Thursday 25 January 2024

மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் 2024

தானே எரிந்து உலகுயரப்
பாடாற்றும் கதிர் போல்
தசை பொசுங்கிக் குருதி வற்றி
நரம்பிறுகி எரிந்து
அவர் கொடுத்த ஒளி,

ஆங்கிலம் மட்டுமே
அறிந்தொழுகும் நம் பிள்ளை
அகத்திருளும் போக்கிடும் நாள்
காணாது அவியுமென்றால்,

நாம் வாழும் வாழ்க்கை
நரகலிலும் கீழே
என்ற நினைப்புடனே
அவர் நினைவேந்திடுவோம்.
🙏🙏🙏

Sunday 21 January 2024

தாழக்குடி பெருமாள் கோயில் குடமுழுக்கு 21-01-2024

 

 

கடவுள் வணக்கம்

பெருமாள்

பொங்கலினம் தாம்கொடுத்தும் பூக்களைச் சேர்ந்தணிந்தும்

சங்கடங்கள் போக்கிடுவர் சற்றுமின்றி - பங்கந்தீர்

ஊர்நடுவே தோன்றிசிறு வூனமின்றிக் காத்தருளும்

பேர்பெற்ற நம்பெருமாள் பேண்.

 

தாழைக்குடிக்கு வாய்த்த பெருமாளென்று நம் சுவாமிக்கு ஓர் பெயர் வழங்கி வருகின்றது. பண்டைக்காலத்தில் இரவி விண்ணவர் எம்பெருமான் கோயிலின் மருங்கில் ஆதியூர் இருந்தது. வயல் நடுவில் காணும் அக்கோயிலில் இருந்த திருமாலை ஊர் நடுவில் பிரதிட்டை செய்தனர்.

நம்பியார்க்குள்ள நீட்டு

உயர்திரு காளியாம்பிள்ளை அவர்கள் தந்த பிரமாணப்பகாப்பு நீட்டு

தாழைக்குடி உள் பற்று வகையில் பெரும்பற்று மேல்வாரம் புள்ளிக்கு நீட்டு கொடுக்கையில் நயினார் ஆற்றங்கரை இரவி நாராயண விண்ணவர் எம்பெருமானார். புள்ளி மிச்சவாரம் அஞ்சாலிக்கு நிலம் அரைக்காணிக்கு அஞ்சாலி தீருவ படிக்குள்ள பணத்தினு சிட்டியும் பொடிவு பெரும்பற்று மேல்வார பேர் இனப்படிக்கு நிலம் அரைக் காணிக்கு நாலாந்தரத்துக்குள்ள பொடிவு பதிச்சு மிச்சவாரமும் எடுத்து யாபிச்சும் கொண்டு ஆசந்திரதாரவே சந்ததிப்பிறவேசமே கையாண்டு குள்ளுமாறும் செயிக, இது கி.பி.1746 ஆடி மாசம் பொடிவு. கள்ளபிரான் சிவன் பட்டற்கு எழுதிவீடு என்னெ திருவுள்ளமாய தெ மாறிப்பிடிச்சு

(ஒப்பு)

தாழைக்குடிச் சரிதத்தில் புலவர் ஆர்.பத்மநாபபிள்ளை (1944)

 

==========================

நன்னாள் வேட்டல்

மருதமாய் நிலம்கிடக்க

பெருக்காறு மேற்கிலோட

சருக்கத்தின் நடுவே

இருந்த பிரான்..

 

பின்னொருநாள்

திருவாசல் மேட்டில்

பெருவாசல் கொண்டே

அருகனாய் அமர்ந்த

அண்ணல்.

 

வடகலையுமின்றித்

தென்கலையுமின்றி

எம்கலையாய்,

எரிந்தொளிரும் தன்மையினால்

இரவியுமாய்,

விரிந்தெங்குஞ் சென்றமையால்

விண்ணுவுமாய்,

தாழக்குடி உறைந்த

தண்ணருள் மன்னவன்

இரவி விண்ணவன் எம்பிரான்,

 

இருந்தச் சிறுகோயில்

திருத்திப் பெரிதாய் எடுக்கத்

திருவுளம்கொண்ட மக்கள்

ஊர்கூடித் தேரிழுக்க உறுதிகொண்டு

சேர்த்தப் பெரும்பொருளும்,

 

மேன்மைமிகு தாழக்குடி

பிறந்துயர்ந்தப் பெருமக்கள்

சென்னை நகர்மேவுமுயர்

மேகநாதன் பெருங்கொடையும்,

பெங்களூரு வாழுமுயர்

பரசுபிள்ளை அருங்கொடையும்,

 

சேர்ந்துயர்த்த ஊர்நடுவே

சேரர்குலப் பெருமானாம்

குலசேகரன் பெயர்தாங்கி

எழுந்ததையா அருங்கோயில்.

 

மேல்செல்லா நின்ற கொல்லம்

ஓராயிரத் தொருநூற்று

தொண்ணூற்று ஒன்பதில்

கதிரவன் வடக்கேகும்

தைத்திங்கள் ஓரேழில்

கோட்டாற்றின் நீர்நிறைத்தக்

குடமுழுக்கின் நற்காலை,

 

வாளால் அறுத்துச் சுடினும்,

மருத்துவன் பால் மாளாத காதல்,

நோயாளன் போல்,

காரானை காரானைக்

கலைவதுபோல்

பேராளன் பெருமாளைக்

குலசேகரன் தமிழ்ப்பாடி

ஏராண்மை மீண்டுயர

தாராளமாய் வேண்டுவமே!

 

Saturday 20 January 2024

தமிழ்த்தேசியத்தின் வேர்கள் கவி கா.மு.செரீப்



அட்டைக்கத்திகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாம் போர்க்கள வாள்முனைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. வெற்றுப் புலம்பல்களை வீர வசனங்களாய் உள்வாங்கிய நம் செவிகள் கலகக் குரல்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. புனையப்பட்ட மீசை துடிக்க புரட்சி பேசியவர்களை நாயகர்களாய் வளர்த்துவிட்ட நாம் புரட்சியின் வெந்தணலில் வாழ்க்கையை எரித்தவர்களை எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. நம்முடைய இந்தக் குணமே வரலாற்றின் பக்கங்களிலிருந்து நமக்காக வாழ்ந்தவர்களைப் பிறர் துடைத்தெறியத் துணைபோகின்றது,

நம்முன் கடைவிரிக்கப் பட்டிருக்கும் வரலாறுகளைவிட மறைக்கப்பட்டவையே பெரும்பகுதி என்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. அதன்பொருட்டே உண்மை வரலாறு அறிந்தவர்கள், செய்திகளிலிருந்து அதைச் சேகரிக்கத் தெரிந்தவர்கள், காலத்தின் செப்பேடுகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தங்கள் மனதிலிருக்கும் உண்மைகளையெல்லாம் கேட்பவர்க்கு உரைக்கவேண்டிய வேளை இது.

அதைவிட முகாமையானது உரைப்பவற்றை நாம் படித்து அறிந்துகொள்வது. காரணம் நம் முந்தைய தலைமுறை அவற்றை முழுமையாகக் கேட்காமல் போனதன் விளைவுகளை நாம் இப்பொழுது உணர்கிறோம். நாம் கேளாமல்போனால் வருந்தலைமுறை அதன் விளைவுகளில் சிக்கிக் கொள்ளும். காட்டாக,

ஆங்கிலத்தின் மூலமாகத்தான் தொழிற்கல்வி பெற முடியும் என்ற நிலை வளர்ந்ததினால்தான் நமது நாட்டுத் தொழில்கள் அனைத்தும் நாசமடைந்தன.

தமிழ்நாட்டு வைத்தியத் தொழில் உலகிலேயே மிகச் சிறந்ததாகும். அதன் நிலை இன்று எப்படியிருக்கிறது? தமிழ் நாட்டிற்கு இடைக் காலத்தில் வந்த ஆயுர்வேத வைத்தியமுறையைத் தவிர தமிழில் வேறு வைத்தியமுறையே கிடையாதென்ற தவறான ஆராய்ச்சியை இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆயுர்வேத வைத்தியமுறைகூட தேவையில்லை. ஆங்கிலமுறையே போதுமானது என்ற முடிவில் மத்திய ஆட்சி காரியமாற்றி வருவதாகவும் தெரிகிறது.

ஆயுர்வேதம் வருவதற்கு முன்பு மிகச் சிறந்த சித்த வைத்தியம் இங்கே இருந்ததென்றோ அது இன்னும் கிராம வைத்தியமாக மக்களிடம் நிலைத்து நிற்கிறதென்றோ யார் அறிவார்? நம்மிடத்தில் ரண வைத்திய நூல், சத்திர வைத்தியம், கண் வைத்தியம் போன்ற

சிறந்த வைத்தியங்கள் எல்லாம் இருந்தன. இன்றும் இருக்கின்றன என்பதை யெல்லாம் எவர் அறிவார்?

அறியாததினால்தான் நமது வைத்தியக்கலை செத்தது. நமது வைத்தியக்கலையைச் சாகடித்துவிட்டு, டாக்டர் படிப்பென்று ஒன்றை ஏற்படுத்தி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு அந்தப் படிப்பை நல்கி, மேனாட்டு மருந்துகளுக்கு இந்தியாவை மார்க்கட்டாக்கி வைத்தியத் தொழில் மூலமும் நம்மைச் சுரண்டி வாழ்ந்தது ஆங்கில ஆட்சி! ஆண்டபோதும் சுரண்டிற்று; அகன்ற பின்பும் மருந்துகள் அனுப்பிச் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டுக் காடுகளிலே விளையும் மூலிகைகளை குறைந்த விலைக்கு வாங்கி மேலை நாட்டிற்கெடுத்துச் சென்று அதை மருந்துகளாக்கி அதிக விலைக்கு விற்று ஆனந்தமாக வாழ்கின்றது மேலை நாடு! உள்நாட்டு வைத்தியத்தை இழந்ததின் பலன் அன்னிய நாட்டு வைத்தியத்திற்கும் மருந்திற்கும் பணத்தைக் கொட்டி அழ வேண்டியதாக முடிந்திருக்கிறது!

வைத்தியம் மலிவாக இல்லை. வைத்தியத் தொழில் செய்யும் டாக்டர்களுக்கு சுருணையுள்ளம் இல்லை. ஏழைகளுக்கு நோய் கண்டால் கடவுளை நம்புவதைத் தவிர டாக்டரை நம்ப வழியில்லை. காரணம் டாக்டர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க ஏழைகளுக்குச் சக்தியில்லை. இதை உணர முடியாத சில அரசியல் போலிகள். "நம்மவர்களுக்கு நோய் கண்டால். டாக்டரிடம் போவதை விட ஆண்டவனிடம் ஓடவே ஆசைப் படுகிறார்கள்" என்று எழுதி, பேசி, கிண்டல் செய்து அதுவே நாட்டின் தொண்டு என்று எண்ணி மகிழ்கிறார்கள்.

கையைத் தொட்டுப் பார்க்கப் பணம், மருந்திற்குப் பணம், மருந்துண்ணும் நாளிலே பத்திய பதார்த்தங்கள் வாங்கப் பணம்; இப்படி டாக்டரிடம் சென்றால் பணப் பெட்டியைத் திறந்துவிட வேண்டியதாயிருக்கிறது.” 1954ல் கவி கா.மு.செரீப் “தமிழரசுக்கழகம் ஏன் வந்தது” என்ன சொல்கிறது?” என்ற நூலில் இப்படிக்கூறுகிறார்.  எழுபது ஆண்டுகள் தாண்டிய பின்னரும் இன்றைய நிலையும் இதுவேதான். நம்மில் பலரும் புலம்பிக்கொண்டிருக்கிறோம். புலம்பல்கள் கதவுகளைத் திறப்பதில்லை.

 

செருப்புத் தைக்கும் குடும்பத்தில் பிறந்த ஏழைத் தொழிலாளி ரஷ்ய நாட்டுச் சர்வாதிகாரி ஸ்டாலின்!

கொல்லன் உலைக்களத்தில் சம்மட்டி அடித்து வயிறு பிழைத்தவன் இத்தாலி நாட்டு சர்வாதிகாரி முசோலினி!

வண்ணமடித்து வயிறு பிழைத்து வந்த கூலிக்கார ஹிட்லர். ஜெர்மானிய நாட்டுத் தலைவன், சர்வாதிகாரி!

ஹோட்டலிலே பிளேட் கழுவிப் பிழைத்த சாதாரண தொழிலாளி இங்கிலாந்து தேசத்து மந்திரி பெலின்!

சைனா நாட்டுத் தலைவனாக இருந்த சியாங் கே ஷேக் ஆங்கிலம் அறியாதவன்!

அங்கெல்லாம் தாய்மொழி மட்டும் படித்தோர்களால் ஏழைகளால், கூலிகளால் நாடாள முடியும், முடிகிறது! காரணம் அங்கே தாய்மொழி ஆட்சி நடைபெறுகிறது. இங்கே? சகலமும் அன்னிய மொழியில் நடைபெறுவதால் பணக்காரன் வீட்டுப் பிள்ளைகளே நாடாளும் வாய்ப்பு. உரிமைபெற்றவர்களாக விளங்குகிறார்கள். இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகவே, "தமிழ் இப்போது ஆட்சிமொழியாக வர முடியாது.கூடாது என்கிறார்கள்; தமிழில் கல்வி கூடாது என்கிறார்கள். மொத்தமாகச் சொல்வதென்றால் ஆங்கிலேயனை அகற்றியதால் வந்த சுதந்திரம் கருப்புப் பண மூட்டைகளுக்கும்…” 1954ல் கவி கா.மு.செரீப். அவர் காலத்தைவிட இன்று தமிழ்வழிக்கல்வி சிதமடைந்திருக்கிறது. ஏறத்தாழ மறைந்துவிடும் இறுதி நிலையை எட்டியிருக்கிறது. (ஆனாலும் நம்புங்கள் இது தமிழ்நாடுதான்.)

 

இசுலாமியர்கள் மதத்தின் பக்கம் மட்டுமே நிற்பார்கள், இனத்தின் பக்கம் நிற்கமாட்டார்கள் என்றபொதுவெண்ணத்தை இயல்பாக உடைத்தெறிந்து தமிழரசுக்கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர் கவி கா.மு.செரீப் அவர்கள். இப்படியொரு சிந்தனையாளரை எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள் என்பது பெரும் வினா.

“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” என்ற பாடலைக் காதாரக் கேட்டவர்கள் கூட அந்தக் குருவி தமிழ்மண் குறித்துப் பேசிய சேதிகளை அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. அவ்வளவுக்கு அவர் மறைக்கப்பட்டிருக்கிறார், மறக்கப்பட்டிருக்கிறார் என்றே எண்னத் தோன்றுகிறது.

இப்படியான மறைந்துகிடக்கும் மண்ணின் வேர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவரை முழுமையாக வெளிக்கொணர முனைந்திருக்கிறது “பன்மைவெளி” வெளியீட்டகம். பாராட்டப்படவேண்டிய முயற்சி. நாட்டு நலன் பேண விழைவோர் கட்டாயம் படிக்கவேண்டிய நூலும்கூட.

 

நூல் : தமிழ்த்தேசியத்தின் வேர்கள் கவி கா.மு.செரீப்

வெளியீடு : பன்மைவெளி

பக்கம்: 112

விலை : 100/-


Tuesday 16 January 2024

தீக்குறளை சென்றோதோம் - ஆண்டாள்

 


"வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்."

 குறளை kuṟaḷai, பெ.(n.) 1. கோட்சொல்; calumny, aspersion, backbiting.
     "பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென" (மணிமே.30:68);.
   2. வறுமை; poverty, adversity.
     "குறளை யுணட்பளவு தோன்றும்" (திரிகடு.37);.
    3.நிந்தனை; sarcastic expressions, censure, reproach.
   4. குள்ளம்; dwarfishness.

     [குறு → குறள் → குறளை.] - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

குறளை = கோள்

கோள், அதிலும் தீக்கோள் சொல்லமாட்டோம் என்று பொருள் கொள்ளலாம்    என்று எண்ணுகிறேன்.

 ஓது-தல்ōdudal,    5.செ.குன்றாவி. (v.t.) 1. படித்தல்; to read, {} audibly in order to commit to memory.
     "ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும்" (குறள்.834);.
   2. சொல் லுதல்; to speak, say, declare.
     "ஓதரிய சுகர் போல" (தாயு.ஆகார.32);.
   3. வேதமோதுதல்; to recite the {} with the appropriate intonation.
   4. மந்திரம், வழிபாடு முதலியன செய்தல்; to utter mantras, repeat prayers.
   5. கமுக்கமாகக் கூறுதல்; to persuade clande- stinely, to breathe out; to whisper, as communicating information.
அவன் காதில் அடிக்கடி ஓதுகிறான்.
   6. பாடுதல்; to sing.
     "ஓதி ... ... ... ... களிச்சுரும் பரற்றும்" (சிறபாண்.22);.
   ம. ஓதுக;   க., பட. ஓது;   கோத. ஓத். துட. வீத்;   குட. ஓத்;   து. ஓதுனி;தெ. சதுவு.
     [ஊது → ஓது → ஓதல்.] - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

 “ஓதுதல்” என்பதற்கு "கமுக்கமாகச் சொல்லுதல்" என்ற பொருளும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இருக்கிறது.

அன்றியும், குமரி, நெல்லைப் பகுதிகளில் "ஓதுதல்" என்ற சொல் இதே பயன்பாட்டில்தான் வழக்கில் ஆளப்பெறுகிறது.

"அங்க என்ன ஓதிக்கிட்டு கெடக்க."

"வயல்ல இருந்து அவன் வந்த ஒடனே எல்லாத்தையும் ஓதிக்கிட்டுதான் மறு சோலி பாப்பா இவ"

ஆண்டாளும் தெக்கத்திக்காரி தானே....

“நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்”

இவையெல்லாம் நாள்தோறும் செய்யும் வழ்மையான செயல்களைத் தவிர்ப்பதுபோன்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளன. எனில், ஆண்டாள் காலத்திலோ அதற்கு முன்போ நாள்தோறும் திருக்குறள் எங்கேனும் ஓதப்பெற்றதாய் இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் சான்றுகள் உண்டோ?  கிடைத்தால் நலம்.

 இது ஒரு கருத்துதான். அவ்வளவு பெரிய கவிதாயினி குறளைத் தவறாக ஆண்டிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். ஆனாலும் இருவேறு பொருள் தந்து மயக்கம் தருவதால் தவிர்த்திருக்கலாம். ஆனால், வழக்குச் சொற்கள் பயன்பாடு தவிர்க்க இயலாது போயிருக்கலாம். பெரும்பரப்பில் தன் பாடல் இசைக்கப்படலாம் என்பது குறித்தான ஆண்டாளின் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவில்லை?

 இதுபோன்ற காரணங்களால் தான் பாவாணர் வழக்குச் சொற்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து அகரமுதலித்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் போலும்.
 
படம் : https://www.behance.net/