Thursday 20 July 2023

மனச்சான்று மரித்துக்கிடக்கும் மணிப்பூர்

 




எல்லா மொழிகளிலும் கேட்கிறது

பெண்ணின் அலறல்.

 

எல்லா நிலங்களிலும் சிந்துகிறது

அவள் குருதி.

 

எல்லா தெய்வங்களும்

காட்சிமறைத்தன,

அவள் கண் இருண்டபோது.

 

எல்லா மதங்களும்

கட்டுண்டு கிடக்கின்றன,

பிடுங்கி எறியப்பட்ட

அவள் மயிர்ச் சுருளில்.

 

எல்லா சாதிகளும்

ஒளிந்துகொண்டன,

வீசி எறியப்பட்ட

அவள் ஆடைகளுக்குள்.

 

மனிதம் மறைந்துகொண்டது

உடல் கிழித்தவன்

விரல் நகக்கண்ணில்.

 

மனச்சான்று மரித்துக்கிடக்கிறது

வாக்குச் சாவடிகளின்

வாயில்களில்.

 

இடுகாடும் சுடுகாடும்

எல்லைகளாக இருப்பதா

நாடு?

 

வெட்கம்.

Monday 17 July 2023

பாரதிராசா பிறந்தநாள் 2023

 

 

தமிழ்த் திரைமொழியை
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.

பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.

கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலை
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.

கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.

முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.

ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில் அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.

வண்ணக் கனவாய்
வளையவந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.

அத்தனையும் பெற்றவன் நீ.

நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்து
தட்டி எழுப்பியவன் நீ.

இன்று காணும்
திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.

மண்ணின் மணம் கமழ
வாழி நீ!

Tuesday 11 July 2023

அருகே கடவுள்


ஒற்றைக் கொட்டொன்று

ஓசையெழுப்பும்

நட்ட நடு இரவில்,


வெட்ட வெளியில்

வரம்பின்றி

விரிந்துகிடக்கும் மையிருளில்,


சுடலைமாடன் காடேக

மார்பில் அணைத்தத்

தீப்பந்த வெளிச்சத்தில்


மாடனின் கச்சையை

இறுக்கிப் பிடித்து

“சொள்ளமாடா மழ எப்பவரும்?”

என்று கேட்ட

வேலப்பண்ணனின்

மனதுக்கும் மாடனுக்கும்

மயிரிழை தூரந்தான்.


===========================

'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

11-07-2023

===========================

Sunday 9 July 2023

காலத்தின் அடையாளம்



புலரும் முன்பே
இருள் விலக்கிக் கொள்கிறது
இராசாவின் காப்பிக்கடை.

இளவேனில் காலத்தில்கூட
அடுக்களைக்குள்
மேகம்பரப்பும்
இட்டலிப் பானை.

விடிந்தபின்னும்
வெண்ணிலாக்களைப்
பெற்றெடுக்கும் ஆப்பச்சட்டி.

இரசத்தில் குளித்தெழும்
பருப்புவடைகள்.

இவற்றோடு பிரியாத
உறவாய்த்
தேங்காய்ச் சட்டினி.

உணவின் ஏற்றத்தாழ்வை
உடைத்தெறிந்த
காலத்தின் அடையாளங்களோடு,

இன்னும் தொலைந்துவிடாத
அழகுடன் எனது சிற்றூர்.

===========================
'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
09-07-2023
===========================

Thursday 6 July 2023

மாமன்னன்

 

 "இது ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒடுக்குமுறைகளை சந்திக்காதவர்களுக்கன படம். இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியத்தால் சூத்திரன் என அழைக்கப்பட்டு, தன் வரலாறு, பண்பாடு மறந்துபோய், பட்ட வலிகளையும் மறந்துபோய், ஆண்டவர்களாய், அடிமை செய்தவர்களாய் எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கான படம். நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கு முன்னால் முலை திறந்து காட்டி நின்ற, ஆதிக்க சாதி உட்பட அத்தனை  சாதி தாய்மார்களையும் வரலாறு மறக்கவில்லை. இப்படி தமிழ்நிலம் முழுவதிலும் தாய்களின் வலி மறந்துபோன பிள்ளைகளுக்காகவும் எடுக்கப்பட்ட படம்."

 "நமக்கு முதுமை வந்து இயலாமல் போய்விட்ட காலத்தில், வயது வந்த மகன் கழிவறைக்குப் பதில் வரவேற்பறையில் சிறுநீர் கழித்து விட்டால்... நமக்கு எப்படியிருக்கும்?

 விளக்க முடியுமா?

 அதற்கு நம் எதிர்வினை என்னவாக இருக்கும்?

 இதை ஒரு கற்பனையாக எண்ணிப் பார்ப்பதே மிகக் கடினமாக இருக்கிறது. இதுவே அந்தச் சிறுநீர் நம் முகத்தில் கழிக்கப்பட்டால்?"

 2018 ல் மாரிசெல்வராசுவின் "பரியேறும் பெருமாள்" படத்தைப் பார்த்துவிட்டு எழுதிய இந்த வரிகள், 2023ல் கூட மத்தியப்பிரதேசத்தின் காகிதங்களை நனைக்கின்றன.

 ஆனால், ‘மாமன்னன்’???

 படம் வெளியாகும் முன்   "தன்நேர்மையோடு சிந்தித்துப் பேசும் இந்தப் படைப்பாளியை வியப்போடு பார்க்கிறேன். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வணிக நோக்கும், திறமையும், அதற்கான பெருவாய்ப்பும், அதைச் செயல்படுத்தும் திறனும் கொண்ட நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் போதும், சமரசமின்றி இந்த நேர்மையை ஒரு படைப்பாளியாக மாரி நிறைவேற்றியிருப்பார் என எண்ணுகிறேன். வணிகத்தைத் தாண்டி படத்தில் ஊற்றெடுக்கும் உண்மையின் விகிதம் தான் மாமன்னனா? மன்னனா? என்பதைத் தீர்மானிக்கும்." என எழுதிருந்தேன்.

 இன்றுதான் பார்த்தேன். பாதிப் படத்தைக் குறித்து என்ன சொல்வது? மன்னன் தான்.

 பல காட்சிகள் மிக நீளமாக, சலிப்பை ஏற்படுத்துகின்றன. வலிந்து திணிக்கப்பெறும் சில கோணங்கள், காட்சிகள்,  தொடர்பற்றுத் தெரிகின்றன. இடைவேளைக்குப் பிறகு முழுமையாக வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது படம்.

 ஆனாலும், ஆளுங்கட்சியின் பெயர், அதிலிருந்து பிரிந்து பிறந்த கட்சியின் பெயர், தலைவர்கள் மற்றும் பலரது நடவடிக்கைக் காட்சிகள்; இத்தனை ஆண்டுகால ஆட்சி சமூக நீதிக்காக எதையுமே செய்துவிடவில்லை என்பதை மாரி தன் திரைப்படத்தில் துணிந்து சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது. காரணத்தை நீங்களே அறிந்திருப்பீர்கள்.

 சினிமாத்தனங்களின்றி, சமரசமின்றிப் பேசவேண்டிய பொறுப்பும் வாய்ப்பும் இருக்கிறது மாரிக்கு.  .இந்தப் படத்தில் தனது இயல்பானத் திரை ஆக்கத்திலிருந்து பல இடங்களில் விலகி விலகி நடக்கிறார் மாரி செல்வராசு. அதன் காரணம் தெரியவில்லை. போகட்டும். அவரிடமிருந்து இன்னுமொரு சிறந்த படைப்பிற்காகக் காத்திருக்கலாம்.