Saturday, 14 June 2025

தேயா மலை



செம்மறியாடுகள் முட்டிச்
சாய்ந்திட
செம்மண் சுவரல்லடா
தலைவன்;
திரைகடல் பல்லாண்டு
தீண்டியும் தேயாத
திருகோணமலையடா!!

=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
14-06-2021
=====================

Monday, 9 June 2025

மாம்பாலும் வைகாசி விசாக நாளும்


சென்னையில், ஒரு மணி நேரமாகப் பெருங்காற்றுடன் பெய்து கொண்டிருந்த  சிறு மழையும் ஓய்ந்து மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. மாலை நேரத்து மென் குளிர். படித்துக் கொண்டிருந்த புத்தகப் பக்கங்களுக்கிடையே, உருகிய சருக்கரையில் குழையும் சுக்கின் நறுமணம். கூடவே குமுளிமெட்டின் ஏலக்காய் உடைந்து, கொதிக்கும் அரிசிமாவில் சுருண்டு சுருண்டு எழுந்து காற்றில் தெளிக்கும் நறு நாற்றம். அடுக்களை நோக்கி நடக்கிறேன். உருளியில் மாம்பால் கொதித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய நார் கொண்ட மாம்பழத் துண்டுகள் கூழில் மேலெழுந்து மேலெழுந்து அடங்குகின்றன.

Friday, 6 June 2025

இத்தனைக் கண்களா? 👀


திரு "சாம்பசிவம் பிள்ளை" தொகுப்பித்த மருத்துவம் மற்றும் அறிவியல்; ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, சித்தமருத்துவத்தில் கண் தொடர்பான சொற்களை வகைப்படுத்தும் போது ஐம்பத்தியோரு வகையான கண்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.


அவை அமைப்பு மற்றும் நோய் தொடர்பானவை. அறிவியல் அணுகுமுறையிலான இந்த 'வகைப்படுத்தல்' நம் தனிச் சொத்து. இத்தகைய அணுகுமுறையே தொல்கபிலர் போன்றோரின் சாங்கிய / எண்ணியச் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக இருத்தல் கூடும். தொல்காப்பிய மரபியலும் அதை வழிமொழிவதாகவே காணக்கிடைக்கிறது.

. கண்களின் பெயர்கள்
. ==================

கருடக்கண்,
காக்கைக்கண்,
முண்டைக்கண்,
ஆந்தைக்கண்,
யானைக்கண்,
பூனைக்கண்,
மீன்கண்,
ஓரக்கண்,

Tuesday, 20 May 2025

மரண வாயிலில் இருந்து...



மற்றவருக்கு நிகழ்ந்தபோதெல்லாம்
மரணம் இயற்கையானதென்றே
அறிவு சொன்னது.
அன்று,
சட்டென்று வண்டிமோதிய
ஓசை அடங்குமுன்,
உடைந்த எலும்பின்
உள்ளே தெறித்த வலியின் உணர்வில்
இதயம் ஒருமுறை நின்று துடிக்க,
உச்சந்தலையில் கொட்டிய குருதி
உள்ளங்கையில் ஒழுகி விழ,
கண்கள் கிறங்கி கருமை சூழ்ந்து
தெய்வமே!!!
என்று கேவியழ முனைகையில்
மனிதர்கள் வந்தார்கள்.
இன்று,
உடல் கொஞ்சம் தேறி
உள்ளத்தில் சிந்தனை விரிகிறது.
"மரணத்தின் வாயிலில்
மனிதர்களே தெய்வங்கள்"
வீடு திரும்பியவரின் வாக்குமூலம்.

========================

20-05-2019
(பெரும் விபத்தொன்றில் சிக்கி, அருகில் நின்றுகொண்டிருந்த அறியா மனிதர்களால் மீட்கப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, மீண்டு... இன்று வீடுதிரும்பிய, பக்கத்து வீட்டுப் பெண்மணியின் சொற்கள் இவை)

======================

Monday, 19 May 2025

புத்தகத்திற்கு இப்படியொரு உவமை!


பொதுவாகவே புத்தகம் எனப்படுவது கருத்தாழம் மிக்கதாக இருக்க வேண்டும். அதன் செறிவு படித்து முடித்த பின் உள்ளத்துள் பொருள் சுரந்து அறிவை விரிவு செய்ய வேண்டும்.

அதற்காக; சிக்கலான சொற்களால் எளிதில் படிக்க இயலாமல் இருக்கக் கூடாது. பல புத்தகங்களின் பொதுப்பொருள் படிக்க எளிதாகவும், அதன் உட்பொருள் உணர்ந்து உள்வாங்க அரிதாகவும் இருக்கும்.

இந்தக் கருத்துக்கு ஓர் உவமை சொல்லி எழுதப் பெற்ற நாலடியார் பாடல்  ஒன்று வியக்க வைத்தது. உலகியல் அறிந்து எழுதிய பாடல் இது.

 பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.” (நாலடியார் பாடல் : 317)

 பொருளுரை:  பெறத்தக்கப் பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேம்போக்கான நெறிப்படி படிப்பவர் எல்லோருக்கும் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

 பொது மகளிர் விரும்பி அதைச் செய்யவில்லை என்பதையும், அவர் நெஞ்சுக்குள்ளே பல கனவுகள், மனக்காயங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. நூலின் உட்கருத்தை அறிய நூலாசிரியரின் போக்கிலேயே, அவரின் காலத்திற்கே  சென்று  படிக்க வேண்டும். அதுவே சரியான நெறியாகும்.

 செவ்விலக்கியப் பரப்பில் பாக்கள் மிகுதி. பல குறட்பாக்களின் வழியாக இந்த  துய்த்தலின்பத்தை வள்ளுவர் அடிக்கடி வழங்குவார்.

 பொதுமகளிர், பரத்தை போன்ற சொற்பயன்பாடுகளில் சிலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், “மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி: (அகநானூறு 146). என்ற வரியிலிருந்து பரத்தன் என்ற சொல்லும் வழக்கிலிருந்தமை அறிய முடிகின்றது.