Sunday 16 June 2019

தந்தையர் தினம் 2019


அள்ளி உண்ட சோற்றுப் பருக்கையில்
வியர்வை மணமாய் அப்பா.
துள்ளி விளையாடிய பொழுதுகளில்
மெல்லச் சிந்திய குருதி துடைத்த
துவர்த்தின் கறைகளில் அப்பா.
பள்ளி வாத்தியார் படிக்கச் சொல்லி
அழிசங் கம்பால் அடித்த இடங்களில்
தடவிய எண்ணெய் படலத்தின் மேலே
படிந்த விரல்தடமாய் அப்பா.
நெல்லவிக்கும் வார்ப்புகளில்
வாய்கீறும் நெல்மணியின் நறுநாற்றம் கலந்து
பனிவிழும் இரவில் பக்குவமாய் உதடுதொடும்
சுக்காப்பியின் இளஞ்சூடாய் அப்பா.
தலையில் ஏற்றிவைத்த கடவத்தின் சுமை
தலைதாங்கும் வரை தாங்கி நின்ற
உரம்பாய்ந்த கைகளாய் அப்பா.
இறந்தவுடன் வாசல்வந்து உன் அப்பன்
இதுவெல்லாம் எனக்குத் தரவேண்டும்
என்றெவனும் உனைத்தேடி வரமாட்டான்,
உனக்குக் கடனின்றி உயிர்விடுவேன்
என்றுரைத்த அவர் வாய்மொழியோ,
காதுகளில் சொல்லொலியாய் அப்பா.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்