Saturday 30 November 2019

காணாமல் போன கதை - தொடர் 1

    இப்படி நிகழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சிறைக்கூடத்தில், தான் அடைபடுவோம் என்று எண்ணிப்பார்த்ததும் இல்லை. ஆனாலும் நிகழ்ந்துவிட்டது.  குனிந்து காலில் இடப்பட்டிருந்த விலங்கின் வளையத்தைத் தடவிப் பார்த்தான். சோழனின் கொல்லர்கள் தன்னெறி கொண்டவர்கள் என்று தோன்றிற்று. "விலங்குபூட்டும் வளையம் என்றாலும் உடம்பில் உறுத்தாத வண்ணம் செழுமையாகச் செய்திருக்கிறார்கள்; தொண்டியின் தச்சர்களைப்போல". மன்னர்களின் நோக்கங்கள் வேறு வேறு ஆனாலும், தமிழ் மக்களும் தொழில்குடிகளும் நேர்மையாகவே சிந்திக்கிறார்கள் என்று எண்ணியவாறே பின்புறம் சாய்ந்தான். சில்லென்றிருந்தது நன்றாக இழைக்கப் பட்டிருந்த கல்சுவர். நேர் எதிரே ஆளுயரத்திற்கும் மேலே  செவ்வகச் சாளரம். குறுக்கே செருகப்பட்டிருந்த சீரான இரும்புக் கம்பிகள். அதற்கு நேர்கீழே கைத்திரள் அளவுள்ள கம்பிகளால் ஆன கதவு. கற்றளிகள் அமைப்பதில் திறன்பெற்ற சோழர்களின் சிறைக்கூடமும் சிறப்பாகவே இருந்தது. சாளரத்தின் வெளியே காவல் மாறும் ஓசை கேட்டது. மாலை நேரம் ஆகியிருக்கக் கூடும் என்று தோன்றிற்று. அப்பொழுது காவல் வீரனொருவன் கதவருகில் வந்தான்

 "மன்னா தங்களுக்கு குடிக்க ஏதேனும் வேண்டுமா?"

"இப்பொழுது எதுவும் வேண்டாம். பிறகு சொல்கிறேன்"

"சரி மன்னா. தேவைப்படும் போது என்னை அழையுங்கள்" 

"ம்...".... சரி.. உன் பெயர் என்ன"

"அத்தி.. மன்னா"

"அத்தியா...!!! "

"ஆம் மன்னா" என்றவாறே அந்த காவல்வீரன் சென்று மறைந்தான்.

  இந்நேரம் அத்தி, நன்னன், கட்டி மூவரில் யார் ஒருவரேனும் உடன்  இருந்திருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. என்ன செய்வது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. "நன்னன் அன்று சொன்னதைக் கேட்டிருக்க வேண்டுமோ? அவன் சொன்னது போல புன்றுறையை உடனே அனுப்பியிருக்கலாம். அவனும் பெருந்தலைச் சாத்தனாரை விரைந்து அழைத்து வந்திருப்பான். வேறு காரணம் கருதி நாம்தான் தாமதப்படுத்தி விட்டோமோ?  கழுமலம் கோட்டையைக் காவாது விட்டுவிட்டோமோ?. ம்.. எப்படி இருந்த கோட்டை! " பெருமூச்செறிந்து கொண்டான்.

    கழுமலம். சேரர்களின் பாதுகாப்புக் கோட்டை. இவனது பாட்டன் குட்டுவன் கோதை காலத்தில் வடக்கே சிவகந்தவர்மனால் தோற்கடிக்கப்பட்ட அரசர் சிலர் தம் படைகளோடு பாலாற்றின் கரைகடந்து தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். நாள்பட நாள்பட அவர்கள் இன்னும் தெற்கே நகர்ந்து சோணாட்டில் புகுந்து அரசில் குழப்பங்களையும் போரையும் ஏற்படுத்தினார்கள். பின்னர் மதுரைக்குச் சென்றார்கள் என்ற செய்திகளெல்லாம் "அபிதர் மாவவதாரம்" நூலைப் படித்துக்காட்டிய மாடலன் மதுரைக் குமரனார் பாட்டனிடம் சொன்னதை சிறு வயதுப் பிள்ளையாய் இவனும் கேட்டிருக்கிறான். அந்தப் பகைவர்கள் தங்கள் நாட்டிலும் புகுந்துவிடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். சோணாடு, பாண்டிநாடு இவற்றிலிருந்து உள்ளே நுழைய ஏதுவாய் இருக்கும் வானமலையின் பகுதியில் இருந்த கழுமலத்தில் பாதுகாப்பு நிலைப்படை ஒன்றை ஏற்படுத்தத் தொடங்கினர்.

    மண்பாறைத்துண்டுகளும் மலைவேம்பு, கடம்பு போன்ற மரங்களும் சேர்த்து வலுவான கோட்டை ஒன்று எழுப்பப் பட்டது. வேகமாய்ப் பொருது பகையழிக்கும் பெருங்களிறுகள் அங்கே கொண்டுவரப்பெற்றன. அவற்றோடு பேசும் மொழியறிந்த சிறந்த பாகன்கள் குடியமர்த்தப் பட்டார்கள். வடிநவில் அம்பு செய்ய தேர்ந்த கொல்லர்கள் வந்தார்கள். வேகமாகச் சுழலும் சக்கரங்கள் கொண்ட தேர்களைச் செய்ய தச்சர்கள் வந்தார்கள். பெருவழிகள் சீர்செய்யப்பட்டன. கழுமலம் மெல்ல மெல்ல பேரூராய்  வளர்ந்தது. தொண்டியைத் தலைநகராய்க் கொண்டிருந்த இரும்பொறைகளின் சேர நாட்டில் முகாமையான படைநிலையாய் உருவெடுத்தது. பகைவரின் வானமலை நுழைவைக் காத்து நின்றது.

   பாட்டனாரின் மறைவுக்குப் பிறகு இளைஞனாய் போர்முறைகள் கற்றறிந்த பிறகு தந்தை இவனைக் கழுமலத்திற்கு அழைத்துச் சென்றார். தேரில் இருந்து இறங்கி படியேறி உள்ளே நடக்கையில்,  அந்தக் கோட்டையின் அருமை குறித்தும் அதன் தேவை குறித்தும் அவனோடு பேசிக்கொண்டே வந்தார். இனிமேல் அவன் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்றும் சொன்னார். பேசிக்கொண்டே  நீண்டுகிடந்த தாழ்வாரத்தில் நடந்து இடப்புறம் திரும்புகையில் நடுத்தர வயதுள்ள ஒருவர் எதிர்ப்பட்டார்.

"வாழி நீவிர் மன்னா"

"வருக வருக பொய்கையாரே. நலம் தானே. மாந்தைக்குப் போயிருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்பொழுது வந்தீர்கள்"

"நேற்று மாலையே வந்து விட்டேன். தாங்கள் தொண்டிக்கு அழைக்காமல் இங்கு வரச் சொன்னதற்கு காரணம் ஏதும் உண்டா மன்னா?"

"ஆமாம். இதோ கணைக்கால் இரும்பொறை, இளவல்... கழுமலம் கோட்டைக்கு பொறுப்பேற்கும் வேளை வந்து விட்டது.  எனக்கும் முதுமை நெருங்கிவிட்டது. அதனால்..."

'சொல்லுங்கள் மன்னா"

"நீரே.. உடனிருந்து கணையனின் வளர்ச்சியை உறுதிப் படுத்தவேண்டும். உமது அறிவும் மொழித்திறனும் சேர நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து. அவை நாட்டிற்காகப் பயன்படட்டும்."

"உத்தரவு மன்னா"

"உத்தரவா..." சிரித்துக்கொண்டே "நீர் தாம் எமக்கு உத்தரவிடவேன்டும். தமிழ்த்தாயின் நன்மகனே... நீர் நண்பனாய் தந்தையாய் இருந்து கணையனைக் கரையேற்ற வேண்டும். இது எமது வேண்டுகோள்"

 பொய்கையார் மன்னனின் கையைப் பிடித்துக் கொண்டார். "என் ஊனும் உயிரும் இம் மண்ணிற்காகவே இருக்கும். கவலையேதும் கொள்ளாதீர்."

"எனக்கேதும் தனிப்பட்டக் கவலையில்லை. பாண்டியும், சோழமும் சிக்கல்களில் தவிக்கும் வேளை. நமக்கும் ஏதேனும் நிகழாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணமே." 

"கவலையகற்றுங்கள். கணையனுக்கு இயல்பிலேயே நெஞ்சுரம் இருக்கிறது. பேர்கொண்ட யானைகளும், குதிரைகளும், பெருந்தேர்களும், வலுகொண்ட வீரர்களும் இருக்கிறார்கள். கழுமலம் இருக்கும் வரை சேர மன்னர் கவலைகொள்ளல் ஆகாது"

"மகிழ்ச்சி.. பொய்கையாரே. பெருமகிழ்ச்சி. அமைதியோடு தொண்டி திரும்புவேன்." என்றவர் கணைக்கால் இரும்பொறையின் பக்கம் திரும்பி 

"இன்று முதல் உனக்கு நண்பனும் வளர்ப்புத் தந்தையும் இவரே. சேர மண்ணின் பாதுகாப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" -   என்று சொல்லிவிட்டு விடைபெற்று தேரேறினார். அது மேற்கே சென்று கீழிறங்கி மறையும் வரை கணைக்கால் இரும்பொறை பார்த்துக் கொண்டு நின்றான். 
  
  அதன் பின் "ஐயா என்னால் தந்தை நினைப்பது போன்று செயல் பட முடியுமா?" என்று புலவரைப் பார்த்துக் கேட்டான்.

"கணை... கண்டிப்பாக உன்னால் முடியும். தொண்டியின் கோட்டைக் கதவில் நீ பதித்து வைத்திருக்கும் அந்த "மனிதப் பற்களை" நானும் பார்த்திருக்கிறேன்... உன்னால் முடியும்"

"ஐயா .. அது..."

                                                                                                                                தொடரும்...

Tuesday 26 November 2019

மாவீரர் வரலாறு

அதோ,
புதைந்துகிடக்கின்றன
புறப்பாடல்களின் வரிகள்.
எடுத்துத் தொகுத்தால்;
நானூற்று ஒன்று முதல்
நற்றமிழில் தொடங்கும்
இன்னுயிர் ஈந்து
தொன்மண் காத்த
மாவீரர் வரலாறு.

மூதில் மகளிர் (மாவீரர்களின் அன்னையற்கு)

நெருப்பைச் சுமந்திருந்த
கருப்பைகள்,
எரிமலைகளுக்குப் பாலூட்டிய
வார்முலைகள்,
புயல்கள் படுத்துறங்கிய
தாய்மடிகள்,
பெருங்கடல்கள் அமர்ந்திருந்த
ஒக்கலைகள்,
ஈழமெங்கிலும்
ஏராளம் அன்னையர்
மூதில் மகளிர்
ஆதல் தகுமே.
மாசாத்தியார் சொல்கொண்டு
தொழுவேன்,
கெடுகசிந்தை கடிதிவர் துணிவே.




Sunday 24 November 2019

புனைவு மறுத்த படிமங்கள்

கதிரவனைக் கலங்கடித்த முகம்
விடுதலை நோக்கிய நீள்விழிகள்
துவக்கு சுமந்த மென்தோள்கள்
தோட்டாக்கள் பூக்கும் கைவிரல்கள்
கந்தகம் படிந்த மயிர்ச்சுருள்கள்
முகடுகள் கடந்த மென்பாதம்
புறநானூற்றின் புதுப் படிமங்கள்


விடுதலையின் வேர்ச்சொல் (மாவீரர் நாள் 2019)

விலங்குகளாய் இருந்த
ஆதி நாள்தொடங்கி
குருதியின் அடியாழத்தில்
உறைந்துகிடக்கின்றன
விடுதலைப் பேருணர்வின் வேர்கள்.
எல்லைகள் என்பதும் தேசம் என்பதும்
எறும்பினத்திற்கும் உண்டென்பதே
இயற்கையின் விதி.
கழுகுகள் கடலுக்குள் வேட்டைக்குச் செல்வதில்லை.
சுறாமீன்கள் புறாக்கூடுகளைச் சூறையாடுவதில்லை.

ஆறாம் அறிவின் அகந்தை;
தாயகம் என்ற சொல்லை தகர்த்திட முனைகிறது.
ஆனைவழித்தடங்களில் சாலைகள் அமைக்கிறது.
ஆழ்கடலுக்குள் எண்ணெய் எடுக்கிறது.
விதியை மீறுகிறாய் என்று உரைப்பவரை
கொன்று புதைக்கிறது.
அச்சம்கொண்டு அடங்கி நிற்பவரின்
உச்சியில் மிதிக்கிறது.
மண்ணைத் தின்று மரங்களைத் தின்று 
பெரியவர் தின்று பிள்ளைகள் தின்று
மொழியைத் தின்று மொத்தமும் தின்றுவிட
எண்ணம் வளர்த்து இதயம் இறுக்கி
எக்காளமிடுகிறது.
 
இரண்டகம் செய்தவர் வளமுடன் வாழ,
இயலாது போயவர் ஏதிலியாய் மாற,
மண்ணும் அழுதிட நல்ல மாந்தரும் அழுதிட
இயற்கையும் அழுத பேரொலி கேளாது;
பிறந்தார் வளர்ந்தார் பிண்டமாய் இருந்தார்
பின்னொருநாள் பிணியில் இறந்தாரென்று
மந்தையாய் வாழும் மாந்தருக்கிடையில்,
மண்ணில் சிலரோ
உறைந்த வேர்களை உயிர்ப்பிக்க எண்ணி நின்றார்.

அகங்கொண்ட விடுதலைத் தாகத்தினால் - தம்
நகங்கொண்டே நரிகளின் வலையறுத்தார்.
இனத்தின்
உள்ளத்தைச் சூழ்ந்திருந்த உறைபனியை - தம்
குருதியின் செஞ்சூட்டால் உருக்குலைத்தார்.
தென்திசையில்
விண்ணதிரும் விடுதலையின் பாடலுக்கு - தம்
துவக்குகளின் குழலொலியால் இசை சேர்த்தார்.

வானிலும் பிறழாது நீரிலும் கரையாது
மண்மீது நின்றநெறி; வஞ்சகத்தின் நிழல்படிய;
வானமலை குடகடலில் தானமிழ்ந்து போனதுபோல்,
பேரினத்தின் பிள்ளைகளோ;
தாயின் கருவறையில் தாங்கிவந்த உயிர்
மாயும் இனம்காக்க மாக்கொடையாய்த் தந்தாரே.
மனிதம் மறந்துபோன மண்மேலே மாவீரரெனும்
மறையா பெயர்கொண்டாரே.

பூவுலகின் வரலாற்றை பொன்னால் வடித்தாலும்,
புண்பட்ட நன்னெஞ்சம் புலம்பிப் படைத்தாலும்,
மண்ணின் வரலாற்றை, மாந்தரின வாழ்வியலை
எழுதும் கை மறவாதே;
இறந்தும் வாழும் எம்மினத்தின் இளவல்களை.
ல்லா மொழிகளிலும்
விடுதலையென்ற சொல்லின் வேர்ச்சொல்லாய் நின்றவரை.
அடிமையாய் வாழாமல் ஆர்ப்பரிக்கும் தென்கடலாய்
மண்காக்க மாய்ந்து மாவீரர் ஆனவரை.



Thursday 21 November 2019

உறையூரின் கார் திகைந்த விளக்கீடு

        ஐயை,  மேல்மாடத்தின் பலகணி வழியாக கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள். கீழே நெடிதுயர்ந்த மாளிகைகளின் சுவர்களால் தெள்ளிய நேர்கோடாய் நீண்டு கிடக்கிறது உறையூரின் நெடுந்தெரு. மேற்கே வானமலையின் தாழ்வாரத்தில் கதிரவன் இறங்கியிருக்க வேண்டும். மெல்லிய மஞ்சள் ஒளியில் சிக்கிக் கிடந்தது உறையூர். இன்னும் நான்கு நாட்களில் முழுநிலவு வருமென தக்கார் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவளும் "செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி" அதை உறுதி செய்தே வைத்திருக்கிறாள். தொலைவில் கிழக்கே கல்லணை இருக்குமிடம் நோக்கி பார்வையும் எண்ணமும் திரும்புகின்றன.

   ஐப்பசி மழையில் பொன்னியில் வந்த பெருவெள்ளம் கல்லணையை நிரப்பியிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து வேறு. பெரும் பொருள்செலவில் பாட்டன்கள் சீர் செய்த பொன்னியின் நீள்கரையும், இன்னொரு பாட்டன் எடுப்பித்த கல்லணையும் மக்கள் பயன் பாட்டில் தொடர்ந்து இருக்கவேண்டும். அது மன்னர் யாவருக்கும் பெரும் பணியாகக் கொள்ளப்பட்டிருந்தது. இந்தக் கார்காலம் கட்டுமானங்களில் ஏதாவது சேதம் ஏற்படுத்தியிருக்கிறதா என்று பார்க்கச் சென்றிருக்கும் தந்தை இந்நேரம் திரும்பிக்கொண்டிருப்பார். உடன்பிறந்தான் போர்வைக்கோ பெருநற்கிள்ளி உடனிருந்தால் தந்தைக்கு இத்தனை சிரமம் இல்லை என அவள் மனதுக்குள் தோன்றிற்று.
 
   பெருநற்கிள்ளியோ, பெருங்கொடையாளனான தந்தை தித்தனோடு வேறுபட்டு தனியாகப் போய்விட்டான். அவன் சில வேளைகளில் புல்லரிசிக் கூழ் மட்டுமே அருந்துகிறான் என்று தோழியர் கூறக் கேட்கையில் எல்லாம் ஐயையின் உள்ளம் வாடத்தான் செய்கிறது. ஆனால் அண்ணன் பெருவீரன் என்பதில் அவளுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. அவன் ஆமூர் மல்லனைப் பொருது வீழ்த்தினான் என்ற செய்தியறிந்து மகிழ்ச்சி அடைந்தாள். அதைவிட அதை அருகிருந்து கண்டு, காதல் கொண்டு பல்லாயிரமாண்டு நிற்கப்போகும் பாடல் இயற்றிய நக்கண்ணை குறித்து பெருமகிழ்ச்சியுற்றாள். தந்தையையும் தன்னையும் பிரிந்து நிற்கும் அண்ணனுக்கு நக்கண்ணையின் காதலும், அணுக்கமும் மிக்கத் தேவையான ஒன்றென அவள் நினைத்தாள். அவளைக் காண ஆசை கொண்டாள். மன்னர் வழி இல்லையென்றாலும் காதல் கொண்ட நக்கண்ணையே அண்ணனுக்கு ஏற்ற பெண்ணென நினைத்தாள். டக்.. டக் என  குதிரைக் குளம்பொலி எழும்பி எண்ணத்தைக் கலைத்தது. தந்தை வந்துவிட்டார் போலும். படியிறங்கினாள். முற்றத்துக்குள் வந்து கொண்டிருந்த தந்தையைப் பார்த்தாள். முகத்தின் வாட்டமறிந்தாள். 

"என்ன ஆயிற்று. கல்லணையில் ஏதும் பிரச்சனையோ" என்று வினவினாள்.

 "அங்கே ஒன்றும் குழப்பமில்லை. உறையூருக்குத்தான் தொல்லை வரப்போவதாய்ச் செய்தி கிடைத்ததம்மா." 

"எளிதில் நுழைய முடியா காட்டரணும், ஏற முடியா மதிலரணும் இருக்கும் உறையூருக்கு யாரால் தொல்லையப்பா"

"வடுக மன்னன் கட்டியும் அவனுக்குத் துணையாய் வாண அரசனொருவனும் உறையூரை முற்றுகையிடப்போவதாய்ச் செய்தியம்மா"

   ஐயை சிரித்தாள். "இதற்காகவா வாட்டமாக இருக்கிறீர்கள். பெரும் படையணி கொண்டது தானே உறையூர். ஐப்பசி முடிந்து கார் திகைந்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகிவிட்டன. மழைக்காலத்தில் போர் செய்வதில்லை என்ற மரபு கொண்டதால் வீரர்கள் எல்லோரும் உறையூரில் தான் இருக்கிறார்கள். சில பணித் தலைவர்கள், களத் தலைவர்கள் மட்டும் வெளியே ஆங்காங்கே இருக்கிறார்கள். அவர்களும் கூட நான்கு நாட்களில் முழுநிலவன்று வந்து விடுவார்கள்.

   அவர் வரவு நோக்கிக் காத்திருக்கும் பெண்டிரெல்லாம் குடமூக்கின் விளக்குகளை புளியிட்டு விளக்கி வைத்திருக்கிறார்கள். காவிரியின் வடகரைக் களிமண்ணில் செய்த புது விளக்குகள் தெருக்களில் விற்பனைக்காகக் குவித்து வைக்கப் பட்டிருக்கின்றன. முது பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் செவ்வரிப் பறையை இன்றே அடித்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள். கோல்கொண்டு பறையடிக்கும் போது கைகளில் சிக்கும் பொன்னணிகளைத் தள்ளிவிட்டுவிட்டு ஓங்கி ஒங்கி பறையைக் கோலால் அறைகிறார்கள்.
  
     இன்னும் நான்கு நாட்களில் பெண்டிரும் பிள்ளைகளும் கொளுத்திவைக்கும் விளக்குகள், வரிசையாக உறையூரின் தெருவெங்கும் ஒளிவிடும். சிலர் புகார்த்துறையின் வெண்சங்கெடுத்து உறையூரின் நெடுந்தெருக்களில் ஊதுவார்கள். ஊரெங்கும் நுண்ணியதாய் பனி அரும்பும். காவிரியின் கரையில் நாணலின் வெண்பூக்கள் சிரிக்கத் தொடங்கும். முழுநிலவின் மாலையில் சருக்கரையும் வெண்ணரிசி மாவும் கலந்த இனிப்பொடு உள்ளமும் களி கொள்ள சிறுவர் எழுப்பும் பறையிசையும், ஆட்டை முரசின் அதிர்வொலியும், ஓங்கி இயம்பும் புகாரின் வெண்சங்கொலியும் மதிலரண் தாண்டி காட்டரண் நுழைந்து வெளியே நிற்கும் வடுகரின் காதறையும். இன்னும் உமது அரசவையின் கிளை ஒலியும் அவர் செவிப்பறை கிழிக்கும். அந்தப் பெருவோசை தாங்காது வந்த திசையில் அவர்களெல்லாம் அச்சமுற்று ஓடிவிடுவார்கள். அதனால் அந்தக் கவலை விடுத்து, உள்ளம் உவப்ப ஐப்பசி நீங்கி  கார் திகையும் நாள் நோக்கி நிற்கும் ஊருக்கு வாழ்த்துரைப்பீர்." என்று தந்தை தித்தனை நோக்கி விடையிறுத்தாள்.

  "ஒரு வேளை அதன் பின்னரும் அவர் நகராதிருந்தால் என்ன செய்வது"

   "முழு நிலவின் மறுநாள் வீரர்களை அனுப்புங்கள் தந்தையே. வடுக நாட்டின் எல்லை வரை அவர்களைத் துரத்தி விட்டுத் திரும்பட்டும்"

   "சரி மகளே. மண்ணின் கல்வியை பால்கோடாது ஆண் பெண் இருவருக்கும் கொடுத்ததால், உன் அண்னனின் இடத்தை நீ நிரப்புகிறாய். என் குழப்பம் நீங்கிற்று. விளக்கீடுக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யப் போகிறேன். நன்று" எனக் கூறி தித்தன் அவ்விடம் விட்டு அகன்றான்.

   ஐயையின் உள்ளத்துக்குள் பல்வேறு எண்னங்கள் வந்தன. போர் வந்து விட்டால் படை வீரர்கள் ஊர்விட்டுச் செல்வார்கள். அவரோடு களவில் இருக்கும் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்குவார்கள். மணமுடித்தவரோ ஊரறியப் புழுங்குவார்கள், நக்கண்னையின் அழியாத பாடல் போல. என்ன செய்வது. மறுபடியும் ஒரு கார்காலம் வரும் வரை தோழிகளோடு தான் பொழுது செல்லும். கண்டிப்பாக முழுநிலவு வரை யாருக்கும் பிரிவில்லை. இன்னும் நான்கு நாள்களுக்குப் பின் வெண்கோடுகளாய், மாலையில் விளக்கெரியும் உறையூர் எப்படி இருக்கும் என்று எண்ணிய படியே மேல்மாடத்தை நோக்கி நடக்கலானாள் ஐயை.
-----------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்புகள் 
1. கார்த்திகை தமிழ்ச் சொல்லாக இருக்கக் கூடும். அதன் பொருள், கார்காலம் திகைந்து  கூதிர்காலம் தொடங்கும் திங்கள்.

    திகை digaidal, செ.குவி (v.i.)

    1. முடிவுறுதல்; to complete, to come to an end.
      "மாதந் திகைந்த சூலி" (நெல்லை);
    2. தீர்மானமாதல்; to be settled.
    அதன் விலை இன்னும் திகையவில்லை (உ.வ.);
      [திசை→ திகை]
      (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி)

2. நற்றிணை 58
3. புறநானூறு 83, 84, 85
4. அகநானூறு 226


நூல்கள் தரவுகள்
 1. தென்னாட்டுப் போர்களங்கள் - க.அப்பாத்துரையார்.
2. சோழர் வரலாறு - மா.இராசமாணிக்கனார்.
3.உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி 
4. எட்டுத்தொகை உரை - ஔவை துரைசாமி
5. செந்தமிழ்ச் சொர்பிறப்பியல் அகர முதலி
6. தமிழ் இணையக் கல்விக் கழகம் 
7. மரபு வழித் தமிழ்த்தேசிய தக்கார் அவையம் 



Monday 18 November 2019

வெறும் பயணிகள் நாங்கள் (வ.உ.சி. நினைவுநாள் 2019)

ஒரு தொடர்வண்டிப் பயணத்தில்
சாளரங்களின் வெளியே கடந்துபோகிற
மரங்களைப் போலே,
உங்களையெல்லாம்
கடந்தவுடன் மறந்து போனோம்.
அதே தடம்
அதே வண்டி
இன்னொரு பயணம்
அப்போதும்
நீங்கள் இருந்த நினைப்புகூட
எம்மிடம் இல்லை.
நீங்கள் வாழ்ந்தீர்களா
வெட்டப்பட்டு வீழ்ந்தீர்களா
எந்தக் கவலையும் எமக்கில்லை.
எங்கள் மூச்சுக்காற்றில்
நீங்கள் கொடுத்த உயிர்வளியும்
இருக்கிறது என்ற எண்ணமும் இல்லை.
ஆனாலும்
நீங்கள் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு.
கடலில் கரையும் பெருங்காயமாகும்
வெறும் பயணிகள் நாங்கள்.


 சிராப்பள்ளி ப.மாதேவன்
18/11/2019

 

Thursday 7 November 2019

வள்ளுவம்... இன்று நேற்றல்ல

இந்த "எண்ணம்" தான் மாந்தரினம் இந்த நொடிவரை நடந்துவந்திருக்கிற பெருவழிப்பாதையில் இடப்பட்ட முதல் கல்.
இயற்கையின் விதிவழியில் எல்லா உயிர்களுக்கும் இனப்பெருக்கத்திற்கென உடலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த "காமம்" இந்த எண்ணத்தால் மனதிற்கு மாற்றப் பட்டது. விலங்குகளாய் இருந்தபோது "உணர்வு' நிலையிலிருந்த காமம்,  உருவகப்படுத்தும் திறனும் நினைவு வலைப்பின்னலும் பொருந்திய ஆறாம் அறிவால் "உணர்ச்சி" நிலைக்கு மாற்றப்பட்டது. இப்படியொரு நிலையில்... வண்ணத்துப்பூச்சி, மயில் போன்ற உயிர்கள் வண்ணம் வடிவம் போன்ற அழகுணர்வில் இணைதேடுவதைக் கண்ட மாந்தனின் ஆறாம் அறிவு அதைப்பற்றி எண்ணத் தலைப்பட்டிருக்கக் கூடும்.

இப்படி, இன்பம் துய்ப்பதில் தோன்றிய எண்ணங்களும், தலைமைப் பண்பை நிலைநிறுத்திக் கொள்ள விழைந்ததில் தோன்றிய அறிவும் பின்னிப் பிணந்ததில் "பொருள்" என்ற பெருஞ்சொல் பிறந்தது. ஒரு நிலையில் இன்பம் துய்ப்பதற்கான நுழைவாயில் "பொருள்" என்று ஆனது.

பொருள் தேடிப் புறப்பட்ட மாந்தரினத்தின் பயணம் நாகரிகத்தின் எல்லைகளை விரித்தது. இடப்பெயர்தல் நிகழ்ந்தது. மொழிகள் பிறந்தன. புதிய தலைவர்கள் தோன்றினார்கள். எல்லைகள் வேறுவேறாயின. இனகுழுக்களுக்கு இடையே நடந்த சிறு சிறு சண்டைகள் எல்லைகளுக்கு இடையே நிகழும் பெரும் போர்களாயின.

தலைமையும் அறிவும் முன்னிலை பெற்றன. கதைசொல்லிகள் தோன்றினார்கள். வீரத்திலும் அறிவிலும் தலைவர்கள் பட்டியலிடப்பட்டார்கள். 

தமக்கிடையே பொருள்குறித்து நடக்கும் போர்களில் தம்மினமே அழியக்கண்டு, பொருளீட்டுதற்கும், உயிர்க்கொலைக்கும் சில அறங்களை வகுத்துக் கொண்டார்கள். அவற்றையும் விலங்குகளிடமிருந்தே கற்றுக் கொண்டார்கள். புலி பசியில்லாதபோது மானைக் கொல்வதில்லை. தன்னோடு உண்ணவரும் சக உயிர்களை உண்ண அனுமதிக்கும். வெறும் உயிர்க்கொலை செய்வதில்லை. தலைமையை ஏற்று வழிநடக்கும்.  ஆண் புலிகள் பெண்புலிகளைப் பாதுகாக்கும். இந்தப் பண்புகளெல்லாம் புலியிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. சோழர்களின் புலிச்சின்னமும் இதன்காரணமானதாக இருக்கலாம். 

 இணைசேரவோ, உணவு பகிர்ந்துண்ணும் போதோ சண்டையிடும் விலங்குகள் ஒன்றையொன்று கொலைசெய்யும் நோக்கில் இருப்பதில்லை. துரத்துவதில்தான் நோக்கம் வைத்திருக்கும். வல்லமையில்லாத விலங்கு தன் தோல்வியை உணர்ந்து நகர்ந்து சென்றுவிடும். இந்த விலங்குப் பண்பையெல்லாம் அறமென மதித்து தன் அறிவில் இணைத்து, எல்லா விலங்குகளின் ஒற்றை வடிவமாய் பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிகத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துவிட்டது மாந்தரினத்தின் ஒரு பெருங்கூட்டம்.

இடம்பெயர்ந்துபோன சில இனக்குழுக்கள் விலங்குகளோடும், நாடோடித் தன்மையோடும் இந்தக் கூட்டத்தோடு இணைந்துவிட வந்தன. இரண்டு வெவ்வேறு நிலையில் இருந்தவர்களால் உடனடியாக இணைய முடியவில்லை.

 ஏற்கனவே நாம் பார்த்தோமே "தலைமை"க் குணம் என்பது விலங்குப் பண்பு என்று (சொல்லப் போனால் இன்றுவரை நாம் கடைப்பிடித்து வரும் பண்பு) அது எல்லா மாந்தருக்கும் பொருந்தும். அதனால் அவர்களும் தலைமையேற்கத் தலைப்பட்டார்கள்.

ஆனால்.... நீண்ட நெடிய இந்த நாகரிகப் பயணத்தில் அவர்கள் குறுக்கு வழியில்தான் நுழையவேண்டி இருந்தது. இந்தச் செய்கை இங்கே செம்மையாக நின்றுகொண்டிருந்த வீரத்தின் மீதும், அறிவின் மீதும் அது சார்ந்த அறத்தின் மீதும் நசிவை ஏற்படுத்தியது. பொருளுக்கும் இன்பத்திற்கும் குறுக்குவழிகள் பிறந்து, பல்லாயிரம் ஆண்டுகள் வளர்ந்த அறம், நாகரிகம் சிதைவுற்றது.

இப்படி சிதைந்து நின்ற சில நூறாண்டுகளில், தம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையும் நடந்துவந்த பாதையும் மறந்துபோன ஒரு கூட்டத்தின் நடுவே பல்லாயிரமாண்டு வாழ்க்கையின் சாற்றை வடித்தெடுத்து, வாழும் வழி சொல்லி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ப்போகிற மாந்தர்களுக்காக வைத்துவிட்டுப் போகிறார் வள்ளுவர்.


(மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய எனது "காமத்துப் பால்" கட்டுரையின் ஒரு பகுதி) 

https://youtu.be/QWyzFir5YuE

சிராப்பள்ளி ப.மாதேவன்