Tuesday 28 August 2018

வடக்கிருத்தல்

எப்படிப்பட்ட நண்பன் இருந்தால் நீங்கள் பிசிராந்தையார் செய்த செயலைச் செய்யத் துணிவீர்கள்
அல்லது
எந்த நட்புக்காக பிசிராந்தையாரா மாறுவீங்க ...? ஏன்....?
இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் கற்பனை சிறகை விரிக்கலாம்.....

என்று "நிலாச்சோறு" முகநூல் குழுமத்தில் கேட்கப்பட்டபோது 23/08/2018 அன்று எழுதிய பாடல் இது. முதலிடத்தையும் பெற்றது. தேர்வு செய்த நடுவர் அடேய் சர வணா அவர்களுக்கும், சிறப்பு நடுவர் பரமசிவம் நெடுஞ்சேரலாதன் அவர்களுக்கும் நன்றி.
---------------------------------------------------------------------------------------
 
 
காவிரி திறந்து விடு

இல்லை என்

கழுத்தறுத்து இறப்பேன்

என்றுரைக்கும்

கருநாடக நண்பன்
,

முல்லைப் பெரியாறு

அணையை

முழுவதும் நிரப்புங்கள்

இல்லை அதில்

மூழ்கி இறந்திடுவேன்

என்றுரைக்கும்

கேரள நண்பன்
,

தமிழர் மீதினி

தாக்குதல் தொடுத்தால்

தலை கொய்து

நவ கண்டம் கொடுப்பேன்

என்றுரைக்கும்

சிங்கள நண்பன்

இவரில் எவரேனும்

என் எதிரில் இறப்பின்

மகிழ்வுடன் வடக்கிருப்பேன்

வாழும் என் நாடு.

-----
சிராப்பள்ளி மாதேவன்.

 
 


Monday 27 August 2018

மேற்குத் தொடர்ச்சிமலை - திரைப்படம்


நீண்டு நெளிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியின் வாழ்வியலை, ஆனிச் சாரலாய் பெய்துவிட்டுப் போகிறது "மேற்குத் தொடர்ச்சிமலை" திரைப்படம்.  ஏராளமான விருதுகளையும் அதைவிட ஏராளமான திறனாய்வுகளையும் பெற்றிருக்கிறது இந்தப் படம். புதிதாய் என்ன சொல்ல

ஆனாலும்,  இந்த மலையின் கடைசித் துணுக்குகளின் நடுவே பிறந்து வளர்ந்த  எமக்கும் எதையேனும் விட்டுவைத்திருக்கும் அது. படம் பார்த்த போது அரங்கில் பக்கத்தில் இருந்த ஒருவர் "என்ன அதுக்குள்ள இன்டெர்வெல் வந்துருச்சு" என்றார். சில விமரிசனங்களிலோ படம் மெதுவாய் நகர்கிறது என்கிறார்கள்.  இது முரண் இல்லை இயல்பு. வேகமான நகர வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த வாழ்வியல் மெதுவாக நகர்வதாகத் தோற்றமளிக்கும். அதுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் அந்த மக்கள் பெற்ற பெரும் பேறு.

நகர வாழ்க்கையில் உயிர்ப்போடு இருப்பது போல் தோற்றமளிக்க நாம் பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. பணம் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கவேண்டிய நிலை நோக்கி நர்ந்து வந்துவிட்ட நம்மால்,

"சீனிய உள்ள வெச்சுட்டு கல்லால காசு இருக்கு எடுத்துக்கோ"

"பத்தரம் முடிச்சிட்டு வாங்கிக்கிறம்பா. "

" சாமி படத்துக்கு கிட்ட வெச்சுர்றேன்" என்பன போன்ற பணத்தைவிட மனிதர்களை , அத்தனை மனிதர்களையும் நேசிக்கிற, நம்புகிற உரையாடல்களை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியவில்லை. என்னதான் பணத்திற்காக மலையில் சுமை தூக்கி ஏறினாலும், பணத்தை விட அவர்கள் மனிதர்களையே நேசித்தார்கள் என்கிற வியப்பான வாழ்வியல் செய்திதான், அதையும் தனியாகச் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களை நகரத்தின் திரையரங்குகளில் உலவவிட்ட இயக்குனர் லெனின்பாரதியின் உத்திதான் இந்தப் படத்தை இத்தனை உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.


திரையில், அறிந்த மொழியில், அறிந்திராத ஒரு வாழ்க்கையை விழி மூடாமல்  பார்த்துக் களிக்கிறார்கள் இளந்தலைமுறையினர். கடந்துவந்த பாதை நினைவுக்கு வர கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வயதானவர்கள்.

படத்தில் கதையொன்றும் இல்லை. தேனில் குழைத்த உரையாடல்கள் இல்லை. நடிகர்கள் இல்லை. இசையில்லை. பெருங் காட்சியமைப்புகள் இல்லை. அப்புறம்... சொல்ல மறந்துவிட்டேன்.


அதில் நீங்கள் இருக்கிறீர்கள்.  உங்கள் உறவுகள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் ஐயாவிடமும் அம்மாவிடமும் பேசிய பேச்சுகள் இருக்கிறது. உங்களுக்காகவோ  அல்லது உங்கள் மூத்த தலைமுறையில் எவருக்காகவோ படிப்பதற்கோ, திருமணத்திற்கோ விற்ற நிலம் இருக்கிறது. பெருநகரொன்றில் நீங்கள் வாங்கியிருக்கிற வீட்டிற்கான தவணை இருக்கிறது. நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள், நீங்கள் சிரித்ததோ அல்லது அழுததோ அல்லது சினந்ததோ அல்லது மகிழ்ந்ததோ இசையாய்க் கேட்கிறது. நீங்கள் பார்ப்பதெல்லாம் உங்கள் வீட்டு முற்றமும், படிப்புரையும், சோத்துச் சட்டியும் தான். அதனால்தான் உங்களையும் மறந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.


அதோ அந்தப் பாதையில்  ஏழெட்டு பேர் மூட்டை சுமந்து செல்கிறார்களே, அதில் ஒருவன் நானாகக் கூட இருக்கலாம். நீண்ட நெடுங்காலமாய் அந்தப் பாதை இருக்கிறது. ஆம். செவ்விலக்கியம் தொடங்கி செல்பேசிக் காலம் வரை நீண்டு நெளிந்து கிடக்கின்றன மேலமலையும் அந்தப் பாதையும். ஒருமுறை நடந்து பாருங்கள். கண்டிப்பாக,  நிலமற்ற  அந்தக் கிறுக்குக் கிழவி உங்களுக்குத் தென்படுவாள். ஆனால் அவள் கண்டாங்கிச் சேலை கட்டிக்கொண்டு, கையில் வளவி போட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டுமென்பதில்லை.



நன்றி.

சிராப்பள்ளி மாதேவன்,
சென்னை
27/08/2018

Friday 17 August 2018

பாதை மாறும் பேரியாறு

அது கி.பி. 1341 ஆம் ஆண்டு. முசிறித் துறைமுகம் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதே முசிறியின் இயல்பு. சிறப்பாகக் கட்டப்பட்ட உரோம நாட்டு கலங்கள் பேரியாற்றின் வெண்நுரை கலங்க பொன் சுமந்து வந்து இறங்கிய பெருமை கொண்டது அது என்கின்றன சங்க இலக்கியங்கள்.

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளம்கெழு முசிறி   (அகம் - 149) 

முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, (புறம் 343)


இரண்டாம் நூற்றாண்டு "தாலமி" யும் இதைக் குறிப்பிடுகிறார். ரோமர்களின் தபுலா பேன்டிங்ஜெரியான (The Tabula Peutingeriana) வில் முசிறியின் புவியியல் வரைபடம் கூட இருக்கிறது.

முசிறியின் பண்டைய ரோம வரைபடம்
இப்படி நாலாயிரம் ஆண்டுகளாய் பெருந்துறைமுகமாய் விளங்கிய முசிறி அன்றுதான் தன் கடைசி நாள் என்பதறியாது சீன வணிகர்கள் அங்குமிங்கும் நடமாட,  தன் வணிகத்தைத் தொடங்கியிருக்கக் கூடும். காலையிலேயே பெருமழைக்கான அறிகுறிகளை "வேணாடு மூப்பில்"  கண்டிருந்தாரோ அல்லது அந்தப் பேரறிவைத் தொலைத்திருந்தனரோ தெரியவில்லை. வானமலையைப் பெரு மேகங்கள் சூழ்கின்றன. கொடுங்கோளூரிலிருந்து வானமலையைப் பார்க்க முடியவில்லை. "இராக்கிளி தன் வழி மறையும்" பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. சுள்ளியம் பேரியாறு செந்நுரை எழுப்பி பேரிரைச்சலுடன் பாய்ந்து கொண்டிருக்கிறது.முறிந்து வீழ்ந்த பெருமரங்கள் ஆற்றின் கரையை உரசி  ஆற்றை மேலும் அகலமானதாக மாற்றுகின்றன. எங்கு காணினும் பெருவெள்ளம். மீன் நிரப்பிக்கொண்டு ஆற்றுக்குள் சென்ற அம்பிகள் மீண்டு வர முடியவில்லை. பொன் ஏற்றிக்கொண்டு வந்த கழித்தோணிகள் பேரியாறு ஒழுகும் கழிகளில் இழுத்துக் கொண்டு செல்லப்படுகின்றன. 

முசிறி நகரமெங்கும் வெள்ளம் சூழ்கிறது.  பெருவழிகளில் நீர் நிறைகிறது. நடந்து சென்ற மக்கள் "வஞ்சி" வலித்து மேடான இடங்களை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள். பேரியாற்றில் வெள்ளம் வந்துகொண்டேயிருக்கிறது. இத்தனைக்கும் முல்லைபெரியாறு அணை இல்லை, மலம்புழா அணை இல்லை. எந்த அணையுமே இல்லை.  வீடுகள் மூழ்குகின்றன. நான்கு நாட்களாயிற்று. குடகடலை முழுவதுமாய் உறிஞ்சியெடுத்து உமிழ்வது போல் வானமலையில் மழை பெய்து கொண்டிருந்தது. 

ஏறத்தாழ, பொலந்தார் குட்டுவனின் வழிவந்த எல்லா மக்களும் முசிறியை விட்டு வெளியேறி இருக்கக் கூடும். கீழடுக்குக் குறும் பாறையும், மேலடுக்கு மண்ணும் கொண்ட அந்த நிலம், பேரியாற்றின் இழுவைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்னை இழந்தது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் வணிகத்தில் சிறந்து, மக்கள் வாழ்ந்த முசிறி நகரம் பேரியாறு அள்ளி இறைத்த மண்ணில் சிக்குண்டது. தொடர் மழையால், மண் நிறைந்து வரலாற்றின் அடியாழத்தில் சென்று மூழ்கியது உலகெங்கும் அறியப்பட்டிருந்த  முசிறி மாநகரம். 

பட்டணம் அகழ்வாய்வு
பேரியாறு  தன் பாதையை மாற்றிக்கொண்டு ஓடத் தொடங்கியது. முசிறி மூழ்கினாலும் வேறு சில புதிய நிலப்பரப்புகளை உண்டாக்கியது ஆற்றின் வழி மாற்றம்.  அப்படி உண்டான ஒரு துறைமுகம் கொச்சி. 1341 ல் துறைமுகம் அங்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து வணிகம் நடைபெற்றது.

போர்ட் கொச்சியில் உள்ள ஒரு செய்தி
1924 ல் மறுபடியும் மழை. பேரியாறு மீண்டும் புவியியல் அமைப்பை மாற்றியது. முல்லைப்பெரியாறு அணை இருந்தது. ஆனால், பெருவெள்ளத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. பெரியாறு என்று அதன் தன்மை தெரியாது அழைக்கப்பட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 


2018 மறுபடியும் "சுள்ளம் பேரியாறு" தன் போக்கில் நீரொழுக்குகிறது. சுள்ளம் என்றால் சினம் என்று பொருள் தருகின்றன பேரகராதிகள்.  அதன் கிளை ஆறுகளே நிறைய இடங்களில் பாதையை மாற்றிக்கொண்டு ஒழுகுவதாய் செய்திகள் கிடைக்கின்றன. பரவூர், சேந்தமங்கலம் பகுதிகளில் இதுவரை வராத பாதைகளில் "பொழை" கள் ஒழுகுவதாய் செய்திகள் வருகின்றன.  "பெரிங்கல் குன்னு" முதல் "சாலக்குடி" வரை நில எல்லைகள் அறிவதில் பெரும் இடர்பாடுகள் வெள்ளம் வடிந்த பின் இருக்கக் கூடும்.


 எந்தச் சிக்கலும் இல்லாத போதே வானமைலையின் தன்மை ஒரு தன்மைத்தாய் இருந்ததில்லை. வேறுபட்ட நில அமைப்புகளையும், அதற்கேற்ற ஆறுகளையும் கொண்டது அம்மலை.  தேயிலைத் தோட்டங்கள் முதலில் மலையைக் கெடுத்தன. அதை 1924 ல் உணர்ந்தோம். பின்னீடு ரப்பர் மரங்கள் இதோ சான்று பகர்கின்றன. வருத்தம் தான். தேயிலை நிறைந்த மூணாறு நகரம்  இன்று வெள்ளத்தின் பிடியில். மண்சரிவுகளும் அங்கே அதிகமாக இருகின்றன. மாநிலமெங்கும் ரப்பர் தோட்டங்களுக்கு இடையே வீழ்ந்து கிடக்கிற வீடுகளே அதிகம் காண முடிகிறது.  பொதுவாகவே நிலம் குறைந்த மாநிலம் கேரளா. தேயிலை, ரப்பர், அதிகப்படியான கட்டிடங்கள் எல்லாம் சேர்ந்து பெருமழையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்து கிடக்கின்றன.  முல்லைப் பெரியாறு அணை அல்ல இதன் காரணம். "இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைக்க"ப் பார்க்காதீர்கள்.

 
வானமலையோடும், பேரியாற்றோடும் நம் புள்ளிவிபரங்களும், சிற்றறிவும் மோதி மோதித் தோற்றுப் போகும். ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதை அறிந்து நடப்பதே அறிவுடைமை. அன்றி, எல்லா ஆறுகளுக்கும் ஒரே அளவுகோல் என்பது சிறப்பானதல்ல. 

வானமலையும், பாய்ந்து வரும் பேரியாறும்.

எப்படி இருந்தாலும் "பேரியாறு" வரும் காலங்களிலும் தன் பாதையை மாற்றி மாற்றி ஓழுகும். அது இயற்கையின் விதிகளுக்குள் ஒழுகும் ஆறு. அந்த விதிகளைப் பட்டியலிட நாம் இன்னும் அறிந்திருக்கவில்லை. 

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
சென்னை.    17/08/2018







Thursday 9 August 2018

படுதாக்கள்


கைப்பேசியின் சின்னத்திரைகளில்

காற்றறுத்த வாழை இலையென

கிழிந்து தொங்குகின்றன,

மேடையேற்றப்பட்ட நாடகங்களின்

படுதாக்கள்.

மின்னணுவியல் வாள்வீச்சு.










Friday 3 August 2018

புது வெள்ளம்


தாடகைமலையும், புத்தனாறு கால்வாயும்

புது வெள்ளம். இந்த சொல்லே புத்துணர்வு அளிக்க வல்லது. பழையாறு எனப்படும் கோட்டாறு, புத்தனாறு கால்வாய், பெரியகுளம், வீர கேரளப்பனேரி என சுற்றிலும் நீர்நிலைகள் நிறைந்த ஊரில் பிறந்தாலோ என்னவோ எனக்கு நீண்ட நேரம் குளிப்பது (ஆடுவது) மிகவும் பிடிக்கும்.

புத்தனாற்றின் கம்பிப் பாலத்திற்கும் கல் பாலத்திற்கும் இடைப்பட்ட சிறு தொலைவுக்குள் என் சிறு வயது வாழ்க்கையின் பெரும்பகுதி நகர்ந்திருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.

பண்டு முல்லையிலும் குறிஞ்சியிலும் வாழ்ந்த மனிதன், அங்கிருந்த எல்லா விலங்குகளையும் போல நீராடுவதில் பெரும் விருப்புக் கொண்டிருந்தான். அருவிகளைப் பின்பற்றி, ஆறுகளின் வழி நடந்து சமநிலங்களில் புகுந்த போதும் அந்த விருப்பில் குறைவின்றியே இருந்திருப்பான் போலும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அந்த விலங்குப் பண்பு இருந்ததை உணர்ந்திருக்கிறேன். தணீருக்குள் குதித்து விட்டால் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு கரையேறும் எண்ணமே வந்ததில்லை.

ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கும் புத்தனாற்றுக் கால்வாயில் வெள்ளம் வருவதற்கும் ஏறத்தாழ சரியாக இருக்கும். பேச்சிப்பாறை அணையில் தேக்கிவைக்கப் பட்டிருந்த வெள்ளம், கலங்கலின்றி கண்ணாடிபோல் வரும். சில்லென்ற அந்த வெள்ளத்தில் கல் பாலத்தின் மேலிருந்து சாடுவது (குதிப்பது)  பேரானந்தம். ஓடும் நீரில் நீந்திப் பிடித்து விளையாடும் ஆட்டம், படித்துறைகளில் நிற்பவர்கள் எத்தனை முறை ஏசினாலும் நிறுத்தப்பட மாட்டாது.

முதன்முதலாக 'கல்பாலத்திலிருந்து சாடி மாட்டுத்துறை சப்பாத்தில் ஏறிய' நாளை யாருமே மறந்திருக்க மாட்டார்கள் எங்கள் ஊரில்.  எல்லோருக்குமே அது ஒரு வீர நிகழ்வு. ஏனென்றால் எல்லோருமே அனேகமாக அவர்களின் பத்து வயதிற்குள் இதை நிகழ்த்தியிருப்பார்கள். ஆண், பெண் என கிட்டத்தட்ட எல்லோருமே நீச்சல் அறிந்திருந்தார்கள். என்றைக்கு கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் யாரிடமும் தீர்க்கமான விடையிருக்காது.

ஐப்பசி அடைமழை செம்மண் நிறத்தில் வெள்ளத்தைக் கொண்டுவரும்.  கூடவே தண்ணீர் பாம்புகளும், தாழைச் செடிகளும், முறிந்து விழுந்த புன்னை மரக்கிளைகளும். ஆள் முழுகும் அளவிற்கு வரும் வெள்ளத்தில் மூழ்கி எழும்போது இவற்றில் ஏதேனும் ஒன்று தலையில் தட்டுப்படும். உதறி எறிந்துவிட்டு ஆட்டத்தில் மூழ்கி விடுவோம். துவைத்த துணியோடு பாம்பையும் பிழிந்து வீட்டுக்குக் கொண்டுபோன பெண்களும் உண்டு. ஒரு முறை எனக்கு சில ஓலைச் சுவடிகளும் கிடைத்திருக்கின்றன. பெரு வெள்ளத்தில் சுவடிகள் எறியப்படுவது அதுவரை கூட நிற்கவில்லை போலும். வெள்ளத்தில் போனவை எவ்வளவோ?   "கெற்பக்கோள் சாத்திரம்" என்று ஒரு தொகுப்பு. பெண்களின் கருப்பை பற்றிய சுவடி அது. ஓரளவிற்குப் படிக்க முடிந்தது. "முன்னம் முழு" என்று தொடங்கிய இன்னொரு சுவடித்தொகுப்பு. ஆனால் இது அத்தனை எளிதாய்ப் படிக்கக் கூடியதாய் இல்லை. சோதிடம் பற்றியதாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன். வீட்டில் கொண்டு போய் வைத்திருந்தேன்.  சுவடிகள் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு ஆகாதென்று அண்ணன் அவற்றை ஊர் நூலகத்தில் சேர்த்துவிட்டார். அங்கே கவிமணியின் படத்தின் பின்னால் வைக்கப்பட்ட அவை பிறகு என் கண்ணில் படவே இல்லை.

1983 ல் திருநெல்வேலிக்கு படிப்பதற்காக வந்தபோது தான் "தாமிரபரணியை"ப் பார்த்தேன். பழையாற்றிற்கும் இதற்கும் தான் எத்தனை வேறுபாடு. கற்காளால் ஆன பெரும் படித்துறை மண்டபங்கள். மண்டபங்களை மூழ்கடிக்கும் வெள்ளம். வியப்பூட்டியது அது.

அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் "பொன்னி" யைப் பார்த்தேன். அப்பப்பா. நான் இதுவரை பார்த்திருந்த எல்லா ஆறுகளையும் ஒன்றாய்ச் சேர்த்து வைத்ததைப் போன்ற பேராறு. இங்கே புதுவெள்ளம் ஆடுபவர்கள் பேறு பெற்றவர்கள் என்று நினைத்தேன்.

காவிரிக்கரையிலேயே என் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்துவிட்டது. காவிரியோடு என் வாழ்க்கை பின்னிக்கிடக்கிறது என்பதாகவே உணர்கிறேன். அவள் கரையெங்கும் அலைந்திருக்கிறேன்.  அந்தப் பண்பாடுகளோடு ஒன்றியிருக்கிறேன். என்னை நான்  மீட்டெடுத்ததில் காவிரிக்கரைக்கு பெரும் பங்கிருக்கிறது. அவள் கரைபுரண்டு ஓடிய காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். வேழம் இழுத்தெறியும் அவள் வேகம் உணர்ந்திருக்கிறேன். அவள் விருந்தோம்பலில் திளைத்திருக்கிறேன். இங்கு வந்தபிந்தான் "ஆடிப்பெருக்கு" அறிந்தேன். வைகாசியில் புதுவெள்ளம் வந்துவிடுகிற எங்கள் ஊரில் ஆடிப்பெருக்கு இல்லை. இந்த நாட்களில் பாலாறு, பூவானி, குழித்துறையாறு, கேரளத்தின் பாரதப் புழா, பேரியாறு என நிறைய ஆறுகளைப் பார்த்துவிட்டேன். ஆனாலும், எந்த ஆற்றைப் பார்த்தாலும் சிறுவயது கல்பாலம் நினைவுக்கு வராமல் போவதில்லை.

இப்பொழுது காவிரியில் புதுவெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிது. தொலைக்காட்சி களில் தான் காண்கிறேன். இன்று ஆடிப்பெருக்கு. புதுவெள்ளம் ஆடவேண்டும். ஆனால்,  சென்னையின் அடுக்ககக் "குளிமுறி" க்குள் நினைவுகளோடு நீராடுவது தவிர வேறெதுவும் இயலவில்லை.ஆனால்,

ஆண்டுதோறும் அவள் வர வேண்டும் என்ற வேட்டலை மட்டும் நான் நிறுத்தப் போவதில்லை. சட்டங்களைப் பட்டியலிடும் போது அவளை மறந்து போகிறோம். எண்ணம் அவளிடம் இல்லாமல் போய்விடும். வாவென்று எப்பொழுதுமே அழைத்துக் கொண்டிருங்கள்.

"அவள் வருவாள்.
வானமலை கறுத்து
பெருமுழவின் ஒலியெழுப்பி வருவாள்."
புது வெள்ளம் கொண்டு தருவாள்.
----------------------------------------------------------------
என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
சென்னை.    03/08/2018