Monday 23 December 2019

நாடுகாண் காதை - A Time Machine Journey



 
"ப்ரோ... கடைசி டெஸ்ட் ஓகே...டா...."

"அப்படியா மச்சி.. தோ வந்துகிட்டே இருக்கேன். அவங்க மூணுபேரும் இருக்காங்களா"

"ஆமாடா. எல்லோரும் இங்கதான் இருக்கோம்.  சீக்கிரம் வாடா.."

'ஓகே... டா..." என்றவன் காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து காஞ்சீவரம் செல்லும் சாலையில் வேகமாகச் செலுத்தினான்.

மூன்றாண்டுகளாக மூளையைக் கசக்கி, இரவும் பகலும் உழன்று ஐந்து நண்பர்கள் இணைந்து "கால இயந்திரம்" ஒன்றை வடிவமைத்து விட்டார்கள். அதனுடைய இறுதிச் சோதனை முடிந்த செய்தியைத் தான், இவனுக்கு நண்பன் ஒருவன் தொலைபேசியில் சொன்னான். கடும் உழைப்பு. திரைப்படங்கள், புத்தகங்கள் என பல்வேறு தூண்டுதல்களால் ஆசை எழுந்து இன்று அது அவர்களுக்குக் கைகூடிவிட்டது. அந்த இயந்திரத்தை முடுக்கி கடந்த காலங்களுக்குள் பயணம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை உலகெங்கும் இருக்கிறது. ஆனால், அதற்கான மாதிரிகளோ விளக்கங்களோ இன்றி இவர்கள் அதை வடிவமைத்து விட்டார்கள். அதன் முழுத்திறனும் எப்படியிருக்குமென்று அவர்களுக்குத் தெரியாது.

சிந்தித்துக் கொண்டே வந்தவன் சாலையின் இடதுபுறம் இருந்த ஒரு பண்ணைவீட்டுக்குள் வண்டியைச் செலுத்தினான். சேகரின் வீடு அது. சிங்கப்பூரிலிருக்கும் அவனது அப்பா எப்பொழுதாவது வந்தால் தங்குவதற்காக வாங்கியிருந்தார். அதைத் தான் இந்த ஆய்வுக்கான இடமாக மாற்றிக் கொண்டார்கள். பிரியா தான் அந்த மாற்றத்திற்கான முக்கிய காரணி. நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கழகத்தில் படிக்கத்தொடங்கிய நாளிலிருந்தே கண்டுபிடிப்புகளின் மீது பேரார்வம் கொண்டிருந்த நான்கு நண்பர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டாள். எல்லோரும் வேறு வேறு வேலைகளில் சேர்ந்த பின்னும் இன்னும் ஆய்வு தொடர்கிறது. ஐந்து பேரில் முருகன் அமைதியானவனாகத் தெரிந்தாலும் எதையேனும் சாதித்துவிட வேண்டுமென்ற வெறியை மனதில் சுமப்பவன். அந்தக் கூட்டத்தின் முக்கியமானவன் ஆனந்தன். திட்டமிடுவதும், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி திட்டத்தின்படி செயல்படுவதும், நண்பர்களைத் திட்டத்தில் வழிநடத்துவதும் அவனே. இவர்கள் நான்குபேரும் வரவேற்பறையில் அசோக்கின் வருகைக்காய்க் காத்திருக்கிறார்கள். வெளியே கார் நுழையும் ஓசை. தொடர்ந்து கதவு திறக்கும் ஓசை.

ஐந்துபேரும் ஒற்றைக் கூச்சலில் "ஓவென" மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள். இயந்திரம் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். சிறிய, ஏறத்தாழ  கார் போன்ற வடிவத்தில் இருந்தது இயந்திரம். ஆனந்த் அதை ஒரு குழந்தையைப் போல தடவிக் கொண்டே

"என்னங்கடா பயணத்தைத் தொடங்கலாமா?" என்றான்.

"ம். முதல் டிரையல் போகலாம்" பிரியா

"எங்க போறது"

"ஏறுங்க எல்லோரும். ஒரு டேட்ட பிக்ஸ் பண்ணி என்ன நடக்குதுன்னு பாப்போம்."

ஒரே குரலில் சரியென்று சொல்லிவிட்டு அனைவரும் ஏறிக்கொண்டார்கள். எல்லோருக்குமே உள்ளுக்குள் அறிவியலையும் தாண்டி கொஞ்சம் அச்சமிருந்தது. 

"எதுக்கும் நேத்து டேட்ட போடு மச்சி. பிரச்சனை வந்தாலும் பெரிசா இருக்காது சமாளிச்சிரலாம்" என்றான் அசோக். அதுவே சரியென்று அனைவருக்கும் தோன்றியது. பிரியா, 22-12-2019 என்று மெல்லிய நடுக்கத்துடன் தட்டச்சு செய்து கட்டளை பிறப்பித்தாள்

 மறு நொடி....

ஒரு அழகான மலையில் சிறிய குளம் போன்ற பகுதி. பச்சை போர்த்திக் கிடந்தது அந்த மலை. சுற்றிலும் வளர்ந்து ஓங்கிய மரங்கள், குறுஞ்செடிகள். கதிரவன் உச்சியில் இருந்தான். இவர்களின் இயந்திரம் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தொலைவில் கீழ்நோக்கி ஒரு பாதை சென்றது. பார்த்தால் அடிக்கடி மனிதர்கள் பயன்படுத்தும் பாதை என்பது தெரிந்தது. கீழே ஏதேனும் ஊர் இருக்கலாம். எந்த ஊர் எந்த இடமென்று தெரியவில்லை. யாரேனும் வந்தால் கேட்கலாம். அல்லது கீழே இறங்கிச் சென்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டார்கள்.

கீழே இறங்கத் தொடங்கினார்கள். ஆனந்த் சுற்றுமுற்றும் பார்த்தான். ஏதோ தவறு என்று தோன்றியது. கீழே தரைப் பகுதியிலும் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. அது சுற்றுலாத் தலமாக இருப்பதற்கான அறிகுறிகளும் இல்லை. சிறு குழப்பத்தோடு எல்லோருக்கும் பின்னால் அவன் நடந்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் கீழிருந்து குரல்கள் மெலிதாகக் கேட்க ஆரம்பித்தன. மனிதர்கள் வரும் ஓசை அது என்பது அவர்களுக்குப் புரிந்தது. முருகனின் மனதுக்குள் பேராவல். நேற்றுக்குள் மீண்டும் வந்திருப்பது எல்லையில்லா வியப்பைத் தந்தது. எதிரே வருபவருக்கு அது நிகழ்காலம். இவர்களுக்கு இது இறந்த காலம். விந்தைதானே. வருபவர்களிடம் அவர்களின் அடுத்த நாள் குறித்த நிகழ்வொன்றைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தலாம் என்று நண்பர்கள் அனைவரும் ஆவலோடு தயாரானார்கள். ஆனால், எதிரே..

வடபழனி முருகன் கோயில் பல்லக்கு போன்ற ஒன்றைச் சுமந்துகொண்டு நான்குபேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். கூடவே ஏழெட்டு பேர் முன்னும் பின்னுமாக, வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள். சிலர் கைகளில் வாள் வைத்திருந்தார்கள். இன்னும் கொளுத்தாத துணிப்பந்தம் ஏந்தியபடி இருவர். ஓரிரு பானைகளைச் சுமந்தபடி இருவர். பல்லக்கில் நடுவயது கடந்த ஒருவர் இருந்தார். அவர்களது ஆடையும் ஏதோ ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தில் வருவது போல தோன்றியது நண்பர்கள் ஐவருக்கும்.

காலப் பிழை ஒன்று இயந்திரத்தில் நடந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்தனர். எந்த ஆண்டில் இருக்கிறோம் என்பது கூட விளங்கவில்லை. அதற்குள் அந்த பல்லக்குக் கூட்டம் இவர்களை நெருங்கிவிட்டிருந்தது. முன்னால் வந்த இருவர் எச்சரிக்கையாக வாளை உருவிக் கொண்டார்கள். சேகருக்கு உள்ளூர பகீரென்றது. பல்லக்கிலிருந்தவர் இவர்களின் உடைகளைக் கூர்ந்து பார்த்தார். ஆனால் அறிந்துகொள்ள இயலவில்லை என்பதை அவர் நெற்றிச் சுருக்கம் காட்டிக் கொடுத்தது. பிரியா முன்னால் வந்தாள். 

"ஐயா.. இது எந்த ஊரு?. இது எந்த வருடம்?" என்று கேட்டாள்.

"இது குறத்திப் பாறை. ஊரு கீழே இருக்கு" -பானை சுமந்தவர் பதில் சொன்னார். வாளேந்தியவர்கள் எச்சரிக்கையாக நின்று கொண்டிருந்தார்கள்.

"நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்" மேலேயிருந்து கேள்வி வந்தது.

'நாங்கள். அந்த ஊருக்குத்தான் போக வேண்டும்"

"ம்"

இவர்கள் பிரச்சனை இல்லாதவர்கள் என்று அறிந்துகொண்ட கூட்டம் நடக்கத் தொடங்கியது .வரிசையின் கடைசியாக நடந்து வந்தவனிடம் நெருங்கினான் முருகன்.

"ஏன் அவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர் யார்?" என்று கேட்டான்.

"ஐயா அது தலையெழுத்து. புண்ணியம் பண்ணினவன் பல்லக்குல இருக்கான். இவனுக விதிப்பொறப்பு அவர தூக்கிச் சுமக்கிறாங்க" என்றபடி அவனும் நடக்கத் தொடங்கினான்.

"என்னடா இது அடிமையா இருக்கிறத விதின்னு சொல்றான்.  ம்... எந்த காலண்டா இது." புலம்பியவாறே முருகன் நடந்தான். பாதை வளைந்து நெளிந்து சென்றது.  இன்னும் கொஞ்ச தொலைவு இறங்கினால் ஊர் வந்துவிடக்கூடும். அடுத்த சிறு வளைவில் ஒரு தேக்குமரத்தின் கீழே இருந்த பாறையில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை நெருங்கினார்கள்.

"ஐயா. தரையிலிருக்கும் ஊருக்குச் செல்வதற்கு இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்"

"அண்மையில் தான் இருக்கிறது. ஊர்."

"ஐயா இது என்ன காலம்"

"ம்... மண்பிறந்து பத்தடுத்த கோடி நாள் இருக்கலாம். உயிர் பிறந்து வளர்ந்து பேசி பத்துநூறாயிரம் நாள் இருக்கலாம்".

நண்பர்கள் அனைவரும் தலையைச் சொறிந்து கொண்டார்கள்.ஆனால் அவரைப் பார்த்தால் பேச வேண்டும்போல் தோன்றியது. அதற்குள் அவரே தொடர்ந்தார். "சரி நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?"

முருகன் முந்திக்கொண்டான். "ஐயா நாங்கள் உங்கள் எதிர் காலத்திலிருந்து வந்திருக்கிறோம்."

அவர் கண்களைச் சுருக்கினார். உதட்டோரம் மெல்லிய புன்னகைக் கீற்று.

"ஐயா.. புரிந்து கொண்டீர்களா?" மறுபடியும் கேட்டான் முருகன்.

"புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் அருள் கூர்ந்து நீங்கள் கடவுளிடம் இருந்து வருகிறீர்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். பொல்லாத மக்கள் சிலர் உங்களைத் தொழச் சொல்லி மற்றவரிடம் சொல்வார்கள்" "அதைப் அறப் பயன் என்று வேறு சொல்லத் தொடங்கிவிடுவார்கள்" என்றவர் வெடிச்சிரிப்பு சிரித்தார்.

"ஆமாம் ஐயா நாங்க கீழே வரும்போது பல்லக்கில் ஒருவரை வைத்து நான்கு பேர் தூக்கிட்டுப் போறாங்க. கேட்டா புண்ணியம்னு வேற சொல்றாங்க"

"அப்படித்தன் அவர்கள் சொல்லுவார்கள். நம்மிடையே வலு, திறமை அல்லது பொருள் பற்றி இருந்த வேறுபாடுகளை வேறுபாடுகளாகவே நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம். அப்படி ஏற்றுக்கொள்வதுதான் இயல்பும் அறிவும் கூட. ஆனால் வளர்ந்த ஒரு சமூகத்தின் ஊடே வளர்ச்சியடையாத ஒரு சமூகம் நுழையும் போது இத்தகைய அறிவைப் புரிந்து கொள்ள இயலாத போது; அது எங்கிருந்தோ வந்ததாகக் கற்பனை செய்து கொள்ளும். நான் ஏற்கனவே அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் பலர் இன்னும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்"

"என்ன சொன்னீர்கள் ஐயா?"

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
 
 என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறேன்."

 "ஐயா... இது உங்க பாட்டா. அப்ப நீங்க திருவள்ளுவரா?" என்ற முருகன் வியப்பின் எல்லைக்குப் போனான். எல்லோருக்கும் பெருவியப்பு வந்தது.

"திருவள்ளுவரா? ... யார் அது. நான் அவரில்லை. ஆனால் இந்த பாடல் என்னுடைதுதான். இதுபோல் குறள் வெண்பாக்கள் ஏராளம் எழுதியிருக்கிறேன்"

"நீங்களே அந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்லிருங்களேன்"

"அப்படியா. சரி. கேளுங்கள். உங்களுக்கு முன்னானலே பல்லக்கைச் சுமந்து சென்றவருக்கும் அதில் அமர்ந்திருப்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இருக்கிறதே அது அவர்கள் செய்த அறத்தினால் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டாம். நான் 'வேண்டா' என்ற சொல்லை எழுதியிருக்கிறேன். ஆனால் பலரும் அதை எடுத்துக்கொள்ளாமல் விடுகிறார்கள். ஆனால், மழித்தலும் நீட்டலும் வேண்டா எனும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இந்த வேறுபாடு அறப்பயனாலோ ஊழ்வினையாலோ ஏற்பட்டதல்ல. மேலே இருப்பவன் அறம் மட்டுமே செய்திருக்கிறான் என்பதற்கான உறுதி ஏதும் இல்லை. அதுபோல சுமப்பவர்களும் அறமே செய்யவில்லை என்றும் கூறிவிட முடியாது."

"பிறகு சிலர் ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள்?"

"தன் வலுவும் திறமையும் இன்றி, அரசின் துணைகொண்டோ பிற வழியிலோ பிறரை ஏமாற்றி ஒரு நிலையை அடைபவர்கள் இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். நான் வேறொரு குறளில்....

'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.' என்று கூடச் சொல்லியிருக்கிறேன்.  நேர்மையானவனது வறுமை ஆராயப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். ஆமாம் அது விதிப்பயனல்ல."

"ஐயா சுமப்பவர்கள் அடிமையாக இருந்துதானே அந்த வேலையைச் செய்கிறார்கள்."

"இருக்கலாம். நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள். "

"நாங்கள் வேறுவேறு நிறுவனகளில் வேலை செய்கிறோம்"

"நிறுவனம் என்றால்?"

"ம்... ஒரு இடத்தில் வேலை செய்கிறோம் ஐயா."

"ஓ.. என்ன வேலை?. வேலை உங்களுடையதா? விளைபடு பொருள் யாது"

"இல்லை ஐயா. வேலை வேறு ஒருவருடையது. விளைபடு பொருளும் அவருடையதே. எங்களுக்கு ஊதியம் மட்டும்"

"ஓ..  தொழுது உண்ணும் வழியோ. ஒரு வழியில் நீங்களும் அடிமைகள் தானோ? விளங்கவில்லை."

"ஐயா... "

"பற்றம் வேண்டாம். இயல்பைச் சொன்னேன். நீங்களும் வேலைக்காரனாய் இருப்பதை நல்வினை தீவினைகளோடு பொருத்தாதீர்கள். இறந்த காலங்களில் மட்டுமே அடிமைகள் இருந்தார்கள் என்று எண்னாதீர்கள். ஏனென்றால் 'தலைமை' என்பது விலங்குப் பண்பு. இயல்பு. உலகம் இருக்கும் வரை அது மறையாது. ஆனால், தகுதியும் திறமையும் இன்றி, வஞ்சித்தோ, ஏய்த்தோ ஒருவன் ஒரு நிலையை அடைந்தானாகில், அவன்மீது ஐயப்படுங்கள். மனித குலத்துக்கு எதிரான எதுவுமே விலக்க வேண்டியதே. நல்வினை தீவினை குறித்த  இது போன்ற அரைகுறைச் சிந்தனைகளும் அதற்கு விதிவிலக்கல்ல."

"புரிந்தது ஐயா. இன்று எங்கள் பயணத்தின் காலம் முடிந்துவிட்டது. மீண்டும் வருவோம். மிக்க நன்றி ஐயா"

"நன்றி வேண்டாம் மக்காள். குறளை மறந்துவிடாமல் இருங்கள்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை".... என்றவாறு அவர் நடக்க ஆரம்பித்தார்.

Saturday 14 December 2019

நாடகம்


வெட்டப்பட்ட சிறகுகள்
அழகாய் இருக்குமென
ஆசிரியக் கிளியொன்று
பாடம் நடத்துது.
அடிமையாய் இருப்பதற்குச்
சிறகுகள் எதற்கென்று
அப்பா கிளியங்கே
ஆறுதல் சொல்லுது.
அத்தனை  உயிருக்கும்
மொத்தமாய் மழையொன்று
வெள்ளமாய்க் கொட்டுது.
அம்மணமாய் இருந்தபோதும்
பிள்ளைக்கிளி மட்டும்
நனையாமல் இருக்குது.
பொல்லாத நாடகம்
கூண்டுக்குள்ளே,
எந்நாளும் நடக்குது.

Friday 13 December 2019

விழுப்புரம் துயரம் - திசம்பர் 2019

அந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து பகலில் தொடங்கிய வேதனையின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

சிலர் வேதனையில் பின்னூட்டங்களில் திட்டுகிறார்கள். உண்மைதான் எவர் உயிரையும் எடுக்க எவருக்கும் உரிமை இல்லைதான். நடந்த நிகழ்வு பெரும் சோகம் தான். பதிவிட்டுத் திட்டியவர்கள், பின்னூட்டங்களில் திட்டியவர்கள் என பெரும்பாலோர் வேதனையில் தான் திட்டியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும் அவையும் வேதனையளித்தன என்பதை மறுக்க முடியவில்லை. “கேட்டால் உதவியிருப்பார்கள்’, “லாட்டரி வாங்கியவனுக்கு உழைக்கத் தெரியாதா?” “நீ மட்டும் செத்து தொலையலாம்ல” , என்பது போன்ற பதிவுகளும்; அதைவிடக் கடுமையான பின்னூட்டங்களும் முகநூலில் வெளிப்பட்டன. ஏராளமான பெண்களும் கண்ணீரோடும் கோபத்தோடும் கவலையோடும் பதிவிட்டிருந்தார்கள்.

நாம் யாரிடம் சொல்கிறோம்??

பிணங்களிடம் போய் நின்றுகொண்டு தற்கொலை தீர்வல்ல என்று பேசுபவது வெறும் புலம்பல் தானே.

என் குழந்தைக்கு நஞ்சைத் தரவேண்டும் என்று நான் கற்பனையில் கூட எண்ணியதில்லை. கண்டிப்பாக நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள். இயல்பு இப்படியிருக்க; அந்த மூன்று பிஞ்சுகளின் தந்தையும், நஞ்சுண்ட குழந்தையைத் தோளில் சாய்த்து வைத்திருக்கும் தாயும் மட்டும் இதற்காகவே பிறந்தவர்கள் போன்று நாம் எப்படி நினைத்துக் கொண்டு திட்டுகிறோம். புரியவில்லை. லாட்டரியினால் கடனானார். கடனைத் தீர்க்க வேலை செய்ய வேண்டும். ஆனால் ஒரு “பத்தர்” ஆக ஒன்றும் செய்ய இயலவில்லை என விரக்தியின் எல்லைக்குப் போய்விட்டார். முடிந்து போனது ஒரு குடும்பத்தின் வாழ்வு.

திருச்சியில்; லாட்டரி. சூது, மது என எந்தப் பழக்கமும் இல்லாமல் பிழைப்புக்குத் திண்டாடும் பத்தர்களை, ஆசாரிகளை நான் நேரடியாக அறிவேன்.

நம் உளச்சான்றுக்கு ( மனசாட்சிக்கு ) சில கேள்விகள்.

அண்மையில், துபாயில் வேலை செய்தவர் லாட்டரியில் 27 கோடிகள் பெற்றார் என்ற செய்தி இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியான போது “அட…நமக்கு ஒரு வாய்ப்பு…கிடைக்காதா” என்று யார் மனதிலும் தோன்றவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

இன்னும் கூட அண்டை மாநிலங்களில் அரசு நடத்தும் லாட்டரி இருக்கிறதே. அது பற்றிய நம் கருத்து என்ன?.

அதையெல்லாம் விட பதிவுகளில், பின்னூட்டங்களில் பொங்கிய ஆண்களில் பெண்களில் எத்தனை பேர் பெரிய நகைக் கடைகளை விடுத்து ஆசாரிகளிடம் நகை செய்து வாங்குகிறீர்கள். உங்களுக்கு ஆசாரிகளை விட அட்சயத் திரிதியை முக்கியமாகப் போய்விட்டது தானே?

பெருங்கடை விற்பனையாளரை முதலாளியை வெளிச்சத்தில் பார்த்து புன்னகைக்கும் நாம் உமி நிறைத்த குமுட்டிக்கு நடுவே ஊதிக் கொண்டிருந்த பொற்கொல்லர்களை மறந்து போனோம். உண்மைதானே?

வாழ்வின் கடைசி நிமிடங்களில் தன்னைச் சுற்றியிருந்த சமூகத்தின் மீது அவருக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது என்று எவரேனும் உறுதி தர முடியுமா?

அந்தப் பிஞ்சுகளின் வாயில் விழுந்த நஞ்சின் துளியில் ஒரு நுணுக்காவது நம்முடைய பங்கு என்று எண்ணாதவரை இந்த மண்ணைக் காப்பாற்ற முடியாது. மரணங்களைத் தடுக்க முடியாது.

எவனோ ஒருவன் நேரம் போகாமல் எழுதிக் கொண்டிருக்கிறான் என்று திட்டிவிட்டோ, நகைத்துவிட்டோ நீங்கள் கடந்து போகலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அருள் கூர்ந்து இனியாகிலும் “இறந்து போனவருக்கு அறிவுரை சொல்லாதீர்கள்.”

வேறு வேலை செய்து பிழைத்திருக்கலாமே. மற்றவர்களெல்லாம் இல்லையா என்று கேட்டுக்கொண்டும் உங்களில் சிலர் வரலாம்.
காத்திருங்கள். இப்படியே போனால் நம் பிள்ளைகளை நோக்கியும் இந்தக் கேள்வி வரும்.

என்ன செய்வது; மார்பிள் போட்ட வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு மலைகளை உடைப்பதைக் கண்டு, கோபம் கொண்டு; “இயற்கையை காப்பாற்றுவோம்” என்ற பதிவை முகநூலிலும் வாட்சப்பிலும் “SHARE” பண்ணுகிறவர்கள் தானே நாம்.

கனத்த நெஞ்சுடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்
13-12-2019

Wednesday 11 December 2019

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

 
     கைபேசிகள் இல்லாத காலத்தில் கடைசி இரயிலில் ஏறி பிரிந்து செல்லும் காதலனை கண்கொட்டாமல் பார்த்து நின்று, கடைசிப் பெட்டி கண்ணில் இருந்து மறைந்த பின்னும் கை அசைத்து நிற்கும் பெண்ணைப்போல பார்வையாளனைக் கட்டிப்போடும் திரைப் படங்கள் நல்ல படங்கள் என்று கருதுகிறேன். அப்படியான சில வண்டிகள் எப்போதேனும் நம் நிலையங்களில் வந்து நிற்கும். அதில் ஒன்று இது.

   வெகு காலமாக கதைகளைப் பற்றியான உன்னதக் கதைகள் இங்கே ஏராளமாகப் புனையப்பட்டுக் கிடக்கின்றன. அவ்வப்போது யாரோ வந்து அவற்றின் உன்னதங்களை உதறியெறிந்துவிட்டு  தூசிதட்டி அவற்றின் உண்மை உருவத்தை வெளி உலகிற்குக் காட்டுகிறார்கள். அவர்கள் வரிசையில் இயக்குநர் அதியன் ஆதிரையும் இணைகிறார். நீண்டகாலமாக தொட்டுக் காட்டப்படாத மண்வாசனை அவர் மீது வீசுகிறது.

   இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகள் இன்றும் எங்கேயோ வெடித்துக் கொண்டிருக்கின்றன. உயிர்ப்பலி வாங்குகின்றன என்று தொடங்குகிறது களம். யாரோ ஒரு அறிவாளியால் கண்டுபிடிக்கப் பட்டு ஏராளமான அறிவும் உழைப்பும் கொட்டி செய்யப்பட்ட ஒரு குண்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் குண்டுகளில் கால் தடுக்கி இடறுவதும், எழுவதுமே படம்.

     பொருள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே வந்து விட்ட கைக்கூலி, இலஞ்சம், ஊழல் என சில குண்டுகள். தமிழின வாழ்வியலுக்குள் புதைந்து கிடக்கும் சாதியக் குண்டுகள். மதங்கள் சொல்லும் மனிதம் எனும் சொல்லை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வெளியே பொருள்தேடும் வணிகக் குண்டுகள், காசு பணம் என்று வரும்போது மனிதநேயத்தைச் சிதறடிக்கும் அதிகாரக் குண்டுகள், பெருமுதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்ட அரசியல் குண்டுகள், தான் இறந்துபோவோம் என்பதைக் கூட மறக்கடிக்கிற ஆதிக்கக் குண்டுகள் என நம்மைச் சுற்றி புதைந்து கிடக்கிற; எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடும் அபாய நிலையில் இருக்கிற ஆயிரமாயிரம் குண்டுகளை நினைவு படுத்துகிறது படம்.

    படம் முடிந்து அரங்கை விட்டு வெளியே வரும்போது ஆயுத ஒப்பந்தம், DEFENSE CORRIDOR போன்ற குண்டுகள் உங்கள் ஆழ்மனதில் வெடிக்கத் தொடங்கியிருந்தால்; காகிதக் கொக்கு ஒன்று உங்கள் கைகளில் இருப்பதுபோல் நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு மிக்க நன்றி. வரும் தலைமுறையின் வாழ்நாளைக் குறைப்பதை நீங்கள் விரும்பவில்லை. எல்லோருக்குமானது இந்த உலகம் என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது.

      காட்சிகள் படமான விதம் இயல்பாய் இருக்கிறது. இசையிலும் மண்ணின் மணம். திரைப் படங்களில் காடப்படாத தமிழ் நிலத்தின் பக்கங்கள் இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன என உணர்த்துகின்றன இசையும் படப்பிடிப்பும். தென்மேற்கில் இருப்பவன் தெரிந்து வைத்திராத வடகிழக்கின் வாழ்வியலை சின்னச் சின்னக் கோலங்களாய் வரைகிறது திரை. அறியாத பண்பாட்டுக் கூறுகளை தெளிவாய் அறிமுகம் செய்கிறது. வாணம்பூ சுற்றிய தெற்கத்திக் கைகள் மாவளி சுற்றுவதன் கூறை, புரிந்து கொள்ளும் விதமாய்ப் பரிமாறுகிறது. பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் எழுவதற்கானவையே அன்றி அடிமைப்படுவதற்கு அல்ல என்பதும், பொருளியலும் சாதியமும் புனைந்து வைத்திருக்கும் கதைகள் உடைக்கப் படவேண்டும் என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்பி நிற்கிறது.

     இரண்டாம் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். பல காட்சிகளில் முகவெளிப்பாடுகள், உடல்மொழிகள் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதுபோன்ற மண்ணின் படங்களை எடுக்கத் துணியும் இயக்குநர்களுக்கு அன்பான வேண்டுகோள் நடிகர்கள் தேர்வில் மிக மிக கவனமாக இருங்கள். யாரோடும் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதுவே உங்கள் கதைக்களத்தை மிகத் தெளிவாக எங்கள் முன்னே நிறுத்திவிடும். நீங்கள் பேச நினைக்கிற அரசியலைப் படம் பேசிவிடும்.

   படக்குழுவிற்கும் இயக்குநர் அதியன் ஆதிரைக்கும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திற்கும் பாராட்டுகள்.

    இறுதியாக ஒன்று. ஒரு நல்ல படம் தர முனைகிற இயக்குநர்களைப் போல நல்ல படத்தைப் பார்க்க முனைவதற்கும் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஒன்று, இந்த நிலம் குறித்தான அதன் மக்கள் குறித்தான பகுதிவாரியான அறிவும் புரிதலையும் பெற்றுக் கொள்வது. அல்லது, இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு போன்ற படங்களைப் பார்க்கும் போது இதற்கு முன் படித்து வைத்திருக்கும் Modern புனை கதைகளையும், இந்த நிலத்தின் வாழ்வியல் அல்லாத கதைகளையும், படங்களையும் முற்றாக மறந்து விடுவது. செவ்விலக்கியப் பரிச்சயம் இல்லாத நம் மீது கற்பிதங்களாய் போர்த்தப் பட்டிருக்கும் கதைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டுக் கொள்வது. அதுவே வாழ்வியல் சார்ந்த இலக்கியங்களாக வருங்காலத் திரைப்படங்களை மாற்றக் கூடும். 

என்றென்றும் அன்புடன்
சிராப்பள்ளி ப.மாதேவன்
11-12-2019


பாரதி பிறந்தநாள் 2019


கற்பனைக் காணியில்
கவிதையின் வரிகளில்
வீடு கட்டிக்கொண்டாய்.
எழுத்துகளால்
சில வேளைகளில் இரைப்பை
நிறைத்துக் கொண்டாய்.
இயற்கையை முயங்கி
இன் தமிழில்
மானுடம் பெற்றெடுத்தாய்.
பிறந்தாய் ஒளிர்ந்தாய்
மறைந்தாய்,
கண்மறைக்கும் முன்னுச்சி
மயிர்விலக்கி
காணும் முன்னே மறைந்த
மூன்றாம்பிறை போல.


Wednesday 4 December 2019

காணாமல் போன கதை - தொடர் 3

     "என்ன கணையா... கோட்டை வாயில்கதவில் மனிதப் பற்களைப் பார்த்தேன் என்றவுடன் திகைக்கிறாய். அது ஊர் அறிந்தது தானே" - என்று பொய்கையார் சொன்னதும் கணைக்கால் இரும்பொறை மெல்ல இயல்புக்குத் திரும்பினான். 

"இல்லை ஐயா. ஒரு மனிதனுடைய பற்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து அவரை அவமானப்படுத்துவது அத்துணை சரியானதல்ல என்பது போல் இருந்தது தங்கள் முக வெளிப்பாடு. அதனால் தான்...."

"உண்மைதான் கணை. ஒருவனை வெல்லுதல் வீரமாகக் கருதப்படலாம். ஆனால், அவனை இகழ்வதற்காகச் செய்யப்படும் இதுபோன்ற செயல்களை அத்துணை உயர்வானதென்று நூலறிந்தோர் போற்றுவதில்லை"

"ஐயா.. பெரும்புலவன் மாமூலனார் பாட்டொன்று இதற்கு முன்னே இது போன்றதொரு செயல் நடந்ததைச் சொல்கிறதென்று அவையில் சிலர் சொன்னார்களே"

"புறத்திணைப் பாடலா?".... ஆழ்ந்து விடை தேடும் நோக்கில் இருந்தது வினா.

"இல்லை ஐயா. அகத்திணை என்றுதான் சொன்னார்கள்"

"கணை... பெரும்புலவர்கள் பண்டைய மரபு நூல்களின் வழி ஒழுகுபவர்கள். எல்லாவற்றையும் போற்றுவதில்லை. கடுஞ்சொல் கூறாது வேறு சொற்கொண்டுகூட அதை மென்மையாக இடித்துரைப்பார்கள். அங்கு நடந்த நிகழ்வை நீ அறிவாயா?"

"முழுவதுமாக இல்லை ஐயா"... என்றவனின் உள்ளத்தில் பொய்கையாரிடமிருந்து அதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

"வேளாண்மையைப் பெருக்கிய சோழர்களுக்கு நாடுகாவல் முகாமையானது. சேர நாட்டைப் போல யானைப் படையும் தேவையானது. பெருங்களிறுகளைக் காட்டில் இருந்து பிடித்துவருவது அவர்களுக்கு கடினமான வேலையாக இருந்தது. வேளிர் சிலரே உதவியிருக்கிறார்கள். ஒருமுறை எழினி என்பவன் சோழவேந்தனுக்கு யானைவேட்டை நிகழ்த்த மறுத்துவிட்டான். நீலமலையின் வடக்கிருந்து வந்த இந்தச் செய்தியை அறிந்த பூம்புகாரின் மன்னன் சினம் கொண்டான். கழார்த்துறையின் தலைவன் மத்தியை அழைத்து எழினி தன்னை மதியாது இகழ்ந்து பேசியதைச் சொல்லி அவனைப் பிடித்து வருமாறு சொன்னான்."

"என்றால்.. மத்தி நீலமலைக்கு வந்தானா?"

"ஆம். படைகொண்டு வந்தான். மத்தி பரதவர் தலைவன். கடலோடி. வேறு தேயங்களுக்குப் போய் பழக்கப் பட்டவன். கடல்நடுவே பிடிபடும் கொள்ளையர்களை மீண்டும் அடையாளம் காணும் முகமாக அவர்களின்  முன்பற்களைப் பிடுங்கிவிடும் பழக்கம் அறிந்தவன். எல்லாவற்றையும் விட சோழன் மேல் மிகுந்த மதிப்புகொண்டவன். வேகமாகப் போரிட்டு எழினியைப் பிடித்து அவனது பற்களைப் பிடுங்கிவிட்டான். அதை சோணாட்டின் வெண்மணி எனும் ஊர் வாயில்கதவில் பதித்து விட்டான். அப்படியென்றால் எழினி எத்துணை வலியவனாக இருந்திருக்க வேண்டும். இந்த அவமானம் தாங்காது அவன் என்ன செய்தான் என்று அறிதல் இயலவில்லை. நானறிந்து இது போன்ற நிலைகளில் தமிழரசர்கள் உயிரை விட்டுவிடுவார்கள்"

      நெஞ்சுக்குள் ஏதோ தைத்தது போலிருந்தது இரும்பொறைக்கு. உள்ளுக்குள் ஒருநூறு வினாக்கள் எழுந்தன. இவரிடம் கண்டிப்பாகக் கேட்டுவிடவேண்டும் என்று தோன்றியது.

"ஐயா... அரசுக் கட்டமைப்புகள் ஏற்படும்போது இது போன்ற நிகழ்வுகள் இயல்புதானே.. தவிர்க்க இயலாதது தானே"

"நீ... சேர நாட்டு நிலையைச் சொல்கிறாய் என எண்ணுகிறேன். தமிழகத்தின்கண் முதலில் பெருமன்னனாக வர விரும்பி சில நடவடிக்கைகளை சேரர்கள் எடுத்தார்கள். ஆனால், அது போராக இல்லாமல் ஒரு உடன்படிக்கையாகவே இருந்தது. ஆய் நாட்டின் வடக்கிலிருந்து வானியாற்றுக்கரைவரை... அதாவது கொண்காணநாட்டிற்கு வடபகுதிவரை எட்டு பகுதிகளாகப் பிரிந்து தனித்தனியாக இருந்த சேரர் குடிகள், கடற்பகுதிகளிலும், வடமலைப்பகுதிகளிலும் பகைவர்களின் தாக்குதல் பொறாது ஒன்றாய் இணைந்து காவல்செய்ய முனைந்தனர். தங்களுக்குள் முறைவைத்து ஆளும் விதமாக ஏழு மணிமுடிகளை ஒற்றை ஆரமாகச் செய்து எட்டாவது மணிமுடி சூடுபவருக்கு அணிவிக்கும் வழக்கத்தைக் கொண்டார்கள். இதுவே தமிழ்கூறும் நல்லுலகில் எண்பேராயம் என முதலில் அழைக்கப்பெற்றது. ஆனாலும், அந்த உடன்படிக்கையில் இவர் எண்மரைத் தவிர வேறு சிலர் அல்லலுற்றார்கள் என்பது மறுப்பதற்கில்லை"

      பேசிக்கொண்டே நடந்ததில் கோட்டையின் பெரும்பகுதியைத் தாண்டி அறப்புரையின் அருகில் வந்துவிட்டார்கள். உள்ளே மாலைநேர உணவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கழுமலம் கோட்டையில் இப்பொழுது ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.
 
யானைகளுக்குச் சோறாக்கும் ஆக்குப்புரை ஒன்றும் பெரிதாக இருக்கிறது. மாந்தையில் இறக்கிக் கொண்டுவரப்பெற்ற கழுத்துமயிர் சிலிர்க்கும் குதிரைகள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளைப் பராமரிப்பதற்கு கோஇல்கோடு மலையடிவாரத்திலிருந்து பலரை அழைத்து வந்திருக்கிறார்கள். எல்லோருக்குமான உணவு சமைக்க தனியாக சிலர் இங்கிருக்கிறார்கள்.

"என்ன கணை.. சென்று குளித்துவிட்டு வருகிறாயா?  சோறு உண்ணலாம்"

"வருகிறேன் ஐயா.. நீங்கள் காத்திருக்க வேண்டாம். உண்ணுங்கள்"

"இன்னும் பல்லெறிந்த கதையை நீ சொல்லவில்லையே.. அதைக் கேடுக்கொண்டே உண்ணலாம் என நினைத்தேன்."

"ஐயா... நீங்கள் அறிந்தது தானே. நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா உங்களுக்கு."

"யார் வாய் கேட்பதிலும் அதை உன் வாயால் கேட்பதே நன்று. அதனால்தான்...'

"விரைந்து வருகிறேன் ஐயா"

       இயற்கையாக இருந்த ஒரு சுனையை செப்பனிட்டு மூன்று புறங்களிலும் கல்லெடுத்து, படித்துறை செய்து நீராவி போன்று இருந்த அந்தக் குளம் மாலை வெயிலின் இறுதி வெளிச்சத்தில் மின்னியது. சில்லிட்டுக் கிடந்த அந்த நீரில் இறங்கினான் இரும்பொறை. அடிவயிற்றை நீர் தொடும்போது உச்சி குளிர்ந்து உள்ளம் இலகுவானது போன்று உணர்ந்தான். மெல்ல மூச்சடக்கி முழுகினான்.  தந்தை இதற்குள் முசிறியைத் தொட்டிருப்பார். அங்கு தங்கிவிட்டு நாளை பொழுதில் தொண்டிக்குச் செல்வார் என்ற எண்ணம் தோன்ற நீருக்குள்ளிருந்து வெளிப்பட்டான். சுற்றிலும் எழுப்பிய சிற்றலைகள் மெதுவாகக் கல்சுவற்றைத் தொட்டன. சுவற்றின் கல்லிடுக்கு ஒன்றின் உள்ளிருந்து ஒரு நீர்ப்பாம்பு தவளையின் அசைவோ என்று நினைத்து தலையை வெளியே நீட்டியது. ஏதும் இல்லையென்று தெரிந்ததும் மீண்டும் இடைவெளிக்குள் உடலை மறைத்துக் கொண்டது. இரண்டு மூன்று முறை முங்கி எழுந்தான். உடல் குளிர்ச்சியடைந்து சிந்தனை இன்னும் தெளிவானது போல் தோன்றிற்று.

   பொய்கையார்.... ஏதோ மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. அன்று ஒருவனின் ஆணவத்தை அடக்க எண்ணியே அந்தச் செயலைச் செய்தான். ஆனால், அதை புலவர் உளமுவந்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவனால் உணர முடிந்தது. ஒளி முழுவதும் குறைந்து பத்தடி தொலைவில் இருப்பதை சட்டென்று காணமுடியாத வேளையாகிவிட்டது. பொய்கையாரும் காத்துக் கொண்டிருப்பார். செல்லவேண்டும். என்று எண்ணியவாறு பொறையன் நடக்க ஆரம்பித்தான்.

   அதே வேளை தொண்டியின் வாயிலருகே ஒரு முதியவரும் பருவப் பெண்ணொருத்தியும் வந்து சேர்ந்தார்கள். கதவை அடைக்க ஆயத்தமாகி நின்ற வாயில் காப்போன் - "யாரையா நீவிர்.. இந்த வேளையில்..."

"ஐயா.. நான் கொண்காணத்துப் பாணன். இவள் என் பெயர்த்தி. மன்னரைக் காணவேண்டும்"

"மன்னர் நாளைதான் வருவார். சென்று நாளை பொழுதில் வாருங்கள்"

"இளையவர்..."

"அவருந்தான்... வெளிச்சத்திரத்தில் தங்கிவிட்டு பொழுதில் வாருங்கள்" - என்று சொல்லியவாறே அந்தப் பெருங்கதவை மூடினான். மூடிய கதவைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் பார்வையில் பட்டது அது.

"தாத்தா... அந்தக் கதவில் என்ன பதிந்திருக்கிறது. பார்த்துச் சொல்.."

"எயினி... செழிப்புமிகுந்த தொண்டி நகரின் கதவில் என்ன இருக்கும். பாண்டி முத்தோ, கொங்கின் வைடூரியமோ இருக்கும். நன்றாகப் பார்."

"நான் நன்றாகப் பார்த்துதான் கேட்கிறேன். உனக்குதான் வயதாகிவிட்டது. வெளிச்சக் குறைவும் இருப்பதால் உன்னால் பார்க்க முடியவில்லை. அது வேறு ஏதோ! நரிப்பல் போல இருக்கிறது."

"சரி... சரி.. விடு எயினி. கண் மங்கிவிட்டது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.  நாளை வரத்தானே போகிறோம். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன். நட. வேளையாகிறது"

"அப்படி வா வழிக்கு .." என்று சிரித்தவள் நடக்க ஆரம்பித்தாள்.

    வெளித்தெருக்களில் ஏராளமான வீடுகள் இருந்தன. அதில் சத்திரத்துவீடு எதுவென்று தேடி நடந்து கொண்டிருந்தனர் இருவரும். எயினிக்கு கதவில் என்னதான் பதித்திருக்கிறது என்று எண்ணம் ஓடிக்கொண்டே இருந்ததை அறிந்த  முதியவரோ அவளைப் பார்ர்த்து உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார் -  "அது நரிப்பல் அல்ல பெண்ணே... ஒரு மனிதனின் பல். மானமுள்ள ஒரு மனிதனின் பல்"

..................... தொடரும்................

Monday 2 December 2019

காணாமல் போன கதை - தொடர் 2

     அந்துவனின் கையில் இருந்த கொட்டாப்புளி சீராக உளியின் மேல் இறங்கிக் கொண்டிருந்தது. அது சிறு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த காவிரியின் நீர்ச் சுழலின் ஓசையோடு கலந்து அருகே இருந்த பெரிய மருத மரங்களின் பொந்துகளில் எதிரொலித்தது. அதற்குள்ளிருந்த கிளிகள் படபடவென சிறகசைத்து இணையிசை எழுப்பின. அதனோடு சேர்ந்து சூட்டிறைச்சியின் புழுக்கு மணமும், பொரிக்கறி கொதிக்கும் மணமும், வெந்து விரிந்த வெண்ணெல் அரிசிச் சோற்றின் மணமும் கலந்து மீண்டுவந்து அந்துவனின் செவியையும் மூக்கையும் தொட்டுத் துழாவின. கதிரவன் உச்சியைக் கடந்து மூன்று நாழிகை ஆகிவிட்டது. அவன் உளியைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான். சுற்றிலும் வேலை செய்து கொண்டிருந்த எல்லோரையும் பார்த்தான்.

"எல்லோரும் உண்டுவிட்டு சிறிது கண்ணயர்ந்து அதன் பின் வேலை செய்யலாம்.... செல்லுங்கள்" - என்று கூறிவிட்டு காவிரியை நோக்கி நடந்தான். 

  குளிக்காமல் அவன் உணவருந்துவதில்லை. கல்லணை கட்டிய முன்னோர்கள் வகுத்துவைத்த சில விதிகளை அந்துவன் மீறுவதில்லை. அதில் ஒன்று தான் இது. காலகாலமாக சோழமண்ணின் கற்றளிகளைக் கட்டி, கற்சிறைகளைக் கட்டி அறிவில் சிறந்து நிற்கும் தச்சர் கூட்டத்தின் தலைமுறையில் வந்தவன். இவனது பாட்டனார்தான் இந்த இடத்தை தேர்வு செய்தவர். மன்னன் செங்கணானிடம் மதிப்பு கொண்டவர். மன்னனுக்கும் அவர் மீது அளவற்ற அன்பும் திறமையின் மேல் மதிப்பும் உண்டு. இதுவரை கட்டப்பட்ட ஏராளமான கோயில்களுக்கு இடத்தேர்வும், கற்றளி அமைப்பும் மட்டுமே வகுத்துக் கொடுத்தவரை, ஆனைக்காவில் கட்டவிரும்பிய கோயிலுக்கு மட்டும் முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளும்படி மன்னன் கேட்டுக்கொண்டான். ஆம் இது வெறும் வழிபடும் கோயிலாக இருக்கப் போவதில்லை. கரைபுரண்டு ஓடும் காவிரியின் வெள்ளச் சமநிலைக்கான ஏற்பாடாகவே இருக்கும். சமநிலை அளவுகளைக் கண்காணிக்கும் இடமாக இது இருக்கும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மன்னன் செங்கணான் செய்துகொண்டிருந்தார். 

       அகலமான நெடுந்தெருக்கள். அதனுள்ளே வாழ்விடங்கள். குடிநீர் அமைப்புகள், தோட்டங்கள், அளவீட்டுக் குளம், மக்கள் குறைகேட்டறிந்து தீர்த்துவைக்கும் அரசு மண்டபங்கள், காவிரியின் கரையை விட உயரமான பாதுகாப்பிடங்கள் என பேரூராய் இருப்பதற்கான எல்லா வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. பாட்டனின் அறிவுரைப்படியும் மன்னனின் விருப்பப்படியும் இதைச் சீராகச் செய்து முடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு அந்துவனுக்கு இருந்தது. அந்த நினைப்போடு நடந்தவன் எதிர்ப்பட்ட தென்னந்தோப்பு ஒன்றில் நுழைந்து சிறிய மேடு ஒன்றில் ஏறினான். எதிரே...  ஓடும் கடலாய் விரிந்தாள் காவிரி. இறங்கி நீராடி முடித்து மீண்டான். தெற்குப்புறப் பாதையின் இறுதியில் இருக்கும் பட்டகசாலை நோக்கி நடந்தான். தொலைவிலிருந்து பார்க்கும் போதே பட்டகசாலையின் வெளியே மூன்று குதிரைகள் நிற்பதைப் பார்த்தான். ஒருவரும் வருவதாகச் செய்தி ஏதும் இல்லையே. யார் வந்திருப்பார்கள் என்று எண்ணியவாறே பட்டக சாலையினுள் நுழைந்தான். உள்ளே ஒருவன் அமர்ந்திருக்க இருவர் நின்று கொண்டிருந்தார்கள். அமர்ந்திருந்தவன் அந்துவனைக் கண்டவுடன் 

"வணக்கம் தச்சரே" என்றவாறு எழுந்து வணங்கினான்.

"பழையனா?  வருக வருக. நானும் யாரோ என்று எண்ணிக்கொண்டே வந்தேன். அமருங்கள் உணவு உண்ணலாம்"

உள்ளே இருந்து வந்த ஒருவன் இலை போட்டு சோறு படைத்தான். அந்துவன் அவனை நோக்கி "மலையா..... படைத்தலைவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை காவிரிக்கரைக்குச் சொல்லியனுப்பிருக்கக் கூடாதா?"

"அவன் சொல்ல ஆயத்தமானான். நான்தான் நீங்கள் நீராடி முடித்து வரட்டும் என்று அவனைத் தடுத்தேன்" என்றான் பழையன். செங்கணான் அரசின் படைத்தலைவன். பெரு வீரன். 

"என்ன சட்டென்று... திருமுகம் ஏதும் இல்லாமல்.."

"ஆனைக்கா வேலைகளை அடுத்த திருமுகம் வரும் வரை நிறுத்தி வைக்கச் சொல்லி மன்னரின் ஆணை தச்சரே"

    பிசைந்த கவளத்தோடு உயர்ந்த அந்துவனின் கை சட்டெனத் தாழ்ந்தது. முகத்தில் இனம்புரியாத உணர்ச்சியின் வரிகள். கண்ணில் வியப்பும் கவலையும் கலந்த வண்ணம்.

"என்ன ஆயிற்று"

"நீர் கவலை கொள்ளவேண்டாம் தச்சரே. கொங்குமண்டலத்தின் வடமேற்கில் இருந்து ஒரு அறைகூவல். அதனால்..."

"அதனால்..."

"ஒரு போருக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறது சோழப்படை. கூடவே  மன்னரும்."

"ஓ... இங்கிருந்து யாரையும் அழைத்துப் போகிறீர்களா?"

"விருப்பமிருப்பவர் வரலாம் என்பது ஆணை. வெளிப்படுத்திவிட்டேன். வருபவரை இட்டுச் செல்ல வேண்டும்"

"ம்.. நான் என்ன செய்வது?"

"உறையூர் மன்றத்திற் சென்று தங்கியிருக்க வேண்டி செய்தி விடுத்தார் மன்னன்."

"நல்லது அப்படியே ஆகட்டும்"

      நான்கைந்து நாட்களில் மேற்குநோக்கி சோழனின் படைகள் நடக்க ஆரம்பித்தன. வடக்கிருந்து தமிழகத்தின் உள்நுழைவோரால் வடவெல்லையில் குழப்பங்கள் வரலாம் என்று சோழ மன்னனுக்கு எண்ணமிருந்தது. கற்றோர் அவையும் அதையே உறுதிப்படுத்தி இருந்தது. சோழப் படைகளில் பெரும் போர்கள் எதுவும் பார்க்காத படை என்றால் அது செங்கணான் படைகளே. பெரு வலியும் பெரும்படையும் அவனது திறனும் அறிந்திருந்த அயல் மன்னர் எவரும் இவனோடு பகை கொள்ளும் சிந்தையின்றியே இருந்தார்கள். அதனால் அவனும் நுண்கலையும், அறிவியலும் இணைத்து ஏராளமான கற்றளிகளை ஏற்படுத்துவதில் நாட்டம் கொண்டு அதையே செய்து கொண்டிருந்தான்.

    ஆனால், இப்பொழுது வடபுலத்து மன்னர் சிலருடன் கைகோர்த்துக் கொண்டு கொங்கின் வட பகுதியில் நல்லினி என்றொருவன் சோணாட்டிற்கு எதிராக சில வேலைகளைச் செய்கிறான் என்று செய்தி கிடைத்திருக்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அவையம் அறிவுறுத்தியது. அதனாலேயே இந்த ஏற்பாடு. அவனும் கொங்கு மண்டலத்தில் நிலை பெற்றிருந்தவனல்ல. முன்பு குடநாட்டிற்கும் கொண்காண நாட்டிற்கும் இடையிலிருந்த மூவனின் வழித்தோன்றல்களாக இருக்கக் கூடும்  என்றுதான் கேள்வி. மூவன், சேரமான் குட்டுவன் கோதையின் பெயரன் கணையனால் தோற்கடிக்கப்பட்டச் செய்தியை புலவர் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின் அவன் எங்கு சென்றான் எனத் தெரியவில்லை. இப்பொழுது அவன் வழித்தோன்றல் என ஐயமிருக்கும் ஒருவன் கலகம் செய்கிறான். ஐந்து நாட்களுக்குள் படை சென்று அவன் கதை முடித்து மீளவேண்டும் என்று திட்டம்.

      ஏராளமான எண்ணிக்கையில் குதிரைப்படையும், வலுவான யானைப் படையும் பெரும் எண்ணிக்கையில் ஆள்படையும், கலகத்தை மட்டுமே கோளாய்க் கொண்டிருக்கும் நல்லினிக்கு தேவையில்லைதான். ஆனால் யாரும் அறியாது வடபுல சேனைகள் ஏதேனும் சட்டென்று, இவர்களுடன் சேர்ந்து  நுழைய அணியப் பட்டிருந்தால் என்ன செய்வது. அதுவுமன்றி நீண்ட நாள்களாக அச்சமுற்று அமைதியாய் இருந்த நாட்டில் கலகக் குரல் எழக்கண்டதால், ஒரு முறை படை நடத்தி அதைச் சீர் செய்துகொள்ள செங்கணான் முடிவுசெய்திருந்தான். கற்றளிகள் செய்து கொண்டிருந்த மன்னன் களிற்றின் மீதேறி படை நடத்துவதை காவிரியின் தென்கரையும் வடகரையும் வியந்து பார்த்தது.

        புகாரிலிருந்து புறப்பட்ட ஐந்தாம் நாள் காலை. கூடகாரத்தில் செங்கணான் அமர்ந்திருக்க எதிரே பழையன் நின்றுகொண்டிருக்கிறான்.

"மன்னா நான் படைகொண்டு சென்று வினை முடிக்கிறேன். தாங்கள் இங்கேயே இருங்கள்"
  
"இல்லை. நானும் வருகிறேன். அவனை நானும் பார்க்க வேண்டும்"

"அவ்வளவு தானே மன்னா, அவனையும் அவன் கூட்டத்தையும் தளைப்படுத்தி உங்கள் முன்னே கொண்டு சேர்க்கிறேன். நீங்கள் நேரில்  வருமளவுக்கு அவன் வலுவானவனில்லை"

"சரி... ஆகட்டும்"

     நடந்ததை போர் என்று சொல்லமுடியுமா தெரியவில்லை.  கலகம் செய்தவர்களும் முகமறிந்தவர்களாய் இல்லை. பொழுது உச்சிக்கு ஏறும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நல்லினியும் அவனது கூட்டமும் தளைசெய்யப்பட்டு செங்கணான் முன்னே அழைத்துவரப்பட்டார்கள். தன் முன்னே நின்றிருந்த நல்லியனை ஏறிட்டுப் பார்த்தான் மன்னன். பதினாறு பதினேழுக்குள் பருவம் இருக்கும். அருகில் ஒரு பெரியவர் நின்றிருந்தார். சோர்வினால் அவரது தலை சற்று தாழ்ந்திருந்தது. தோளில் பையொன்று தொங்கிக் கொண்டிருந்தது.

"நீ...  மூவனின் வழித்தோன்றல் தானே. எதற்காக சோணாட்டிற்கெதிராக இந்தச் செயலைச் செய்கிறாய்"

"மன்னா. நான் மூவனின் நாட்டிலிருந்தவனே, அன்றி அவரது வழித்தோன்றலில்லை. அவருக்கும் சேரமானுக்கும் இடையே ஏற்பட்ட போர்ச் சூழலால் நானும் என் பாட்டனும் இன்னும் சிலரும் இங்கு வந்துவிட்டோம்"

"பிறகு எதற்காக இந்த வேலை"

"நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதறிந்து வானவாசி வீரர் சிலர் எம்மோடு சேர்ந்துகொண்டு... இதைச் செய்தால் பிடிபடும் பகுதியில் சிறு பங்கொன்றைத் தருகிறோம் என்றார்கள். அதனால் தான்...." சிறிது அச்சத்துடன் அவன் குரல் உடைந்தது.

தலைதாழ்த்தி நின்றிருந்த பெரியவரை நோக்கினான் செங்கணான்.

"உமது பையில் என்ன வைத்திருக்கிறீர். ஆயுதமா?"

பெரியவருக்குச் சட்டென குரலெழும்ப வில்லை.

"இல்லை மன்னனா. ஆயுதமில்லை.  தச்சுப்பொறிகள். நான் தச்சன். மரவேலை செய்பவன்"

"சேர நாட்டுத் தச்சர்கள் மரத்திலேயே பெரிய ஆயுதங்களைச் செய்து விடுவீர்களே....ம்"

"மன்னா.. நான் கோயில் மரக்கூட்டு வேலை செய்பவன். ஆயுதம் செய்பவனல்ல."

"நீர் எப்படி இந்தக் கூட்டத்திற்குள்"

"மன்னா.. யாருமில்லாத நல்லியனை நான் தான் வளர்த்தேன்"

ஓ..அதனால் தான் உயிர் பயமின்றி அவனுடன் இருக்கிறீரோ" 

"இல்லை மன்னா... இவனை விட்டால் எனக்கும் வேறு புகலிடமில்லை"

'ஓ.."

     சிந்தனையில் ஆழ்ந்தான் செங்கணான். சற்று நேரத்தில் பழையனின் பக்கம் திரும்பி

"பழையா"

"சொல்லுங்கள் மன்னா"

'இவர்களை ஆனைக்காவிற்கு இட்டுச் செல்"

"மன்னா... !!!"

"தீவுக்குள் ஏதும் நிகழ்த்த இயலாது. நமது காவலும் அதிகம்."

"ஆகட்டும் மன்னா"

      பழையனும் படையின் ஒரு பகுதியும் சூழ, செங்கணான் முன்னே புறப்பட்டுச்செல்ல நல்லியனின் சிறிய கூட்டத்தை அழைத்துக் கொண்டு மிகுதிப் படையும் நடக்க ஆரம்பித்தது. நல்லியனும் பெரியவரும் அருகருகே நடந்து கொண்டிருந்தார்கள்.

"நல்லி..... உனக்கு கவலையாக இருக்கிறதா?"

"இல்லை மூப்பில். நீங்கள் இதெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்று தானே முன்பே சொல்லியிருக்கிறீர்கள்."

"ம்.... ம்...  இந்தா இனி இதை நீயே வைத்துக் கொள்" - என்று பைக்குள் கைவிட்டு திடமான கருநூலில் கோர்க்கப்பட்ட சிறிய மாலை ஒன்றை வெளியே எடுத்து நல்லியனிடம் நீட்டினான்.  அதை வாங்கி ஒருமுறை ஊன்றிப் பார்த்துவிட்டு கழுத்தில் அணிந்துகொண்டான் நல்லியன். அந்தக் காட்டுப் பாதையில் நடக்கையில் இடதும் வலதுமாக அவனது மார்பில் ஆடிக்கொண்டிருந்தன, பித்தளைப் பூண் இடப்பட்டு கோர்க்கப்பட்டிருந்த ஒரு மனிதனின் இரண்டு சிங்கப்பற்கள்.

.......................................  தொடரும்  .....................

Saturday 30 November 2019

காணாமல் போன கதை - தொடர் 1

    இப்படி நிகழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சிறைக்கூடத்தில், தான் அடைபடுவோம் என்று எண்ணிப்பார்த்ததும் இல்லை. ஆனாலும் நிகழ்ந்துவிட்டது.  குனிந்து காலில் இடப்பட்டிருந்த விலங்கின் வளையத்தைத் தடவிப் பார்த்தான். சோழனின் கொல்லர்கள் தன்னெறி கொண்டவர்கள் என்று தோன்றிற்று. "விலங்குபூட்டும் வளையம் என்றாலும் உடம்பில் உறுத்தாத வண்ணம் செழுமையாகச் செய்திருக்கிறார்கள்; தொண்டியின் தச்சர்களைப்போல". மன்னர்களின் நோக்கங்கள் வேறு வேறு ஆனாலும், தமிழ் மக்களும் தொழில்குடிகளும் நேர்மையாகவே சிந்திக்கிறார்கள் என்று எண்ணியவாறே பின்புறம் சாய்ந்தான். சில்லென்றிருந்தது நன்றாக இழைக்கப் பட்டிருந்த கல்சுவர். நேர் எதிரே ஆளுயரத்திற்கும் மேலே  செவ்வகச் சாளரம். குறுக்கே செருகப்பட்டிருந்த சீரான இரும்புக் கம்பிகள். அதற்கு நேர்கீழே கைத்திரள் அளவுள்ள கம்பிகளால் ஆன கதவு. கற்றளிகள் அமைப்பதில் திறன்பெற்ற சோழர்களின் சிறைக்கூடமும் சிறப்பாகவே இருந்தது. சாளரத்தின் வெளியே காவல் மாறும் ஓசை கேட்டது. மாலை நேரம் ஆகியிருக்கக் கூடும் என்று தோன்றிற்று. அப்பொழுது காவல் வீரனொருவன் கதவருகில் வந்தான்

 "மன்னா தங்களுக்கு குடிக்க ஏதேனும் வேண்டுமா?"

"இப்பொழுது எதுவும் வேண்டாம். பிறகு சொல்கிறேன்"

"சரி மன்னா. தேவைப்படும் போது என்னை அழையுங்கள்" 

"ம்...".... சரி.. உன் பெயர் என்ன"

"அத்தி.. மன்னா"

"அத்தியா...!!! "

"ஆம் மன்னா" என்றவாறே அந்த காவல்வீரன் சென்று மறைந்தான்.

  இந்நேரம் அத்தி, நன்னன், கட்டி மூவரில் யார் ஒருவரேனும் உடன்  இருந்திருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. என்ன செய்வது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. "நன்னன் அன்று சொன்னதைக் கேட்டிருக்க வேண்டுமோ? அவன் சொன்னது போல புன்றுறையை உடனே அனுப்பியிருக்கலாம். அவனும் பெருந்தலைச் சாத்தனாரை விரைந்து அழைத்து வந்திருப்பான். வேறு காரணம் கருதி நாம்தான் தாமதப்படுத்தி விட்டோமோ?  கழுமலம் கோட்டையைக் காவாது விட்டுவிட்டோமோ?. ம்.. எப்படி இருந்த கோட்டை! " பெருமூச்செறிந்து கொண்டான்.

    கழுமலம். சேரர்களின் பாதுகாப்புக் கோட்டை. இவனது பாட்டன் குட்டுவன் கோதை காலத்தில் வடக்கே சிவகந்தவர்மனால் தோற்கடிக்கப்பட்ட அரசர் சிலர் தம் படைகளோடு பாலாற்றின் கரைகடந்து தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். நாள்பட நாள்பட அவர்கள் இன்னும் தெற்கே நகர்ந்து சோணாட்டில் புகுந்து அரசில் குழப்பங்களையும் போரையும் ஏற்படுத்தினார்கள். பின்னர் மதுரைக்குச் சென்றார்கள் என்ற செய்திகளெல்லாம் "அபிதர் மாவவதாரம்" நூலைப் படித்துக்காட்டிய மாடலன் மதுரைக் குமரனார் பாட்டனிடம் சொன்னதை சிறு வயதுப் பிள்ளையாய் இவனும் கேட்டிருக்கிறான். அந்தப் பகைவர்கள் தங்கள் நாட்டிலும் புகுந்துவிடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். சோணாடு, பாண்டிநாடு இவற்றிலிருந்து உள்ளே நுழைய ஏதுவாய் இருக்கும் வானமலையின் பகுதியில் இருந்த கழுமலத்தில் பாதுகாப்பு நிலைப்படை ஒன்றை ஏற்படுத்தத் தொடங்கினர்.

    மண்பாறைத்துண்டுகளும் மலைவேம்பு, கடம்பு போன்ற மரங்களும் சேர்த்து வலுவான கோட்டை ஒன்று எழுப்பப் பட்டது. வேகமாய்ப் பொருது பகையழிக்கும் பெருங்களிறுகள் அங்கே கொண்டுவரப்பெற்றன. அவற்றோடு பேசும் மொழியறிந்த சிறந்த பாகன்கள் குடியமர்த்தப் பட்டார்கள். வடிநவில் அம்பு செய்ய தேர்ந்த கொல்லர்கள் வந்தார்கள். வேகமாகச் சுழலும் சக்கரங்கள் கொண்ட தேர்களைச் செய்ய தச்சர்கள் வந்தார்கள். பெருவழிகள் சீர்செய்யப்பட்டன. கழுமலம் மெல்ல மெல்ல பேரூராய்  வளர்ந்தது. தொண்டியைத் தலைநகராய்க் கொண்டிருந்த இரும்பொறைகளின் சேர நாட்டில் முகாமையான படைநிலையாய் உருவெடுத்தது. பகைவரின் வானமலை நுழைவைக் காத்து நின்றது.

   பாட்டனாரின் மறைவுக்குப் பிறகு இளைஞனாய் போர்முறைகள் கற்றறிந்த பிறகு தந்தை இவனைக் கழுமலத்திற்கு அழைத்துச் சென்றார். தேரில் இருந்து இறங்கி படியேறி உள்ளே நடக்கையில்,  அந்தக் கோட்டையின் அருமை குறித்தும் அதன் தேவை குறித்தும் அவனோடு பேசிக்கொண்டே வந்தார். இனிமேல் அவன் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்றும் சொன்னார். பேசிக்கொண்டே  நீண்டுகிடந்த தாழ்வாரத்தில் நடந்து இடப்புறம் திரும்புகையில் நடுத்தர வயதுள்ள ஒருவர் எதிர்ப்பட்டார்.

"வாழி நீவிர் மன்னா"

"வருக வருக பொய்கையாரே. நலம் தானே. மாந்தைக்குப் போயிருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்பொழுது வந்தீர்கள்"

"நேற்று மாலையே வந்து விட்டேன். தாங்கள் தொண்டிக்கு அழைக்காமல் இங்கு வரச் சொன்னதற்கு காரணம் ஏதும் உண்டா மன்னா?"

"ஆமாம். இதோ கணைக்கால் இரும்பொறை, இளவல்... கழுமலம் கோட்டைக்கு பொறுப்பேற்கும் வேளை வந்து விட்டது.  எனக்கும் முதுமை நெருங்கிவிட்டது. அதனால்..."

'சொல்லுங்கள் மன்னா"

"நீரே.. உடனிருந்து கணையனின் வளர்ச்சியை உறுதிப் படுத்தவேண்டும். உமது அறிவும் மொழித்திறனும் சேர நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து. அவை நாட்டிற்காகப் பயன்படட்டும்."

"உத்தரவு மன்னா"

"உத்தரவா..." சிரித்துக்கொண்டே "நீர் தாம் எமக்கு உத்தரவிடவேன்டும். தமிழ்த்தாயின் நன்மகனே... நீர் நண்பனாய் தந்தையாய் இருந்து கணையனைக் கரையேற்ற வேண்டும். இது எமது வேண்டுகோள்"

 பொய்கையார் மன்னனின் கையைப் பிடித்துக் கொண்டார். "என் ஊனும் உயிரும் இம் மண்ணிற்காகவே இருக்கும். கவலையேதும் கொள்ளாதீர்."

"எனக்கேதும் தனிப்பட்டக் கவலையில்லை. பாண்டியும், சோழமும் சிக்கல்களில் தவிக்கும் வேளை. நமக்கும் ஏதேனும் நிகழாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணமே." 

"கவலையகற்றுங்கள். கணையனுக்கு இயல்பிலேயே நெஞ்சுரம் இருக்கிறது. பேர்கொண்ட யானைகளும், குதிரைகளும், பெருந்தேர்களும், வலுகொண்ட வீரர்களும் இருக்கிறார்கள். கழுமலம் இருக்கும் வரை சேர மன்னர் கவலைகொள்ளல் ஆகாது"

"மகிழ்ச்சி.. பொய்கையாரே. பெருமகிழ்ச்சி. அமைதியோடு தொண்டி திரும்புவேன்." என்றவர் கணைக்கால் இரும்பொறையின் பக்கம் திரும்பி 

"இன்று முதல் உனக்கு நண்பனும் வளர்ப்புத் தந்தையும் இவரே. சேர மண்ணின் பாதுகாப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" -   என்று சொல்லிவிட்டு விடைபெற்று தேரேறினார். அது மேற்கே சென்று கீழிறங்கி மறையும் வரை கணைக்கால் இரும்பொறை பார்த்துக் கொண்டு நின்றான். 
  
  அதன் பின் "ஐயா என்னால் தந்தை நினைப்பது போன்று செயல் பட முடியுமா?" என்று புலவரைப் பார்த்துக் கேட்டான்.

"கணை... கண்டிப்பாக உன்னால் முடியும். தொண்டியின் கோட்டைக் கதவில் நீ பதித்து வைத்திருக்கும் அந்த "மனிதப் பற்களை" நானும் பார்த்திருக்கிறேன்... உன்னால் முடியும்"

"ஐயா .. அது..."

                                                                                                                                தொடரும்...