Tuesday, 29 April 2025

பாவேந்தர் பிறந்தநாள் 2025



பேனாவுக்குள் பெருங்கடலை நிரப்பி
எழுதிய சொற்களின் ஈரம் காய
புயலை வேலைக்கு அமர்த்தியவன்.
கேட்கும் நொடியில் பாக்களின்
கேடுகள் களையும் மருத்துவன்,
ஆர்த்தெழும் தமிழால் குருதியில்
ஆற்றலைச் சேர்த்திடும் பாவலன்.
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வானம்பாடி வயலுள் மறைந்தன்ன
கழிகடைப் பெண்களின் வீரம்மீள
தீயாய்ச் சொற்கள் கொளுத்தியவன்.
கைம்மை நோற்கும் பெண்களின்
கவலைகள் தீர்க்க முனைந்தவன்
மறுபடி ஒருமணம் புரிந்திட
மனத்தைச் செம்மை செய்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வேனிற்கால வேம்பின் கிளைபோல
உழவிடை மாந்தர்கள் சீரம்சாய
பெயலாய்ப் பாடல்கள் பாடியவன்.
இயற்கை தன்னைக் காதலால்
இயல்பாய் அணைக்கத் துடித்தவன்
நாட்டுப்புறத்தொடு காட்டுக்குறத்தியை
நல்மணம் செய்ய நினைத்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
=======================
சிராப்பள்ளி ப.மாதேவன்,
29 / 04 / 2023
=======================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்