Wednesday 13 September 2017

குமரி.



                குமரி தமிழ்நாட்டின் தென்னெல்லையாய்த் தண்ணென்றப் பெருங்கடலாய் விரிந்துகிடக்கிறாள். அவள் மடியில் எம்மினத்தின் தொன்மங்கள் இறைந்து கிடக்கின்றன.


     
           சங்க இலக்கியம், சமய இலக்கியம் தொடங்கி அண்மைக்காலம் வரை "குமரி" என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறாள். ஆங்கிலேயர்களும் "குமரி முனை" எனும் பொருள்தரும் Cape Comorin என்ற சொல்லாலேயே அழைத்தார்கள். அவள் எப்படி கன்னியாகுமரி ஆனாள் என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை.




     மொழிநிலைத் தொல்லியல் (Linguistic Palaeontology) எனும் ஆய்வுத்துறை மொழிகளின் பரவல் பற்றி ஆய்வு செய்கிறது. இதில் பேரறிஞர்கள் பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். சிந்து மொழி, சுமேரிய மொழி, ஏலமைட் மொழி, உலுப் மொழி போன்ற மொழிகளில் நிகழ்த்தப்பட்ட மொழித்தொல்லியல் ஆய்வுகள், ஆய்வாளர்களை இந்தக் குமரியை நோக்கி நகர்த்துகின்றன.





                        குமரி என்ர இந்தச் சொல் "குமர்" என்ற அடிச்சொல்லிலிருந்து பிறக்கின்றது. இதற்கான வேர்ச்சொல் "கும்" என்பது. "கும்" அல்லது "கொம்" என்பது வளமை, செழுமை என்ற அடிப்பொருள் உடையது.

                   "கும்முன்னு" இருக்கு என்றச் சொற்றொடரின் பயன்பாட்டை நினைவில் கொள்ளுங்கள். அண்மையில் "சிமிக்கிக் கம்மல்" பாட்டுப் பரவலானது எதனால்? கும்மென்றச் சேரநன்னாட்டு இளம்பெண்களும் "கும்"பலாய் அவர்கள் ஆடிய நடனமுந்தான். அன்றி பாட்டின் பொருள் பற்றியல்ல. பாட்டின் பொருளும் அத்தனை எளிதாய் இந்த மண்ணில் பொருந்துவதாயும் இல்லை.
                     பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டியும் "கும்" என்ற வேர்ச்சொல் சிமிக்கிக் கம்மல் பாடல் வரை நீள்கிறது.

                   கும்முன்னு, கும்பல், கும்பளங்காய் போன்றவை "கும்" என்ற வேர்ச்சொல்லில் பிறந்தவை.

                  கும் - அர் விகுதி சேர்ந்து "குமர்" அல்லது "கொமர்" என்றாகும்.
இன்றும் கூட குமரி மாவட்டப் பேச்சுவழக்கில்" கொமர்" எனும் இந்தப் பழஞ்சொல் பயன்பாட்டில் இருக்கிறது.  மணமாகாத இளம்பெண்களை அப்படிச் சொல்வது வழக்கம்.

    "வீட்ல ரெண்டு கொமரு இருக்குடே... எப்பிடி கரயேத்துவானோ?"

              ஒரே கருத்து ஆண், பெண் பாலால் குறிக்கப் பெறுவது   பழந்தமிழ் மரபு. குமர் பொதுச்சொல்.

       கும் - அன் விகுதி சேரும்போது குமரன்
       கும் - இ விகுதி சேரும்போது குமரி

                      
எடு: மாரி பொதுச் சொல். மழையக்குறிக்கும்.
        மாரியப்பன், மாரியம்மாள் என்று இருபால் தாங்கும். தமிழ்நாட்டை ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் அறிமுகம் செய்தது "முத்து". இதுவும் இணையும்.
          
           முத்துக்குமரன், முத்துமாரியப்பன், மாரிமுத்து, குமரிமுத்து, சுடலைமுத்து.

        இப்படி எம் மொழியின், இனத்தின் வரலாற்றைச் சுமந்து கொண்டு நீருக்கு அடியில் "குமரி" இருக்கிறாள். இன்றையத் தென் எல்லைக் குமரி தொல்தமிழரின் குறியீடு.

பாவாணர் அடியொற்றி:
 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்