரிசெய்து கொண்டே வரவேண்டும். இதன் மூலமாகத்தான் இரண்டிலும் இருக்கும் குறைகளைக் களையமுடியும்.
நான் தமிழாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, தொல்பொருள் ஆய்வாளராகப் பணியாற்றுவதற்கான படிப்பெதுவும் படித்தவனில்லை. ஆனாலும் தேடல்கள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அந்தத் தேடலின் போது கீழடி அகழ்வாய்வு வரலாற்றின் மீதும், இலக்கியங்களின் மீதும் புத்தொளி பாய்ச்சியிருப்பதை உணரமுடிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கீழடி சென்றுவந்தவுடன் அதன் பண்டையப் பெயர் மற்றும் இருப்பிடம் பற்றித் தேடத் தொடங்கியபோது க.அப்பாத்துரையார் "பழமதுரை" என்றும் "திருமுருகாற்றுப்படை" பற்றியும் சொல்லியிருந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. ஆனால் அதை மீண்டும் படிக்கிற வாய்ப்பு அமையவில்லை. திருமுருகாற்றுப்படை நோக்கிய தேடலில் ம.ராசமாணிக்கனாரின் "பத்துப்பாட்டு ஆரய்ச்சி" நூல் அகப்பட்டது. அதில் அகநானூறு, திருமுருக்காற்றுப்படை இரண்டும் பரங்குன்றின் (திருப்பரங்குன்றம்) அமைவிடம் பற்றிக் கூறும் செய்திகள் இருந்தன. இந்த ஆய்வுநூல் 1964 ம் ஆண்டே எழுதிமுடிக்கப்பட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்க. அவர் எடுத்தாண்ட அகப்பாடல் வரிகள் கீழே
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
- எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
(அகம்-149)
" கூடற் குடாஅது.................. நெடியோன் குன்றத்து", அதாவது கூடல் நகரின் மேற்கே தொலைவில் இருக்கும் பரங்குன்றம் என்று பொருள். அற்றை நாளில் பரங்குன்று கூடல் நகருக்கு மேற்கே தொலைவில் இருந்திருக்கிறது.
அந்நூலில் எடுத்தாளப்பட்ட திருமுருகாற்றுப்படை வரிகள் கீழே
பொருநர்த்
தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து . . . .70
மாடமலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன் ; அதாஅன்று,
திருமுருகாற்றுப்படை(70-77) - மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர்
"மாடமலி மறுகின் கூடற் குடவயின்" மாடங்கள் நிறைந்த கூடல் நகரின் மேற்கே என்று பரங்குன்றின் அமைவிடம் சொல்லப்பட்டுள்ளது. குணாஅது, குடாஅது என்பனவற்றிற்கு விளக்கம் தந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஐயாவுக்கு நன்றி.
தற்காலத்திற்கு வருவோம். அகழப்பட்டிருக்கிற கீழடியில் நின்று பார்த்தோமானால் பரங்குன்று (திருப்பரங்குன்றம்) குடாஅது (நேர் மேற்கே) தான் தெரிகிறது. படம் 1 காண்க.
படம்-1 கீழடி அமைவிடம் (Google Map) |
இங்கே பெருநகரொன்றின் நாகரிக அடையாளங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இது மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் மற்றும் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் ஆகிய இருவரின் பாடல் குறிப்புகளை வலுவாக உறுதி செய்கிறது.
திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை இலக்கிய வகையைச் சார்ந்தது. தொல்காப்பிய விதியின் படி இவை கூத்தர், பாணர், பொருநர், விறலியர் பொருளுதவிபுரியும் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதையே கூறும். ஆனல் திருமுருகாற்றுப்படையோ முருகன்பால் புலவரை ஆற்றுப்படுத்துவதாய்ப் பாடப்பட்டுள்ளது. இது தொல்காப்பியம் சொல்லாத செய்தி.
" தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்
சிறந்த நாளினில் செற்றம் நீக்கி
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்
மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி
நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே" --- தொல்-புறத்திணை நூற்பா.
ஆற்றுப்படை இலக்கியங்கள் எதிருப்பவர் செல்லவேண்டிய இடம், அதைச் சென்றுசேர்வதற்கான வழி, எதிர்படும் நிலங்கள், மனிதர்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பேசும். அந்தவகையில் நக்கீரரும் ஏராளமான செய்திகளைச் சொல்லிச் செல்கிறார். முக்கியமான தொன்றைப் பார்ப்போம்.
முருகன் உறையும் இடங்கள்
சிறுதினை
மலரொடு விரைஇ மறியறுத்து
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .220
ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்,
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
தினையை
மலர்களுடன் விரவி, ஆட்டுக்கிடாயறுத்து கோழிக்கொடி நாட்டி ஊரார் நடத்தும்
சீர்மிகு விழாக்களிலும் முருகன் உறைகிறான் என்று தொடங்குகிறது பழமுதிற்சோலை
பற்றிய ஆற்றுப்படை.
முருகன் வழிபாடு
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் . . .230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியடு இன்னியம் கறங்க . . .240
உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக
. . .
குறமகள் ஒருத்தி முருகனை வழிபடும் இடத்தைத் தூய்மையாக்கி கோழிக்கொடியை நாட்டினாள். அதன்மீது நெய்யோடு வெண்சிறுகடுகை அப்பினாள். அழகிய மலர்களை அக்கொடிமீது தூவினாள் .இரண்டு ஆடைகளை உள்ளொன்றும் புறமொன்றுமாக உடுத்தாள். சிவந்த நூலைக் கையில் காப்பாகக் கட்டினாள். வெள்ளிய பொரியைத் தூவினாள். ஆட்டுக்கிடாயின் குருதியொடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறுபலியாக இட்டாள்.மஞ்சள், சந்தனம் தெளித்தாள். மாலைகள் இட்டாள். மலைநகர் வாழ்கவென்றாள். தூபம் காட்டிக் குறிஞ்சிப்பண் பாடினாள். பல்லியங்கள் ஒலித்தன. பல வண்ண மலர்களைத் தூவி குருதியளைந்தச் சிவந்த தினையைப் பரப்பினாள். வெறியாடுகளம் ஆராவாரிக்க அங்கிருந்தவர் பாடினர். கொம்பு ஊதி மணி ஒலித்து முருகனின் ஊர்தியான "பிணிமுகம்" என்னும் யானையை வழிபட்டனர். (சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் முருகனுக்கு முன் மயிலுக்குப் பதில் யானை இருக்கக் காணலாம்)
இவ்வாறு பெருஞ்செய்திகளைச் சுமந்து நிற்கிறது திருமுருகாற்றுப் படை. முருக வணக்கம் சார்ந்த, பேசப்பட்ட நிலம், மக்கள் பற்றியச் செய்திகள் நிறைய மறைக்கப்பட்ட உண்மைகளை நமக்கு இயம்புகின்றன அதன் வரிகள்.
இதே உறுதிப்படுத்தலோடு எருக்காட்டூர் தாயங்கண்ணனாரிடம் போவோம். மூன்று வரிகள் மட்டும் இராசமாணிக்கனார் நூலில் பார்த்துவிட்டு முழுப்பாடலுக்குப் போனேன். கீழடி இந்தப் பாடலுக்குமான உறுடியொன்றையும் தந்திருக்கிறதே. செய்தி கண்டு பெருவியப்பெய்தினேன். இதோ பாடல்
- சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
- நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
- புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
- பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
- அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
- அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
- வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
- சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
- யவனர் தந்த வினைமாண் நன்கலம்
- பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
- வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
- அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
- நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
- கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
- பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
- ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
- வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
- எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
- அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19
- எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
(அகம்-149)
- "வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
- அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
- நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
- கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
- பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15.ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,"
இந்த வரிகள் வரலாற்றின் முகடுகளை நோக்கி என்னை நகர்த்தின. வளம் நிறைந்த சேரலரின் பேரியாற்றங்கரை முசிறியை ஆர்த்தெழுந்து வளைத்து சமர் கடந்து படிமம் (சிலை) கவர்ந்து வந்த அடுபோர்ச் செழியனின் கொடி அசைவது போல கூடலின் மேற்கே மயிற்கொடி அசையும் விழாக்கள் முடிவுறா நெடியோன் குன்றம் என்று பரங்குன்றைக் குறிக்கிறார்.
சேரலரின் முசிறி வழியாக பேரியாற்றில் நுழைந்து சிலை கவர்ந்த "அடுபோர்ச் செழியன்" யார்? கவர்ந்து வந்த சிலை யாருடையது? அன்றிருந்த சேரல மன்னன் யார்?
அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழுந்தன.
"தென்புலங் காவல்
என்முதல் பிழைத்தது " என்று வீழ்ந்த பாண்டிய மன்னன் கண்முன் வந்துபோனான்.
பெருந்தொலைவு நடந்துபோன கண்ணகி வந்தாள்.
சிலையெடுத்தச் சேரல மன்னன் வந்தான்.
முன்னவன் தென்னவன் முதற்பிழைத்த மன்னவன் பின்வழி வந்த அடுபோர்ச் செழியனும் வந்துபோனான். முன்னவர் பிழை படிமமாய் நின்றதைக் களைய நினைத்தானோ?
பலா மரத்தால் செய்யப்பட்ட, சேரலரின் கொடுங்கல்லூர் பகவதியும் வந்துபோனாள். கூடவே உள்ளே எதுவுமின்றி எப்பொழுதுமே மூடியே வைக்ககப்பட்டிருக்கிறக் கருவறையும். கொடுங்கல்லூர் கோயிலில் மூடியே கிடக்கும் அந்தக் கருவறை பற்றி பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனுள் சிறீ சக்கரம் இருக்கிறது, திறந்தால் அவள் கொடுமை தாங்க முடியாது என்றக் கதைகளை கேட்டிருக்கிறேன். கீழடி அந்தக் கதைகளை உடைத்து ஒரு ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொடுங்கல்லூர் கோயில் |
கீழடியின் தேடலில் தொடங்கிய என் பயணம் சேரல நாட்டின் முசிறியில் நின்றுகொண்டிருக்கிறது. காரணம் கீழடி மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்கிறது. பேரறிஞர்கள் பலர் இலக்கியத்தின் வழி வரலாற்றை அறிய முற்பட்டு ஆய்வுநூற்கள்
பல செய்திருக்கிறார்கள். அவற்றை உறுதிசெய்ய நாம் அகழ்வாய்வுகளைப்
பயன்படுத்த வேண்டும். வரலாற்றுத் தேடல் என்பது குமரியில் மாலைத் தொடர்வண்டியிலேறி மறுநாள் காலை சென்னையில் இறங்குவது போலன்று. இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. அத்தனைக்கும் என்னால் இயலுமாவென்று தெரியவில்லை.
தமிழ்ப் பேராசிரியர்களே, வரலாற்றுப் பேராசிரியர்களே இதுவரை வெளிவந்திருக்கிற அகழ்வுகளின் வழி இலக்கியத்தை உறுதி செய்யுங்கள். அதன் வழி எம் வரலாற்றை மீட்டுத்தாருங்கள். அறிவியலும் பண்பாடும் புதைந்து கிடக்கிற அந்த வரலாற்றுப் பேழைகளைத் திறந்து எமக்குப் பரிமாறுங்கள்.
தொடர்வோம்...
Friday 20 October 2017
Thursday 19 October 2017
Wednesday 18 October 2017
Tuesday 17 October 2017
Wednesday 11 October 2017
Tuesday 10 October 2017
Monday 9 October 2017
Friday 6 October 2017
Thursday 5 October 2017
Subscribe to:
Posts (Atom)