Monday, 28 August 2023
ஓண நன்னாள் 2023
Friday, 25 August 2023
தோட்டியின் மகன் ஒரு பார்வை
இந்த முறை ஊருக்குச் செல்கையில் ஏதேனும் கதை படிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தகழியின் 'தோட்டியின் மகன்' முத்துநாகுவின் 'சுழுந்தீ' இரண்டில் எதை எடுத்துச் செல்வது என்ற சிந்தனை வந்தது. கதை படிப்பது குறைந்து வெகு நாள்களாயிற்று. அதன் பொருட்டு நூலின் அளவு முகாமையானது. இருக்கும் குறைந்த நேரத்தில் தகழியே வசப்படுவார் என்பதால் அவர் தேர்வானார். நூலின் அளவும் பயணக் காலமும் சுழுந்தீயை அடுத்த பயணத்திற்காகத் தள்ளிவைத்தன. மட்டுமின்றி சுழுந்தீயின் சொல்லாடல்கள், களம், மாந்தர்கள் குறித்தான எனது தேடல்கள் முடிந்தபாடில்லை. 'நாஞ்சிநாட்டுக்காரனுக்கு'க் கதை படிப்பதில் உள்ள சிக்கல் இது.
சென்னைப் புத்தகக் காட்சியில் 2018 ல் வாங்கிய 'தோட்டியின் மகனை' ஐந்து வருடங்களுக்குப் பின் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் வாசிக்கிறேன். மலையாளத்தில் எழுதப்பெற்ற இந்தப் புதினம் சுந்தரராமசாமியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
Thursday, 20 July 2023
மனச்சான்று மரித்துக்கிடக்கும் மணிப்பூர்
எல்லா
மொழிகளிலும் கேட்கிறது
பெண்ணின்
அலறல்.
எல்லா
நிலங்களிலும் சிந்துகிறது
அவள்
குருதி.
எல்லா
தெய்வங்களும்
காட்சிமறைத்தன,
அவள் கண்
இருண்டபோது.
எல்லா
மதங்களும்
கட்டுண்டு
கிடக்கின்றன,
பிடுங்கி
எறியப்பட்ட
அவள்
மயிர்ச் சுருளில்.
எல்லா
சாதிகளும்
ஒளிந்துகொண்டன,
வீசி
எறியப்பட்ட
அவள்
ஆடைகளுக்குள்.
மனிதம்
மறைந்துகொண்டது
உடல்
கிழித்தவன்
விரல்
நகக்கண்ணில்.
மனச்சான்று
மரித்துக்கிடக்கிறது
வாக்குச்
சாவடிகளின்
வாயில்களில்.
இடுகாடும்
சுடுகாடும்
எல்லைகளாக இருப்பதா
நாடு?
வெட்கம்.
Monday, 17 July 2023
பாரதிராசா பிறந்தநாள் 2023
தமிழ்த் திரைமொழியை
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.
பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.
கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலை
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.
கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.
முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.
ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில் அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.
வண்ணக் கனவாய்
வளையவந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.
அத்தனையும் பெற்றவன் நீ.
நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்து
தட்டி எழுப்பியவன் நீ.
இன்று காணும்
திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.
மண்ணின் மணம் கமழ
வாழி நீ!
Tuesday, 11 July 2023
அருகே கடவுள்
ஒற்றைக் கொட்டொன்று
ஓசையெழுப்பும்
நட்ட நடு இரவில்,
வெட்ட வெளியில்
வரம்பின்றி
விரிந்துகிடக்கும் மையிருளில்,
சுடலைமாடன் காடேக
மார்பில் அணைத்தத்
தீப்பந்த வெளிச்சத்தில்
மாடனின் கச்சையை
இறுக்கிப் பிடித்து
“சொள்ளமாடா மழ எப்பவரும்?”
என்று கேட்ட
வேலப்பண்ணனின்
மனதுக்கும் மாடனுக்கும்
மயிரிழை தூரந்தான்.
===========================
'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
11-07-2023
===========================
Sunday, 9 July 2023
காலத்தின் அடையாளம்
இருள் விலக்கிக் கொள்கிறது
இராசாவின் காப்பிக்கடை.
இளவேனில் காலத்தில்கூட
அடுக்களைக்குள்
மேகம்பரப்பும்
இட்டலிப் பானை.
விடிந்தபின்னும்
வெண்ணிலாக்களைப்
பெற்றெடுக்கும் ஆப்பச்சட்டி.
இரசத்தில் குளித்தெழும்
பருப்புவடைகள்.
இவற்றோடு பிரியாத
உறவாய்த்
தேங்காய்ச் சட்டினி.
உணவின் ஏற்றத்தாழ்வை
உடைத்தெறிந்த
காலத்தின் அடையாளங்களோடு,
இன்னும் தொலைந்துவிடாத
அழகுடன் எனது சிற்றூர்.
===========================
'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
09-07-2023
===========================
Thursday, 6 July 2023
மாமன்னன்
"இது ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒடுக்குமுறைகளை சந்திக்காதவர்களுக்கன படம். இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியத்தால் சூத்திரன் என அழைக்கப்பட்டு, தன் வரலாறு, பண்பாடு மறந்துபோய், பட்ட வலிகளையும் மறந்துபோய், ஆண்டவர்களாய், அடிமை செய்தவர்களாய் எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கான படம். நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கு முன்னால் முலை திறந்து காட்டி நின்ற, ஆதிக்க சாதி உட்பட அத்தனை சாதி தாய்மார்களையும் வரலாறு மறக்கவில்லை. இப்படி தமிழ்நிலம் முழுவதிலும் தாய்களின் வலி மறந்துபோன பிள்ளைகளுக்காகவும் எடுக்கப்பட்ட படம்."
"நமக்கு முதுமை வந்து இயலாமல் போய்விட்ட காலத்தில், வயது வந்த மகன் கழிவறைக்குப் பதில் வரவேற்பறையில் சிறுநீர் கழித்து விட்டால்... நமக்கு எப்படியிருக்கும்?
விளக்க முடியுமா?
அதற்கு நம் எதிர்வினை என்னவாக இருக்கும்?
இதை ஒரு கற்பனையாக எண்ணிப் பார்ப்பதே மிகக் கடினமாக இருக்கிறது. இதுவே அந்தச் சிறுநீர் நம் முகத்தில் கழிக்கப்பட்டால்?"
2018 ல் மாரிசெல்வராசுவின் "பரியேறும் பெருமாள்" படத்தைப் பார்த்துவிட்டு எழுதிய இந்த வரிகள், 2023ல் கூட மத்தியப்பிரதேசத்தின் காகிதங்களை நனைக்கின்றன.
ஆனால், ‘மாமன்னன்’???
படம் வெளியாகும் முன் "தன்நேர்மையோடு சிந்தித்துப் பேசும் இந்தப் படைப்பாளியை வியப்போடு பார்க்கிறேன். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வணிக நோக்கும், திறமையும், அதற்கான பெருவாய்ப்பும், அதைச் செயல்படுத்தும் திறனும் கொண்ட நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் போதும், சமரசமின்றி இந்த நேர்மையை ஒரு படைப்பாளியாக மாரி நிறைவேற்றியிருப்பார் என எண்ணுகிறேன். வணிகத்தைத் தாண்டி படத்தில் ஊற்றெடுக்கும் உண்மையின் விகிதம் தான் மாமன்னனா? மன்னனா? என்பதைத் தீர்மானிக்கும்." என எழுதிருந்தேன்.
இன்றுதான் பார்த்தேன். பாதிப் படத்தைக் குறித்து என்ன சொல்வது? மன்னன் தான்.
பல காட்சிகள் மிக நீளமாக, சலிப்பை ஏற்படுத்துகின்றன. வலிந்து திணிக்கப்பெறும் சில கோணங்கள், காட்சிகள், தொடர்பற்றுத் தெரிகின்றன. இடைவேளைக்குப் பிறகு முழுமையாக வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது படம்.
ஆனாலும், ஆளுங்கட்சியின் பெயர், அதிலிருந்து பிரிந்து பிறந்த கட்சியின் பெயர், தலைவர்கள் மற்றும் பலரது நடவடிக்கைக் காட்சிகள்; இத்தனை ஆண்டுகால ஆட்சி சமூக நீதிக்காக எதையுமே செய்துவிடவில்லை என்பதை மாரி தன் திரைப்படத்தில் துணிந்து சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது. காரணத்தை நீங்களே அறிந்திருப்பீர்கள்.
சினிமாத்தனங்களின்றி, சமரசமின்றிப் பேசவேண்டிய பொறுப்பும் வாய்ப்பும் இருக்கிறது மாரிக்கு. .இந்தப் படத்தில் தனது இயல்பானத் திரை ஆக்கத்திலிருந்து பல இடங்களில் விலகி விலகி நடக்கிறார் மாரி செல்வராசு. அதன் காரணம் தெரியவில்லை. போகட்டும். அவரிடமிருந்து இன்னுமொரு சிறந்த படைப்பிற்காகக் காத்திருக்கலாம்.
Monday, 26 June 2023
மாரி செல்வராசு - மாமன்னன்
"தமிழ் திரைப்படங்களில் நகரத்தைக் குறித்து உருவாக்கும் கதைகளைக் குறித்து நான் நிறைய வருத்தப் பட்டிருக்கிறேன். அவங்க நகரமாகவே யோசித்து விடுகிறார்கள் அதை. எப்படிப் பார்த்தாலும் அதனுடைய வேரை, கிராமத்தை தவிர்த்துவிட்டு; இங்கேயே நகரத்தில் முளைத்த உயிர்னு ஒண்ணு இருக்கில்ல அதற்குக் கூட கிராமம் சாராத வாழ்வுன்னு ஒண்ணு இல்லவே இல்ல. ஏதோ ஒண்ணு, ஏதோ ஒரு வேர் அங்கதான் இருக்கு."
அண்மையில் சுதிர் சீனிவாசனுடனான நேர்முகத்தில் இயக்குநர் மாரி செல்வராசுவின் இந்தச் சொல்லாடல்களினூடே, கலையின் மீதான மிக நுணுக்கமான பார்வை கொண்ட படைப்பாளியை, அது தவறுகின்றபோதெல்லாம் வருந்துகிற கலைஞனை, சமூகத்தின் எல்லாப் பக்கங்களையும் காட்டிவிடத் துடிக்கிற எழுத்தாளனைக் காண முடிந்தது.
"இங்க நாம்ம ஒரு சைக்கோ திரில்லர் பண்றோம் இல்ல அதமாதிரி ஏதோ ஒண்ணு பண்றோம்னா, நாம பார்த்த ஐரோப்பிய சினிமாவின் மாதிரியிலேயே அத படமாக்குகிறோம். ஆனால் நம்ம சைக்கோ மனம் வேறு. நம்ம ஊர்ல ஒரு சைக்கோபாத், சோசியோபாத் இருக்கான்னா நாம அவன நம்ம உளக்கருத்தியலில் கையாள்வது கிடையாது. நாம ஐரோப்பிய மாதிரியாகத்தான் கையாள்கிறோம்."
"இங்க ஒரு சமூகமுரணி (Sociopath) உருவாகிறான் என்றால் அவனுடைய எல்லா படிநிலைகளும் நம்ம ஊரு வாழ்வியல் படிநிலைகள்தானே? அத கவனிக்கணும் இல்ல. ஆனா அத விட்டுட்டு நவீனப்படுத்துகிறோம் என்று வேற ஒரு உளக்கருத்தியலில் அத காட்டுறோம். நம்ம ஊர்ல இன்னும் அத மாதிரியான படங்கள் வரல. அது வரும் போது கிராமம் நகரம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் போய்விடும்."
"இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவனால கண்டிப்பா பின்னோக்கிப் போகாமல் இருக்க முடியாது. இங்கே எழுபது வயது வரை வாழும் ஒருவர் அவருடைய எழுபதாவது வயதிலாவது பின்னோக்கிப் பார்க்காமல், அவருடைய வேருக்குப் போகாமல் மரணத்தை அடைய மாட்டார் என்று நான் நம்புகிறேன்"
இப்படி தன்நேர்மையோடு சிந்தித்துப் பேசும் இந்தப் படைப்பாளியை வியப்போடு பார்க்கிறேன். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வணிக நோக்கும், திறமையும், அதற்கான பெருவாய்ப்பும், அதைச் செயல்படுத்தும் திறனும் கொண்ட நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் போதும், சமரசமின்றி இந்த நேர்மையை ஒரு படைப்பாளியாக மாரி நிறைவேற்றியிருப்பார் என எண்ணுகிறேன். வணிகத்தத் தாண்டி படத்தில் ஊற்றெடுக்கும் உண்மையின் விகிதம் தான் மாமன்னனா? மன்னனா? என்பதைத் தீர்மானிக்கும்.
வாழ்த்துக்கள் மாரி.
Saturday, 24 June 2023
கண்ணதாசன் பிறந்தநாள் 2023
Sunday, 11 June 2023
பெருவிழா சிறக்கட்டும்!!
பெ.ம எனும்
பெருநெருப்பின்
புன்னகையில்
என்னைத் தொலைத்த நொடி!
அவர்
அன்பெனும் பெருழையில்
என்னை மறந்த நொடி!
அந்தப்
புயலின் உசாவலில்
அயர்வு களைந்த நொடி!
இந்தப்
புயல் நடந்த
வரலாற்றின் பக்கங்களில்
நான்
எழுத்துப் பிழையாக
இடம்பெற்றாலும் மகிழ்வேன்
ஏனென்றால்
நாம் அறிந்திராத
புயலின் மையங்களில்தான்
நமக்கான மழைப் பொழிவு
கருக்கொண்டிருக்கிறது.