Tuesday 6 July 2021

பெற்றவளுக்குப் பிறந்தநாள் 2021


 
நள்ளிரவு வானத்தில்
சிந்திக்கிடக்கிற
விண்மீன்களில் ஒன்றல்ல
நீ
நாளும் 
தேய்ந்து வளரும்
வெள்ளி நிலா.
 
நாட்காட்டியில் வழமையாய்க்
கிழித்தெறியும்
நாட்களில் ஒன்றல்ல
இந்நாள்.
உன்னைப் பெற்றோர்
உள்ளம் மகிழ்ந்த
பொன்னாள்.

எங்களைத் தவிர
எல்லாமும் மறந்த
உன் வாழ்க்கைதன்னில்
எண்ணத்திலேனும் வைத்திருந்தாயா?
நீ
பிறந்ததும் ஒரு பெருநாளென்று.
 
ஈகம் செய்வதற்கே 
இப்பிறப்பென்று
தேதியும் கிழமையும்
தேவைப்படாமல்
வாழ்ந்திருந்த உனக்கு
வயதே மறந்திருக்கும்!

அன்றெல்லாம்;

நீ
உறங்கிய பகல் பொழுது
ஒன்றுகூட நினைவில்லை.
எமக்கென
உறங்காத இரவுகள்
ஓராயிரம் நினைவிலுண்டு.

நீ
உண்டு மகிழ்ந்த நொடி
ஒன்றுகூட நினைவில்லை.
எமக்கு
ஊட்டிச் சிரித்த நாழிகைள்
ஒரு நூறாயிரம் உணர்விலுண்டு.

உனக்கு
கடுத்தமுகம் உண்டென்று
அடுத்தவர் சொல்லிக்கூட
அறிந்ததில்லை.

அன்று,
நாங்கள் அறியாதிருந்த
உன்
பிறந்தநாளைப் போல.

மரங்கள் வாழ்த்துமென
மழை காத்திருப்பதில்லை.

ஆனாலும்,
காற்றடிக்கும் போதெல்லாம்
கையசைத்து இலையுதிர்த்து
மலர் சொரிந்து வாழ்த்திடுமே
அதுபோல எம்மனமும்
வாழ்த்திடுமே உனை

வாழி! வாழி! என.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்