Friday 29 April 2022

நூறில் ஒன்று

 


மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?

பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?

ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?

தேங்கிய ஏரி

ஓடிட எண்ணுமா?

நூறு கூறாய் நொடியைத் துணித்த

இம்மியளவு இடைவெளியில்

உள்ளில் கிளர்ந்த மகிழ்வின் நிகழ்வை

மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?

Friday 15 April 2022

எங்கள் முகம்

 

பார்க்கும் நொடிகளின் உணர்வுகளை எழுத்துகளில் உயிர்ப்போடு பதிவு செய்து விடவேண்டுமென்ற வேட்கையோடு, மனதுக்குள் எப்பொழுதும் எழுத்துகளைக் கோத்துக் கொண்டிருக்கும் என் முன்னே; காலத்தின் பதிவாய்த் தொடங்கிய  இந்தத் திரைப்படம். நான் மறந்துபோயிருந்த நொடிகளையும் நினைவுபடுத்திக் கொண்டே மெல்ல நகரத் தொடங்கியது.

ஊசி போட்டால்தான் அரங்கிற்கு வரவேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து; படம் பார்க்க ஊசியா? நோயச்சம் கூட புறந்தள்ளி வைத்த ஊசியை படம் பார்க்கவென்று போடுவோமா? படம் பார்ப்பதையே தள்ளிப்போட்டிருந்தேன். வணிகம் வாசலுக்கு வரத்தானே செய்யும். வந்தது. இணையத்தில் நேற்று பார்த்தேன். இதைக் குறித்து பலரும் நிறைய பேசிவிட்டார்கள். என் பங்கிற்கு...

Wednesday 13 April 2022

புல்லாங்குழல்


 

உள்ளீடற்றப் புல்லாங்குழலில்

உறைந்துகிடக்கும்

பல்லாயிரம் பாடல்களைப் போல,

உள்ளத்தில் உறங்குகின்றன;

யாரும் அறியாத

எண்ணிலடங்காப் பாடல்கள்.

 

ஒருமுறை நீ

உதடு குவித்து ஊதினாய்!

காற்றேதும் தீண்டி

அந்தத் தடம் அழியாது

காவல் செய்தே

கழிந்தது காலம்.

 

Sunday 10 April 2022

ஆரணங்கு

 


என்னருமைத் தமிழினமே, பண்பாட்டுக் கூறுகளில், மரபுக் கூறுகளில் ஒவ்வொரு முறையும் இரு முனைத் தாக்குதலுக்கு ஆளாகிறாய். கூர்ந்து நோக்கினால் நாம் மூன்றாவதாகவே நின்று கொண்டிருக்கிறோம். இந்த முறையும் அப்படியே.

தமிழணங்கு தமிழ்த்தாய் யாரைத் தேடுவதானாலும் அதைத் தமிழில் இருந்துதான் தேடியாகவேண்டும். தமிழ் மரபுகளின் தலை மேட்டில் தான் அவள் இருப்பாள். நீண்டு கிடந்த நெய்தலிலும் நெடிதுயர்ந்த மலைகளிலும் நடந்து திரிந்து களித்திருப்பாள்.

இயற்கையின் பேராற்றலை உடலால் உணர்ந்த மனிதன் அதை ஒலியாலும் உணரக் கற்றுக்கொண்டான். பேரரருவிகளின் ஓசையைக் கொண்டே அதன் ஆற்றலைக் கணிக்க முற்பட்டான். 

Thursday 7 April 2022

அன்றி??



ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சொந்த மண்ணில் வாழ்ந்தாயிற்று. தென்கோடியில் தாடகை மலை அடிவாரத்தில் விரிந்து கிடக்கும் தாழக்குடியும் அதைச் சுற்றி இருக்கிற ஊர்களும் எப்பொழுதும் உள்ளத்தில் உரிமையோடு கதை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. மிகக் கூர்மையாக எதையாவது சிந்திக்க நேர்ந்தால், குறிப்புகளுக்காகவும் செய்திகளுக்காகவும் சொந்த மண்ணின் பண்பாட்டுக் கூறுகளும், நடந்த நிகழ்வுகளுமே முதல் தரவுகளாய் உள்ளத்தில் தோன்றும். காரணம் அவை முப்பது ஆண்டுகளாக நேரில் கண்டு துய்த்தவை. அதன் பிறகே வேறு இடங்களில் கண்டவையும், கேட்டவையும், படித்தவையும் வரும். அதையும் தாண்டி தேவை ஏற்படுகிற போது களத்தில் தேடல் நிகழும். 

Tuesday 5 April 2022

நினைவுகளில் மிதந்தேன்



இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பி Jaya Prasad ன் பதிவொன்றைப் படிக்க நேர்ந்தது. அதன் பின்னூட்டமாக "வியர்வையோடு நீர்/மோர் அருந்தினால் சளி பிடிப்பதன் சூட்சுமம் அறிய, எனக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது. இன்று தான் அறிந்துகொண்டேன்." என்று எழுதியிருந்தேன்.

அதைப் படித்துவிட்டு ஊரிலிருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் "நீ ராசாண்ணனுக்குக் கூட  பழகியிருந்தும் இது தெரியாதாடே. அவன் சொல்லித்தரலியா?" என்று கேட்டார். 

அவரது நினைப்பு சரிதான். வர்ம ஆசான் இராசா அண்ணனோடு பெரிய பழக்கம் இல்லை என்றாலும், சில முக்கியமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட நெருக்கம் இருந்தது. அது ஒருவேளை என் தந்தைக்கும் அவருக்குமான பழக்கத்தின் விளைவாகக் கூட இருக்கலாம். 

Monday 4 April 2022

தாலாட்டு

 


(பிரிந்திசை, துள்ளல் ஓசை,  வெண்கலிப்பா, கலித்தாழிசை)

படம்: மறைமலை வேலனார்

 

 

மண்தோன்றா காலம் தென்னாடு போலே

என்னாளும் வாழும் உன்பேரும் நாளும்

வடமலையின் தண்பனியே தாலேலோ தாலேலோ

வான்பொழியும் மாமழையே ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )

 

குமரிமக்கள் வாழ்வியலே

கொடுந்தமிழின் பேரறமே

குறள்பிறந்த பேரறிவே

புறம்இசைத்தப் போரறமே 

அகமுரைக்கும் நானூறே

ஐம்பெருங் காப்பியமே

பதினெட்டுக் கீழ்க்கணக்கே

பைந்தமிழ்பத் துப்பாட்டே 

Sunday 3 April 2022

போக்கில்

 


கடந்த பங்குனி உத்திரத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தேன். தமிழ்ப் பேராசிரியர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. முன்பு ஊருக்குச் சென்றிருந்தபோது எனது நூல்களை அவரிடம் கொடுத்திருந்தேன். ஊர் குறித்து சிறிது பேசிவிட்டு எனது நூற்களின் பக்கம் பேச்சு திரும்பியது. மாலைக் காற்றும் ஏரிக்கரையும் சூழலை இனிமையாக்கின. பேச்சின் ஆழம் கூடியது.

"நீ எப்படி பொறியியலிலிருந்து இலக்கியத்திற்குள் நுழைந்தாய்? ஏன்?"

"பள்ளிப் பருவத்திலிருந்தே நூலகத்திற்குச் செல்லும் வழக்கம் உண்டு"

"தெரியும் தெரியும்... இதையே எத்தனை நாள் சொல்லிக்கிட்டிருப்ப. ஆழமாப் பேசு"