அன்று,
சட்டென்று வண்டிமோதிய
ஓசை அடங்குமுன்,
உடைந்த எலும்பின்
உள்ளே தெறித்த வலியின் உணர்வில்
இதயம் ஒருமுறை நின்று துடிக்க,
உச்சந்தலையில் கொட்டிய குருதி
உள்ளங்கையில் ஒழுகி விழ,
கண்கள் கிறங்கி கருமை சூழ்ந்து
தெய்வமே!!!
என்று கேவியழ முனைகையில்
மனிதர்கள் வந்தார்கள்.
இன்று,
உடல் கொஞ்சம் தேறி
உள்ளத்தில் சிந்தனை விரிகிறது.
"மரணத்தின் வாயிலில்
மனிதர்களே தெய்வங்கள்"
வீடு திரும்பியவரின் வாக்குமூலம்.
========================
20-05-2019
(பெரும் விபத்தொன்றில் சிக்கி, அருகில் நின்றுகொண்டிருந்த அறியா மனிதர்களால் மீட்கப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, மீண்டு... இன்று வீடுதிரும்பிய, பக்கத்து வீட்டுப் பெண்மணியின் சொற்கள் இவை)
======================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்