Monday 27 November 2023

வீரவணக்கம்


.          =============
.               🙏 🙏 🙏
.          =============

கரை தழுவும் தென் கடலின்
திரை முழுதும் உங்கள் முகம்.

மரணத்தின் எதிரிருந்து விருந்துண்ட மாவீரர்கள் நீங்கள்.

புறநானூறு சுமந்த ஓலைகள்
புறமீன்றப் புலிக்குட்டிகள் நீங்கள்

பகைவருக்கும் சோறளித்தப்
பண்பாட்டின் பெரு விளைச்சல் நீங்கள்.

பெண்ணும் முதியோரும்
பேணிச்சிறந்தப்

போர்நெறியின் பிள்ளைகள்

நீங்கள்.

மனிதத்தை நேசிக்கும் காலம்
மறுபடி
உங்களை உயிர்ப்பிக்கும்.

அன்று;

எல்லா மொழிகளிலும்
பெயர்த்து எழுதப்படும்
'தமிழன் என்றொரு
இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு'
என்றத் தமிழ் வரிகள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
27-11-2023
===========================

Saturday 25 November 2023

கோபுரம்

பெரும்புயல் வதிந்த முகவரி
எரிமலை பிறந்த கருக்குழி
பெருவிறல் நடந்த வளமனை
உரகடல் வணங்கும் கோபுரம்.

Saturday 18 November 2023

வ.உ.சி நினைவேந்தல் 2023 - 2

 

பஞ்சாலைத் தொழிலாளர்
நெஞ்சகத்து உரம் சேர்த்து
கெஞ்சும் நிலைக்கு வஞ்சகரை
அஞ்சவைத்து உழைப்பின் பெறுமானம்
உறுதி செய்த கதை!

கடலே எண்ணெயாாய்
காற்றே நூல் திரியாய்க்
கனன்றெழுந்தப் பெருநெருப்பு
கப்பலாய் மிதந்து கம்பெனியார்
வணிகம் சிதைத்த கதை!

தளைப்பட்டோர் நலம் வேண்டிச்
சிறைக் கொடுமைக் கஞ்சாது
முறைமை தவறிய முரடன்செய்த
கறைகள் மீது வழக்குரைத்து
அறையோலை வாங்கி அணிசேர்த்த கதை!

ஐயா சிதம்பரனார் அறவாழ்வில்
ஆயிரமுண்டு கதைகள், அவர்
நினைவோடு இந்நாளில் மனக்கொள்வோம்;
பாயிரம்போல் அக்கதைகள்
பிள்ளைகட்குச் சொல்லிடவே.

Friday 17 November 2023

பெரியவர் வ.உ.சி . நினைவேந்தல் 2023 - 1


 

உறைந்து போன காலத்தின்
ஓடுடைத்து
உயர்ந் தெழும் கதிரவனாய்
மோடடைந்து
காரிருள் மூடிய எங்கள்
உள்ளம்
சீர்பெற்று மண்ணுயரும்
சிந்தைகொள்ள
போர்ப்பறை ஒலியெனச்
சொந்தவாழ்வை
நேர்கடன் போல்வாழ்ந்த
தாளாளன்
சேர்ப்பன் சிதம்பரனார்
நினைவேந்தி
ஆர்த்தெழட்டும் தமிழ் மண்ணே!