Sunday, 20 July 2025

செம்மலின் நேர்மை

 


(இணைக்குறள் ஆசிரியப்பா)

வான்வளி தன்தொழில் மறந்து  வானின்று

தான்பொழி நன்முகில் பொய்த்து நெடும்புனல்

அழுவத் துநீர்மை குறைந் திடினும் 

விழுமியர் வஉசி உளங் கொண்ட 

நேர்மை குன்றா தென்பது 

சீர்மை மிக்க உயர் வாழ்வால் 

அறிந்த திவ்வுல கவர் தீரா 

உறுதியொ டுவாழ்ந்து மறைந்த பின்னே.


நெடுங்கடல் வ.உ.சி


மேலே சீறும் பேரலைகள், 

அடிவயிற்றில் 

அறிவின் பேரமைதி.


உதவும் மனத்தொடு 

உப்பு தொடங்கி

ஓருநூறு பொருட்கள்.

முத்து பவளமென

ஆழிப் பெருஞ்செல்வம்.


உவர்நீர் நடுவே

நன்னீர் போலே

சொத்திழந்த போதும் 

விருந்தளித்த மேன்மை.


கண்ணூர்ச் சிறையின்

கம்பிகளுக்கு நடுவே

வரும்

தலைமுறைக்குக் கையளித்தத்

தமிழ்ச்செல்வம்.


உணவும் இடமும்

உடுத்தும் உடையும்

நிலையில்லாதபோதும்

உரிமை இழந்தவர்

குரலாய் ஒலித்த வீரம்.


பெரியவர் வ.உ.சி

அரிய நெடுங்கடல்.

மூழ்கி எழுவோருக்குப் 

படுபொருட்கள் ஏராளம்.

நாம்தான் இன்னும் 

முழுவதையும் கண்டடைந்தோமில்லை.

Monday, 14 July 2025

நானே... பெய்தேன்





மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் புதுச் சிந்தனைகளைத் தந்தும் இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்ற  திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம். பலவாறான கருத்துகளைத் தாங்கிய உரைகள் ஏராளம் கண்டது திருக்குறளே. அண்மையில் வள்ளுவத்துக்கு உரையெழுதி வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிறப்புதான். அவரது கருத்துகளும் வளம் சேர்க்கலாம். உருவகங்கள் ஒருவேளை இளையோரைச் சென்றடையலாம். நல்லதுதான். 

ஆனால், தன் உரை குறித்து விளம்பரப்படுத்தும் முகமாக,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் - 55) எனும் குறளுக்கு;

"கடவுளைத் தொழாது கணவனையே தொழுது எழும் இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று காலங்கலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத்தான் ஆளாகும். அந்த சர்ச்சையை என் உரையில் நான் சரி செய்திருக்கிறேன். எழுதியிருக்கிறேன் 'கட்டமைக்கப்பட்டத் தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவனையே தொழுது எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என்று எழுதியிருக்கிறேன். சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழையில்லை." என ஒழு விழியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். 

Friday, 11 July 2025

கண்ணகிக் கோட்டம் - எது மெய்?




 முனைவர் துளசி. இராமசாமி எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1987ல் வெளியிட்ட மங்கல தேவி கண்ணகி கோட்டம் (நாட்டுப்புறவியலார் அணுகுமுறை) எனும் நூலில்,

கூடலூர் மக்களுக்குப் பாத்தியப்பட்ட கோவில் போன்று இருப்பது தான் மங்கலதேவி கோட்டம். இம்மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம் என்று முதன்முதலில் உலகுக்குச் சொல்லி வந்தவர்கள் கூடலூர் மக்களாவார்கள்; ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்று இருந்தது; தமிழகத்திலுள்ளவர்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய சங்க மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார்தான் முதன் முதலில் மங்கலதேவி கோட்டம் கண்ணகி கோட்டமாகும் என்று முறையாக அறிக்கைவிட்டு, அதை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கு.காமராசு அவர்களிடம் 1957-இல் முறையிட்டு இக்கண்ணகி கோட்டத்தைச் சீர்படுத்த வேண்டும்; சுற்றுலா மையமாக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். ஆனால் ஏனோ அவரின் முறையீட்டை யாரும் கண்டு கொள்ள வில்லை.