Wednesday 13 September 2017

குமரி.



                குமரி தமிழ்நாட்டின் தென்னெல்லையாய்த் தண்ணென்றப் பெருங்கடலாய் விரிந்துகிடக்கிறாள். அவள் மடியில் எம்மினத்தின் தொன்மங்கள் இறைந்து கிடக்கின்றன.


     
           சங்க இலக்கியம், சமய இலக்கியம் தொடங்கி அண்மைக்காலம் வரை "குமரி" என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறாள். ஆங்கிலேயர்களும் "குமரி முனை" எனும் பொருள்தரும் Cape Comorin என்ற சொல்லாலேயே அழைத்தார்கள். அவள் எப்படி கன்னியாகுமரி ஆனாள் என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை.




     மொழிநிலைத் தொல்லியல் (Linguistic Palaeontology) எனும் ஆய்வுத்துறை மொழிகளின் பரவல் பற்றி ஆய்வு செய்கிறது. இதில் பேரறிஞர்கள் பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். சிந்து மொழி, சுமேரிய மொழி, ஏலமைட் மொழி, உலுப் மொழி போன்ற மொழிகளில் நிகழ்த்தப்பட்ட மொழித்தொல்லியல் ஆய்வுகள், ஆய்வாளர்களை இந்தக் குமரியை நோக்கி நகர்த்துகின்றன.





                        குமரி என்ர இந்தச் சொல் "குமர்" என்ற அடிச்சொல்லிலிருந்து பிறக்கின்றது. இதற்கான வேர்ச்சொல் "கும்" என்பது. "கும்" அல்லது "கொம்" என்பது வளமை, செழுமை என்ற அடிப்பொருள் உடையது.

                   "கும்முன்னு" இருக்கு என்றச் சொற்றொடரின் பயன்பாட்டை நினைவில் கொள்ளுங்கள். அண்மையில் "சிமிக்கிக் கம்மல்" பாட்டுப் பரவலானது எதனால்? கும்மென்றச் சேரநன்னாட்டு இளம்பெண்களும் "கும்"பலாய் அவர்கள் ஆடிய நடனமுந்தான். அன்றி பாட்டின் பொருள் பற்றியல்ல. பாட்டின் பொருளும் அத்தனை எளிதாய் இந்த மண்ணில் பொருந்துவதாயும் இல்லை.
                     பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டியும் "கும்" என்ற வேர்ச்சொல் சிமிக்கிக் கம்மல் பாடல் வரை நீள்கிறது.

                   கும்முன்னு, கும்பல், கும்பளங்காய் போன்றவை "கும்" என்ற வேர்ச்சொல்லில் பிறந்தவை.

                  கும் - அர் விகுதி சேர்ந்து "குமர்" அல்லது "கொமர்" என்றாகும்.
இன்றும் கூட குமரி மாவட்டப் பேச்சுவழக்கில்" கொமர்" எனும் இந்தப் பழஞ்சொல் பயன்பாட்டில் இருக்கிறது.  மணமாகாத இளம்பெண்களை அப்படிச் சொல்வது வழக்கம்.

    "வீட்ல ரெண்டு கொமரு இருக்குடே... எப்பிடி கரயேத்துவானோ?"

              ஒரே கருத்து ஆண், பெண் பாலால் குறிக்கப் பெறுவது   பழந்தமிழ் மரபு. குமர் பொதுச்சொல்.

       கும் - அன் விகுதி சேரும்போது குமரன்
       கும் - இ விகுதி சேரும்போது குமரி

                      
எடு: மாரி பொதுச் சொல். மழையக்குறிக்கும்.
        மாரியப்பன், மாரியம்மாள் என்று இருபால் தாங்கும். தமிழ்நாட்டை ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் அறிமுகம் செய்தது "முத்து". இதுவும் இணையும்.
          
           முத்துக்குமரன், முத்துமாரியப்பன், மாரிமுத்து, குமரிமுத்து, சுடலைமுத்து.

        இப்படி எம் மொழியின், இனத்தின் வரலாற்றைச் சுமந்து கொண்டு நீருக்கு அடியில் "குமரி" இருக்கிறாள். இன்றையத் தென் எல்லைக் குமரி தொல்தமிழரின் குறியீடு.

பாவாணர் அடியொற்றி:
 

Thursday 7 September 2017

யாரிடம் கேட்பது.




         துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் போதும் உற்றார் ஒருவரின் சொற்கள் இன்பத்தைக் கொண்டு சேர்க்கும். நீண்ட நாட்களுக்குப்(1984) பிறகு அப்படி ஒரு சொல்கண்டு பாறைகளுக்கிடையே சிறு ஊற்றெனப் பிறந்தது இக்கவிதை. எல்லோருக்குமானதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் உங்கள் உள்ளத்தையும் ஒரு வேளைக் கீறிவிடக் கூடும்.

      33 வருடங்களாய் என் கவிதை (?) ஒன்றைச் சுமந்த அன்பு அண்ணன் Muthuperumal Boothalingam Pillai க்காக மீட்டெடுக்க முடியாதக் காலத்தைப் பாட்டில் வடிக்கப் பார்க்கிறேன்.
_________________________________

யாரிடம் கேட்பது?
_______________________






Tuesday 5 September 2017

அம்மணமாய் இரு.




வ.உ.சி - வாராது வந்த மாமணி




1872-09-05                       1936-11-18
இன்று பிறந்தநாள்
                                                     

            காலம் மறக்கமுடியாத தலைவர்களில் ஒருவர் வ.உ.சி. இன்றைய காலக்கட்டத்தில் அவருடைய சில முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் சமூகப்பார்வைகளை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. வெறும் கப்பலோட்டியத் தமிழனாகவே அவரை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதை விடுத்து இன்றைய காலத்தேவையோடு அவர் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த நாடு சரிசெய்யப்படாத முரண்களோடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் வ.உ.சி யின் வழியாகவும் அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் வ,உ,சி யையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். "நீட்"டி முழக்காமல் குறிப்புகளாகத் தொகுக்கிறேன் "நீட்"டைப் போல.

      வ.உ.சி இந்த நாட்டின் போக்கையும் அதன் கோர முகத்தையும் உணர்ந்தவர் என்பதை அவருடைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

        சாதியக் கொடுமையச் சாடிய வ.உ.சி 1927 சனவரி 19 ல் நடந்த திராவிடர் கழகத்தின் 18 வது ஆண்டுவிழாவில் அந்தக் கொடுமைகள் களைய "நம்மவர் கடமை" என்றத் தலைப்பில் பேருரையாற்றினார்.

         இன்றளவும் பல்வேறு இயக்கங்கள் அகற்றிட விரும்பிப் பாடாற்றிவரும் ஒரு நிலைப்பாட்டிற்கான விதையை வ.உ.சி விதைத்திருக்கிறார். அன்றைய காங்கிரசுப் பேரியக்கத்தின் சிறப்புக் கூட்டமொன்று கோவையில் 1927 சூலைத் திங்கள் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்றது. அதில் "பிராமணர் அல்லாதோர் கைகளுக்குக் காங்கிரசுப் பேரியக்கம் வரவேண்டும்" என்று முழங்கினார்.

       அதே ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தில் மாவட்டக் காங்கிரசு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவராக வ.உ.சி இருந்தார். தலைமையுரையில் "சூத்திரன்" என்ற பதம் பொது ஆவணங்களிலிருந்து கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.




        இள வயதில் துறவியாக விரும்பி தலை மழித்து மதுரை வரை நடந்து சென்று அதன் பிறகு அந்த ஆசையைத் துறந்தவர் வ.உ.சி. இதை அவரே சுயசரிதையில் குறிப்பிடுகிறார். அன்றையச் சமூகச் சூழல் அவரிடம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவருடைய பேச்சுக்கள் அன்றைய சமூகநிலையை நமக்குக் காட்டுகின்றன.

      1920 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதி காங்கிரசின் 26 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை வ.உ.சி கொண்டுவந்தார்.


1. நாடு முழுவதும் தொழிற்சங்கங்களைத் தோற்றுவித்து குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமானக் குடியிருப்பு, முழுமையான தடையற்றச் சங்கம் அமைக்கும் உரிமை.
        இந்தத் தீர்மானம் நிறைவேற அவர் நிறைய வாதிட வேண்டியிருந்தது. அடுத்த தீர்மானம் இட ஒதுக்கீடு பற்றியது.

2. பொதுத்துறையில் பணியாட்களைத் தேர்ந்தெடுக்கும் போது பிராமணர் அல்லாதாருக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

         அடிப்படையில் இந்த நாட்டின் பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதற்கான எதிர்வினைகளையும் ஆற்றியிருக்கிறார் வ.உ.சி.

         நேர்மையான தொழிற்சங்கவாதி.

         பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என முழங்கியிருக்கிறார்.

        1928 சனவரித் திங்கள் தேவக்கோட்டை மாணவர் சங்க ஆண்டுவிழாச் சொற்பொழிவில்
       "பிறப்பினால் உயர்வு தாழ்வு நமது நாட்டு வழக்கமன்று. ஆரியர் நூல்கள் தமிழில் கலந்த பின்னரே பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றக் கோட்பாடு வந்தது. ஒருவன் நம்மைப் பார்த்து தாழ்ந்தவன் என்று கூறினால், அவ்வாறு கூறாதே என்று நாம் சொல்லலாம். கேட்கவில்லையென்றால் சட்டபூர்வமாகவோ, அசட்டபூர்வமாகவோ அவன் சொல்லாதிருக்கும்படிச் செய்யலாம். பார்ப்பனரல்லாதாருடைய பணங்கள் பார்ப்பனர்களால் கவரப்படும் போது அதனை ஒழிக்கச் செய்யும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்கும் எதனையும் ஒதுக்கித்தள்ளுமாறு மனம் தூண்டுகிறது. பிதுர் கடன், சிரார்த்தம் போன்ற பெயர்களில் நடத்தப்படும் வைதீகச் சடங்குகள் பொய்யே ஆகும். நமக்குக் கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக் கொண்டு ஆராய்வோம். இதில் ஈடுபடலாகாது, விழிப்புடன் இருக்கவேண்டும். என்றெல்லாம் உரையாற்றினார்.

    நேர்மை எதுவென்று தோன்றுகிறதோ அதை நேரடியாகப் பேசும் பேராண்மை வ.உ.சி க்கு இருந்தது. காந்தியை மதித்தார். ஆனால் அவரது ஒத்துழையாமை இயக்கத்தை வெறுத்து ஒதுக்கினார். ஒத்துழையாமை இயக்கம் தமிழர்களிடம் கோழைத்தன்மையை உருவாக்கிவிடும் என்று தீர்க்கமாக முழங்கியவர்.

     பெண்களுக்குக் கல்வி வேண்டும் என முழங்கியவர்.

  அவர் அமைத்தக்  கப்பல் கம்பெனி 1882 கம்பெனிகள் சட்டப்படிதான் அமைக்கப்பட்டது. 10 லட்ச ருபா முதலீடு. ரு 25 வீதம் 40000 பங்குகள். ஆசியாவைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம். ( இது அறியாமல் நிறைய முகநூல் பதிவுகளில் வ.உ.சி க்கு அவர் உதவினார், இவர் உதவினார் என்று நிறையச் செய்திகள்).

          கம்பெனியில் முக்கிய பொறுப்புகளை பிறருக்குக் கொடுத்துவிட்டு உதவிச் செயலாளர் பொறுப்பை வ.உ.சி எடுத்துக் கொண்டார்.

         ஆனால்..... கம்பெனியின் நட்டம், சிறை, கொடுமைகள் அனைத்தையும் அவர் ஒருவரே ஏற்றுக்கொண்டார் செம்மல் வ.உ.சி.

     
  
     அவர் காலத்தில் ஊடாடிக்கொண்டிருந்த பிரச்சனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை உணர்கிறோம். காரணத்தையும் கருவிகளையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார் செம்மல் வ.உ.சி, தொடர்வோமா?