Tuesday, 17 March 2026

சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல் - நூல் மதிப்புரை

 



=======================================================
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன் அவர்களின் "சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல்" எனும் நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை 2026 மார்ச்சு மாத வையம் இதழில் வெளியாகியிருக்கின்றது.
நன்றி வையம் இலக்கிய மாத இதழ்.
=======================================================

சங்க இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்
நூல் மதிப்புரை - சிராப்பள்ளி ப.மாதேவன்

நூற்களுக்கு மதிப்புரை எழுதுவதென்பது நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ளும் ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். வாசிப்பை, தேடலை விரிவுசெய்யும், புத்தாக்கம் செய்யும் வல்லமை பல நூற்களுக்கு உண்டு என்பதைப் பலவேளைகளில் உணர்ந்திருக்கிறேன். குமரிமாவட்டம், தோவாளையைச் சேர்ந்த பேராசிரியர் இராமசுப்பிரமணியன் அவர்களின் ‘சங்க இலக்கியத்தில் பண்டைத்தமிழர் வாழ்வியல்’ எனும் கட்டுரைத்தொகுதியும் அப்படியான ஒன்றே. இதுவே, தமிழில் பேரளவு எடுத்தாளப்பெற்ற தலைப்பாகவும் இருக்கக்கூடும்.

Sunday, 22 February 2026

Work Isn't Working - நூல் அறிமுகம்

 


 

இணையத்தில் ஓரங்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, அதன் பார்வையாளர்களைப் பார்க்கும் போது பெரு வியப்பாக, பாவமாக இருக்கும். “நீங்கள் ஒரு பூமர். உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்” என்று சொல்லிவிட்டு என்னை நீங்கள் கடந்து போகலாம். ஆனால், அது ஏனென்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். விட்டு விடுதலையாக வேண்டும் என்ற உங்கள் எண்ண உந்துதலின் அடிப்படையில் மறைந்து கிடக்கும் (எங்களுக்கு), நீங்கள் அறிந்தே அமிழ்த்தி வைத்திருக்கிற, அழுத்தம் நிறைந்த பலூனை உங்கள் மனக்குளத்தின் அடியாழத்திலிருந்து வெளிக்கொணர்ந்து சமூக வெளியில் மிதக்கவிடுகிறது இந்தப் புத்தகம். அது இயல்பும் கூட.

இந்தப் புத்தகம் வெறுமனே பெருநிறுவனங்களைப் பற்றியதா என்றால், அதை விட அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றியே பெரும்பாலும் பேச முனைகிறது. அங்கே நிலவும் முன்முடிவுகளுடன் கட்டமைக்கப் பட்ட உரையாடல்களைப் பதம் பிரிக்கிறது. அந்தச் சொற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டவர்களின் மன உணர்வுகளைப் பொது வெளியில் பேசுகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டம் மட்டுமல்ல, இன்னும் பலரின் மனக் குமுறல்களும், ஆற்றாமையும் கொண்ட தொகுப்பு. இவை அனைத்தையும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என  எள்ளலும், நகைப்பும், பகடியும், நக்கலும் குழைத்த எளிய மொழி நடையில் விளம்புகிறது. காட்டாக,

Thursday, 27 November 2025

மூதில் மகளிர்

நெருப்பைச் சுமந்திருந்த
கருப்பைகள்,
எரிமலைகளுக்குப் பாலூட்டிய
வார்முலைகள்,
புயல்கள் படுத்துறங்கிய
தாய்மடிகள்,
பெருங்கடல்கள் அமர்ந்திருந்த
ஒக்கலைகள்.

மாசாத்தியார் சொல்கொண்டு
தொழுவேன்,
கெடுகசிந்தை கடிதிவர் துணிவே.
🙏🙏🙏
========================
சிராப்பள்ளி ப.மாதேவன்
27-11-2022
========================

Tuesday, 18 November 2025

பெரியவர் வ.உ.சி. நினைவேந்தல் 2025

 


மண்ணின் விடுதலையைக்

கண்ணில் காணாது

இன்னுயிர் நீங்கும்

இறுதி நாள்!


கண்பட வெளியே

கனன்றெரியும் விறகு,

புண்பட்டு உள்ளே

நொந்தெரியும் உள்ளம்.


இன்னும்,

எத்தனைக் காலம்

அடுப்படிச் சிறையில்

உழலும் வாழ்க்கை?


அன்றைய நாட்களின்

பெண்களின் நிலைமையை

எண்ணியபடியே

கண்ணீர் உகுத்தது

பெரியவர் உள்ளம்.


குறள் உரைக்க இயலாத 

தன்

குரல்வளையின் மீதும்,

ஆற்றாமை குழைந்த ஏக்கம்.


கூற்றுவன் வாயிலில்

நின்றிருக்கும் போதும்,

நாடும் மக்களும்

நற்றமிழ்க் குறளும்

நெஞ்சில் சுமந்தே

விடுதலை பெற்றது

பெரியவர் ஆவி.


வாழ்க நீ எம்மான்!

வையத்து நாட்டிலெல்லாம்.

வாழி! வாழி!

Monday, 17 November 2025

புகைவண்டிச் சாரளம்


ஒன்றரை அடி
சாளரத்துக்கு வெளியே
உலகம் நடக்கிறது.

கொண்டுவந்த நீரைக்
கொட்டிவிட்டு
நீர் முகரப் போயிருக்கிறது
மேகம்.

மழை கழுவித் துடைத்த
மண் அழகு. 
தூசியிழந்து உயிர்ப் பச்சை
காட்டும்
மரங்கள் பேரழகு.

சிறகுலர்ததும் காக்கை,
உடல் சிலிர்க்கும் குருவி,
பரபரக்கும் தட்டான்கள்,
பனையடி உரசும் செம்மறியாடு,
சேற்றில் நடக்கும் கொக்கு,
ஆற்றில் ஓடும் கலங்கிய நீர்,
அரவமற்ற கருஞ்சாலை...

அடடா எத்தனை அழகு.
ஒப்பனை இழந்தால்
மொத்தமும் அழகு.

வாழிய.. வான் மழை.

=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
17/11/2020
=====================