Monday, 28 August 2023
ஓண நன்னாள் 2023
Friday, 25 August 2023
தோட்டியின் மகன் ஒரு பார்வை
இந்த முறை ஊருக்குச் செல்கையில் ஏதேனும் கதை படிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தகழியின் 'தோட்டியின் மகன்' முத்துநாகுவின் 'சுழுந்தீ' இரண்டில் எதை எடுத்துச் செல்வது என்ற சிந்தனை வந்தது. கதை படிப்பது குறைந்து வெகு நாள்களாயிற்று. அதன் பொருட்டு நூலின் அளவு முகாமையானது. இருக்கும் குறைந்த நேரத்தில் தகழியே வசப்படுவார் என்பதால் அவர் தேர்வானார். நூலின் அளவும் பயணக் காலமும் சுழுந்தீயை அடுத்த பயணத்திற்காகத் தள்ளிவைத்தன. மட்டுமின்றி சுழுந்தீயின் சொல்லாடல்கள், களம், மாந்தர்கள் குறித்தான எனது தேடல்கள் முடிந்தபாடில்லை. 'நாஞ்சிநாட்டுக்காரனுக்கு'க் கதை படிப்பதில் உள்ள சிக்கல் இது.
சென்னைப் புத்தகக் காட்சியில் 2018 ல் வாங்கிய 'தோட்டியின் மகனை' ஐந்து வருடங்களுக்குப் பின் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் வாசிக்கிறேன். மலையாளத்தில் எழுதப்பெற்ற இந்தப் புதினம் சுந்தரராமசாமியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
Thursday, 20 July 2023
மனச்சான்று மரித்துக்கிடக்கும் மணிப்பூர்
எல்லா
மொழிகளிலும் கேட்கிறது
பெண்ணின்
அலறல்.
எல்லா
நிலங்களிலும் சிந்துகிறது
அவள்
குருதி.
எல்லா
தெய்வங்களும்
காட்சிமறைத்தன,
அவள் கண்
இருண்டபோது.
எல்லா
மதங்களும்
கட்டுண்டு
கிடக்கின்றன,
பிடுங்கி
எறியப்பட்ட
அவள்
மயிர்ச் சுருளில்.
எல்லா
சாதிகளும்
ஒளிந்துகொண்டன,
வீசி
எறியப்பட்ட
அவள்
ஆடைகளுக்குள்.
மனிதம்
மறைந்துகொண்டது
உடல்
கிழித்தவன்
விரல்
நகக்கண்ணில்.
மனச்சான்று
மரித்துக்கிடக்கிறது
வாக்குச்
சாவடிகளின்
வாயில்களில்.
இடுகாடும்
சுடுகாடும்
எல்லைகளாக இருப்பதா
நாடு?
வெட்கம்.
Monday, 17 July 2023
பாரதிராசா பிறந்தநாள் 2023
தமிழ்த் திரைமொழியை
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.
பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.
கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலை
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.
கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.
முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.
ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில் அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.
வண்ணக் கனவாய்
வளையவந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.
அத்தனையும் பெற்றவன் நீ.
நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்து
தட்டி எழுப்பியவன் நீ.
இன்று காணும்
திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.
மண்ணின் மணம் கமழ
வாழி நீ!
Tuesday, 11 July 2023
அருகே கடவுள்
ஒற்றைக் கொட்டொன்று
ஓசையெழுப்பும்
நட்ட நடு இரவில்,
வெட்ட வெளியில்
வரம்பின்றி
விரிந்துகிடக்கும் மையிருளில்,
சுடலைமாடன் காடேக
மார்பில் அணைத்தத்
தீப்பந்த வெளிச்சத்தில்
மாடனின் கச்சையை
இறுக்கிப் பிடித்து
“சொள்ளமாடா மழ எப்பவரும்?”
என்று கேட்ட
வேலப்பண்ணனின்
மனதுக்கும் மாடனுக்கும்
மயிரிழை தூரந்தான்.
===========================
'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
11-07-2023
===========================