Friday 21 September 2018

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 2


  
இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1 ன் தொடர்ச்சி:

பிட்டங்கொற்றனின் குதிரைமலையில் புன்கம் உண்டுவிட்டு காலாற நடந்து தென்குமரியின் அருகே தாடகைமலை அடிவாரத்தை அடைவதற்குள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. பண்பாட்டின் பெரும்பயணம் அது. வேர்கள் எவை என முழுவதுமாக அறிந்துவிட முடியவில்லை எனினும், விழுதுகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. வேர்கள் ஏதேனும் மலைமுகட்டில் இருக்கலாமென்றே தோன்றுகிறது.

"கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" யல்லவா. 
மருதம் தோன்றா காலத்தே குறிஞ்சியிலும், முல்லையிலும் வாளொடு, இரும்பொடு அல்லது பிட்டங்கொற்றனின் "வடிநவில்" அம்பொடு வாழ்ந்த பழங்குடி அல்லவா. வானமலையின் முகடுகளில் எங்கேனும் புன்கத்தின் வேர்கள் இருக்கலாம். அல்லது தேவனேயப் பாவாணரும், கா.அப்பாத்துரையாரும் சொன்னது போல தென்கடலுக்குள் மூழ்கியிருக்கிற "குமரிக் கோடு" மலையின் முகடொன்றில் இருக்கலாம். ஆதிச்சநல்லூர் அரிசியே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். எனவே வேர்களைத் தேடுவது பெரிய வேலையே. ஆனால் விழுதுகளைக் கண்டறிவது நம்மால் இயலுகிற ஒன்றே. விழுதுகளைப் பிடித்து மேலேறினால் அவை கிளைகளை அடையும். கிளைகளில் தொடர்ந்தால், எல்லாக் கிளையும் ஒரு மரத்தினது என்பதறிவோம். எனவே விழுதுகளைத் தேடினேன்.

நான் தொழில்முறை ஆய்வாளன் இல்லையெனினும் இந்த நோக்கில் நண்பர்களிடமும், உறவுகளிடமும் கேட்டேன். முகநூல் வழியாகவும் வேண்டுகோள் விடுத்தேன். கிடைத்தவை "அறிவும்", "வியப்பும்". அவற்றை அப்படியே தருகிறேன்.  தகவல் சொன்ன அனைவருக்கும் நன்றி.

புலவர் வல்வில் ஓரி : ஐயா, வணக்கம்! எனது ஊர் ஆயக்காரன்பும். தற்போதய நாகப்பட்டினம் மாவட்டம் தென் பகுதியில் வேதாரண்யம் ஒன்றியத்தில் கடற்கரை ஊராகும். ஒன்றியத்தின் பெரும்பகுதியில் காவிரி பாசனம் கிடையாது. ஏனெனில் இது மேடான பகுதி. வடகிழக்கு பருவமழையின்போது,

Thursday 20 September 2018

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1


 
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
இன்று எங்கள் வீட்டில் "நாள் கருது" ஆதலால் இன்று காலை மட்டும் என் பேரனுக்கு விடுப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம், 

இன்று எங்கள் வீட்டில் "புத்தரிசி" ஆதலால் இன்று மதியம் மட்டும் என் பேரனுக்கு விடுப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம் 

என கிறுக்கலான கையெழுத்தில் ( தெக்குப் பள்ளத் தெரு சந்தியில பரப்பிய மணலில் சுட்டுவிரல்கொண்டு எழுதிக் கற்றுக் கொண்டதாம் )  எழுதிக் கையொப்பமிட்டு என் தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள்  1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் சொல்லும் போது "இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா" என்று சிரிக்கிறான்.  ஆனால் கொடுத்தார்களே, அது உண்மைதானே.

இந்தப் பேச்சு ஆரம்பித்த இடம் சுவையானது. அண்மையில் கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பேரியாற்றின் கதை தேடுகையில் சேரமான் கோதையும், பிட்டங்கொற்றனும், பொலந்தார் குட்டுவனும் எதிர்ப் பட்டார்கள். அப்பொழுது என் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சென்ற பிட்டங்கொற்றனே இதற்குக் காரணம். புறநாநூற்றின் 168 வது பாட்டு பிட்டங்கொற்றனை கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் பாடியது.  புறநாநூற்றின் எல்லா படல்களுக்கும் கால வரையறை செய்யப்படவில்லையென்றாலும் இந்தப் பாடல் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு மறுப்புரை எதுவும் காணக்கிடைக்கவில்லை. 

"அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி  - 5

நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
 உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி  -10

வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல் – 15

நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் – 20
பாடுப வென்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே". (புறநாநூறு -168) 
குதிரைமலையின் ஒரு அருவி

அருவி பேரிரைச்சலுடன் நீரூற்றும் அகன்றவிடத்து மூங்கில்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றின் மீது மிளகு கொடிகள் படர்ந்து நிற்கின்ற மலைச் சாரலில் காந்தள் பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன.  காந்தட் செடியின் கொழுத்துச் செழித்தக் கிழங்கை காட்டுப்பன்றிகள் தன் கூட்டத்தோடு வந்து கிண்டித் தோண்டியெடுக்கின்றன. வெள்ளை வெளேரெனக் கிழங்கு மிளிர்கின்றதாம். அவை கிளறிவிட்டுச் சென்ற மண் ஏர் பூட்டி உழுதது போல் இருக்கிறது. 
 
"நன்னாள் வருபத நோக்கி". பண்டைய தமிழர் மரபில் ஆட்டை தொடக்கமும், வேளாண்மைக்கான பாட்டமும் ( விதைப்புக்கான நாட்களும் ) பறையறைந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இவை பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கலாம். அப்படியொரு  நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து, குறவர் தாம் உழாமல், பன்றிகள் கிளறிவிட்டுப் போன நிலத்தில் சிறிய தினையை விதைக்கிறார்கள். அது பெரிய தோகை விரித்து விளைந்து பருத்தக் கதிர் முற்றிக் கிடக்கிறது. அந்தப் புதுவிளைச்சலை அறுத்து, புதிது உண்ணவேண்டி திட்டமிட்டு வேலை நடக்கிறது.

முந்தைய நாள் மான் இறைச்சி வேகவைத்த,வெளிப்புறம் கழுவப்படாமல்  வானின் கருவண்ணத்தில் இருக்கிற, புலால் நாறும் பானையில் காட்டுப் பசுவின் தீஞ்சுவைப்பால் கறக்கப்பட்டு நுரையுடனே அடுப்பிலேற்றப் படுகிறது. அதனுடன் தினையரிசியும் இடப்படுகிறது. விறகாகச் சந்தன மரத்துண்டுகள்

Saturday 1 September 2018

மணற்கேணி - வள்ளுவர் சொல்லாடல்

ங்கப் பாடல்களில் ஏராளமான உவமைகளைக் காணலாம்.  வாழ்வியல், வரலாறு, உயிரியல், வானியல் என ஏராளமான செய்திகளை ஆயிரமாயிரம் ஆண்டுககளாக நமக்குச் சுமந்து வருகின்றன அந்த உவமைகள்.  காப்பியங்களில் வருகிற உவமைகள் சிறப்புடையதாய் இருக்கக் காணலாம்.   ஆனால் வள்ளுவர் எடுத்தாளும் உவமைகள் நம்மை பெருவியப்படையச் செய்யும். தான் வாழும் காலத்தின் வாழ்வியல் நெறிகளை இன்னொரு தலைமுறைக்கு பிழையின்றி எடுத்துச் செல்வது என்பது அத்தனை எளிதான செயலன்று. வள்ளுவருக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது ஏழு சொற்கள் மட்டுமே. அதற்குள்ளாகச் சொல்லப்படும் உவமை என்பது மிக நுட்பமானதாக இருக்க வேண்டும். அதைக் கசடற அறிந்திருத்தல் வள்ளுவருக்கு தேவையாகிறது. இரண்டு அல்லது மூன்று சொற்கள் உவமை, பொருள், பண்பு,  உவமைஉருபு போன்றவற்றிற்காகச் செலவானால் மீதமிருக்கிற நான்கு சொற்களில் ஒரு கருத்து அல்லது நெறியைச் சொல்லவேண்டும். ஆண்டுகள் தாண்டியும் சொல்லப்பட்ட உவமைப்பண்பு பழுதுபடாமல் இருத்தல் வேண்டும். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் குறட்பாக்களில் உவமை சொல்வது மிகக் கடினமான ஒன்றே. ஔவைக்குறள் கூடச் சிற்சில இடங்களில் அமைதி வேண்டி நிற்கிறது. ஆனால் வாள்ளுவர் சொல்லாட்சியோ காலங்கள் தாண்டியும் நின்றுகொண்டிருக்கிறது. அப்படி மிக நுட்பமான சொல்லாட்சியைத் தாங்கி நிற்கும் குறளொன்றைப் பார்ப்போம்.

"தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு

மணக்குடவர் உரை: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக'