Friday 6 October 2023

ஐயா ஒரிசாபாலு மறைவு

 


கடல்கொண்ட எம் நிலத்தின்

தடம் தேடி அலைந்த உள்ளம்,

 

படகேறிப் பரவிய தமிழர்

கரைசேர்ந்த ஊர்கள் தேடி

சலியாது நடந்த கால்கள்,

 

தெற்கே கடலடியில் திரண்டெழுந்து

வளர்ந்த மாந்தன்

ஊர்ந்து நடந்து உலகு தழுவி

வாழ்ந்த கதையெல்லாம்,

ஆமைகள் வழிகாட்ட

அலைபேசும் மொழியுணர்ந்து

வரலாறு நடந்த வழி

உலகோர் அறிந்திடவே

உரக்கப்பேசிய வாய்,

 

தமிழாய் வாழ்ந்த மனம்

தமிழுக்காய் நடந்த உடல்

பாழும் புற்றால்

வலிகொண்டு வருந்தியபோதும்

தானறிந்தது அனைத்தும்

தமிழ் இளையோர் அறிந்திட

விரும்பிய தமிழன் ஒரிசாபாலு

தென்புலம் சேர்ந்தார்

என்றறிந்தபோது,

கண்ணீர் வீழும் முன்

கலங்கியது உள்ளம்.

 

அரிது இவர்போல் மகவு பிறத்தல்

பெரிது இவரது நிறையாப் பணிகள்.

பேரிழப்பு என்பதன் பொருளை

இவரிழப்பு இயம்புது இன்று.

 

எழுக இளையோரே!

வருக! வருக!

வந்து அவர் பணிகள் தொடர்க.

அதுவே,

தென்கடல் திரைகளின்

ஒசைகளில் நிறைந்திருக்கும்

பாலுவின் குரலுக்குத்

தமிழினம் பகரும் நன்றி.