Tuesday, 18 November 2025

பெரியவர் வ.உ.சி. நினைவேந்தல் 2025

 


மண்ணின் விடுதலையைக்

கண்ணில் காணாது

இன்னுயிர் நீங்கும்

இறுதி நாள்!


கண்பட வெளியே

கனன்றெரியும் விறகு,

புண்பட்டு உள்ளே

நொந்தெரியும் உள்ளம்.


இன்னும்,

எத்தனைக் காலம்

அடுப்படிச் சிறையில்

உழலும் வாழ்க்கை?


அன்றைய நாட்களின்

பெண்களின் நிலைமையை

எண்ணியபடியே

கண்ணீர் உகுத்தது

பெரியவர் உள்ளம்.


குறள் உரைக்க இயலாத 

தன்

குரல்வளையின் மீதும்,

ஆற்றாமை குழைந்த ஏக்கம்.


கூற்றுவன் வாயிலில்

நின்றிருக்கும் போதும்,

நாடும் மக்களும்

நற்றமிழ்க் குறளும்

நெஞ்சில் சுமந்தே

விடுதலை பெற்றது

பெரியவர் ஆவி.


வாழ்க நீ எம்மான்!

வையத்து நாட்டிலெல்லாம்.

வாழி! வாழி!

Monday, 17 November 2025

புகைவண்டிச் சாரளம்


ஒன்றரை அடி
சாளரத்துக்கு வெளியே
உலகம் நடக்கிறது.

கொண்டுவந்த நீரைக்
கொட்டிவிட்டு
நீர் முகரப் போயிருக்கிறது
மேகம்.

மழை கழுவித் துடைத்த
மண் அழகு. 
தூசியிழந்து உயிர்ப் பச்சை
காட்டும்
மரங்கள் பேரழகு.

சிறகுலர்ததும் காக்கை,
உடல் சிலிர்க்கும் குருவி,
பரபரக்கும் தட்டான்கள்,
பனையடி உரசும் செம்மறியாடு,
சேற்றில் நடக்கும் கொக்கு,
ஆற்றில் ஓடும் கலங்கிய நீர்,
அரவமற்ற கருஞ்சாலை...

அடடா எத்தனை அழகு.
ஒப்பனை இழந்தால்
மொத்தமும் அழகு.

வாழிய.. வான் மழை.

=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
17/11/2020
=====================

Wednesday, 12 November 2025

கல்லும் புல்லும்


வெள்ளமெனக்
கல்லைக் கொண்டால்
ஊழியொரு
மரமுந்தானே.
புல்லுடல்
நொடியாய்ப் போகும்
பொருந்திய போதும் கூட.

==========================
சிராப்பள்ளி ப.மாதேவன் 
12-11-2023
==========================

Saturday, 1 November 2025

உன்னை நினைக்கையில்...

 




எனது முதல் நூல் அச்சாகி வீட்டின் அரங்கிற்குள் வைத்தபோது, நீ படமாகிப்போய் ஐம்பது நாட்கள் ஆகியிருந்தது. என் நூல் வெளியாகும் என்ற எந்த அறிகுறியும் நீ அறிந்திருக்கவில்லை, வெளிப்படுத்தாமல் போன பிழை என்னுடையதுதான். அதனால் அதில் உனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது. ஆனால், எனக்கு...

எனது ஆறாவது நூலும் வெளிவரப்போகின்றது. ஆகச் சிறந்த ஒரு நேர்மையாளரின் நூலுக்கு உரை எழுதியிருக்கிறேன். நீ இருக்கும் போதே இவையெல்லாம் நடந்திருந்தால் மகிழ்ந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உன் மனப்பாங்கை அப்படித்தான் நான் உணர்ந்திருக்கிறேன். உன் நண்பர்களும், சுற்றமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னிடமிருந்து வெளிப்படும் கேள்விகள் அத்தனைக் கூர்மையானவை. எடுத்த சில முடிவுகள் கடினமானவை.

கல்லூரியிலும், விடுதியிலும்; நீ அறியாது உன் பெயரெழுதி உன் கையெழுத்தை இட்டபோதெல்லாம் உள்ளத்தின் ஓரத்தில் அச்சமும், மெல்லிய பதற்றத்தையும் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதோ நூலட்டையில் தந்தை என உனது பெயரைப் பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன், உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிற மெல்லிய வருத்தத்தோடு...

01-11-2025


Wednesday, 29 October 2025

மெய்யற விளக்கவுரை

 


இன்று மனநிறைவான நாள். இந்த நிறைவை அளித்த பெரியவர் வ.உ.சிதம்பரனாருக்குத் தலை தாழ்ந்த வணக்கம். 

பெரியவர் வ.உ.சிதம்பரனார் இயற்றிய மெய்யறம் எனும் நூலின், மாணவரியல் முழுமைக்கும் விளக்கவுரையை எழுதி முடித்து,  உரியவர்களிடம் சேர்த்துவிட்டேன். அச்சேறி நூலாக வரும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.

வாழ்க்கைப் பேராறு தன் போக்கிலேயே ஓடிக்கொண்டிருந்தாலும், பல துடுப்புகளின் உதவியோடு என் படகிலேயே பயணம் செய்கிறேன் என்பது பெரும் பேறுதான். இந்தப் பேற்றை எனக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

முகன்மையாக,

எனது எழுத்துகளை முதன்முதலில் நூலாகத் தவழச் செய்த நாகர்கோவில், தெ.தி.இந்துக்கல்லூரியின் மேனாள் தலைவர், அமரர் பெ.ஆறுமுகம்பிள்ளை,

உரையாசிரியனாய் என்னை மாற்றி, நூற்களை வெளியிட்ட நண்பர், திருவானைக்கா திரு ச.முத்துக்குமாரசாமி,

தன்னலம் கருதாத இவ்விருவரின் செயலே இன்று பெரியவரின் 'மெய்யறம்' நூலுக்கு விளக்கவுரை எழுதி முடிக்க முழுமுதற் காரணம்.

இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தளிகையாக, ஒரே வெண்பா இருவருக்குமாகின்றது.

நான்தேடா நல்லமுது நல்லோர் மகிழ்ந்திருக்க/
வான்வாடா வண்ணமழை வண்டமிழ்க் காதலால்/
தாமாக என்னெழுத்தை நூலாய்ப் பதிப்பித்தக்/
கானுலாப் பாதைக் கதிர்/

என் வலைப்பக்கத்திலும், முகநூல் பக்கத்திலும் எழுதியதியதைப் படித்துக் கருத்திட்ட, அழைத்துப் பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களது கருத்துகள் என்னைச் செம்மைப் படுத்தியதாலும், மேலும் படிக்கத் தூண்டியதாலும் நிலை உயர்ந்திருக்கிறேன் என்பதில் ஐயமில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெரியவரின் 'பாடல்திரட்டு' நூலின் சில பாடல்களுக்கு உரை எழுதத் தொடங்கியபோது திரு ரெங்கையா முருகன் முகநூலில் அறிமுகமானார். நேரில் சந்திப்பு. உரையாடல்கள்.

ஒருநாள், "பெரியவரின் மெய்யற ஆண்டு இது. மெய்யறம் குறித்து இணையவழியில் பேச இயலுமா?" என்றார். "பேசுவதற்குச் சூழலும், காலமும் இடந்தருமா எனத் தெரியவில்லை ஐயா. உரையாக எழுத முயல்கிறேன்" என்றேன்.

சனவரி மாதம் ஏழாம் தேதி 2025ல் முதல் அதிகாரத்தின் விளக்கத்தை எழுதி அனுப்பினேன். முப்பது அதிகாரங்களுக்கும் விளக்கமெழுதி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நூலளவை விட நெடுங்காலம் எடுத்துவிட்டதுபோல் தோன்றுகின்றது. ஆனாலும் முடித்துவிட்டேன் என்ற மகிழ்வில் குறைவில்லை. தமிழில் துறைபோகிய பெரியவர் வ.உ.சிதம்பரனாரின் மனதோடு மிக நெருக்கமாக இருந்த இந்த நாட்களுக்காக அவருக்கு உளமார்ந்த நன்றி.

பெரியவரால் 1914ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மெய்யறத்திற்கு, நூறு ஆண்டுகள் தாண்டிய பின், முதன்முதலில் விளக்க உரையெழுதும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு திரு ரெங்கையா முருகனுக்கு மனமார்ந்த நன்றி. அவரின் தூண்டுதல் இல்லை என்றால் இது நிறைவுற்றிருக்குமா? என்று தெரியவில்லை. இந்த வேலையின் பின்புலத்தில் இருக்கும் வ.உ.சி ஆய்வுவட்டத்திற்கும், திரு குருசாமி மயில்வாகனன், திரு அறிவழகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

எந்தச் சூழலிலும் என்னோடு உறுதுணையாய் நிற்கும் என் துணைக்கும், அன்பு மகனுக்கும், மருமகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. அவனது திருமணம் நடந்தேறியதும் இவ்வாண்டின் மகிழ்ச்சிகளில் ஒன்று.

எனைப் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தலைதாழ்ந்த வணக்கம்.

ஐந்து வியாழவட்டம் நிறைவுற்றிருக்கிறது.

"முதலிரண்டு படிப்பில் போக,
மூன்றும் நான்கும் பொருளில் கரைய
ஐந்தில் பிறந்தேன் எழுத்தாய்
அழகிய தமிழ்த்தாய் வளர்த்தனை.

அறிந்தேன் பலவும்
அறிந்தேன் பலரை
அருள் பல பெற்றேன்.

கற்றவை எடுத்து விளம்பிட
உற்றவர் போல் உதவுவோர்
நற்றமிழ் போல் நலமுறுவாரே"


என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
29-10-2025