Monday, 27 January 2025

அவன் நடக்கிறான்...



அவன் நடக்கிறான்,

வேகமாக நடக்கிறான்
இன்னும்
செப்பனிடப்படாத பாதையில்.
காலரவம் கேட்டு
குற்றுச் செடிகளின் உள்ளேயிருந்து
பதறி ஓடுகின்றன
பச்சோந்திகள்.
கைவீச்சின் அதிர்வில்
கழன்று விழுகின்றன
சில
தோல் பாவைகளின் முகமூடிகள்.
அடிக்கும் காற்றில்
அவன் முகமூடியும் கழன்றுவிழும்
என்று அச்சுறுத்துகிறது ஒரு குரல்.
போகட்டும்...
நடப்பதற்குச் சொந்தமாகப்
பாதையேனும் எங்களுக்கு மிச்சமிருக்கும்.
உங்களுக்கு?
பதிலுரைக்கின்றன பல குரல்கள்.
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்.
காலம் காத்து நிற்கிறது.

Friday, 3 January 2025

திருவிழா

 


குழந்தைகள்
திருவிழாக்களில்
தொலைந்து போவார்கள்.
நானோ ,
எங்கெங்கோ தொலைந்து போய்,
ஒவ்வொரு முறையும்
இந்தத் திருவிழாவில்தான்
மீட்கப்படுகிறேன்.

Monday, 30 December 2024

இதுவரை...

 


இதுவரை;

யாரும் எச்சில் படுத்தியிராத

சொற்கள் தேடியெடுத்து,

உனக்கொரு

கவிதை எழுதுகிறேன்.

 

இதுவரை;

யாழ் நரம்புகள் சிந்தியிராத

இசைத் துணுக்குகள் சேர்த்து,

அதைப்

பாடலாய் இசைக்கிறேன்.

 

ஓசைகளற்ற காற்றில் மிதந்து

உன் காதுகளில்

சொல்லிவிட நினைக்கிறேன்.

 

உதடுகள் உரசும் ஓசை

காது மடல்களைக்

காயப்படுத்திவிடுமோ?

 

ஐயம் எழுந்ததால்

மௌனம் பழகுகிறேன்

என்றேனும் இசைத்துவிடும்

ஆசையைச் சுமந்தபடி.

 

29-12-2024


Thursday, 26 December 2024

எம் டி வாசுதேவன் நாயர் மறைவு

 


இருளின் ஆழ்மனதைத்

தேடியலைந்த கலைஞன்.

தன் மொழியின் மூலத்தை

அறிந்திருந்த கவிஞன்.

 

வாழ்க்கையின் மீது

காமம் கொள்ளாத அவனை

சாக்காடு ஒருபோதும்

காயப்படுத்திவிட முடியாது.

 

26-12-2024


Wednesday, 25 December 2024

பாரம்

 


நெடுந்தொலைவு நடந்த

களைப்பில்

இளைப்பாறுகிறது மனம்.

 

இறக்கி வைக்க

முடியாத ஒன்றை

பாரம் என்று

எப்படிச் சொல்வது?