Wednesday 3 May 2017

அறிவை விரி… அச்சம் தவிர்…



அறிவை விரி… அச்சம் தவிர்…

    அண்மைக் காலமாய் “கீழடி மறைக்கப்படுகிறது” “கீழடியில் ஆரிய நாகரிகத்தை நுழைக்க முயற்சி” என்று பலவாறான பதிவுகளை முகநூலில் பார்க்கிறேன்.
    கீழடியைக் காப்பதற்குப் போராட்டக்களம் புகுந்த அனைவரையும் நன்றிப்பெருக்கோடு வணங்குகிறேன்.
    உலகின் முதல் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த அச்சம் வரக் காரணம் என்ன? தமிழர் நாகரிகத்தின் மீது வேறு ஒரு நாகரிகத்தை எப்படி ஏற்றிச் சொல்லிவிட முடியும்? யாரிடம் சொல்லிவிட முடியும்? தமிழர் நாகரிகத்தை மறைப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதற்கான எதிர்வினை என்ன? அந்த அகழ்வாய்வைத் தொடரச்சொல்லிப் போராடுவது, சரியான ஆய்வாளர்களை பணியில் தொடர அல்லது புதிதாய் அமர்த்தப் போராடுவது.
    சரி. போரட்டங்களைக் கருத்தில்கொண்டு அரசுகள் சரியான வேலையைச் செய்துவிட்டால் இந்த அச்சம் முழுமையாக அகன்றிடுமா? அத்தோடு வேலை முடிந்து போய்விடுமா?
     உள்ளம் சொல்லும் விடை “இல்லை” என்பதுதான். இப்படியொரு அச்சம் ஏற்படக் காரணம் நம்மிடம் பரவலான நேர்வினைகள் எதுவும் இல்லாமல் போனதுதான்.
     இன்று தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு என்று அதிகம் பேசுபவர்கள் அல்லது கவலைப் படுபவர்கள் நம் குழந்தைகளை அந்த வழி நோக்கித் திருப்பியிருக்கிறோமா?
      நம் குழந்தைகளில் அதிகம் பேர் தமிழே சொல்லித்தரப்படாத பள்ளிகளிலும் சிலர் மொழியை மட்டும் ஓரளவு சொல்லித்தரும் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். பள்ளிகளில் நம் வரலாற்றைச் சொல்லித்தரும் பாடத்திட்டங்களே இல்லை. அப்படியெனில் இதை அப்படியே விட்டுவிடுவதா?
      நான் படிக்கிற காலங்களில் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் “சிந்துச் சமவெளி நாகரிகம்” என்று ஒரு பாடம் இருந்தது. காளை முத்திரையும், ஒரு குளத்தின் படமும் போடப்பட்டிருக்கும். சிந்துவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். குளத்தில் நீர் வருவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் அமைக்கபட்டிருந்தன. அவர்கள் குதிரையை அறிந்திருக்கவில்லை. இரும்பை அறிந்திருக்கவில்லை.என்ற சில குறிப்புகளோடு “மொகஞ்சதாரோ” “ஹரப்பா” கதைகள் முடிந்துபோயின.
      பல்லாயிரம் ஆண்டுகால பெரும் வரலாறு இவ்வளவுதானா? என்று நாம் யாரிடமும் கேட்டதில்லை. படித்து முடித்து ஆண்டுகள் தாண்டிய பின்னும் அந்த வரலாற்றுத் தொடர் தேடல்கள் இல்லை. அது எப்படி இல்லாமல் போனது. உலக வரலாற்று ஆசிரியர்கள் உள்ளங்களில் தோன்றிய, இயற்கையாகவே நமக்கு வரவேண்டிய பெருவியப்பு ஏன் நமக்கு வரவில்லை.
      ஒற்றைக் காரணம், நாம் நம் இலக்கியங்களைப் புறக்கணித்ததே. பள்ளியில் சொல்லித் தரவில்லையே. அப்புறம் எப்படிக் கற்றுக் கொள்வது, தெரிந்துகொள்வது என்று கேள்வி வரலாம். நன்றாகச் சிந்த்தித்துப் பாருங்கள், நாம் தெரிந்து வைத்திருக்கும் நிறையச் செய்திகள், கருத்துக்கள், கருத்தியல்கள் யாவும் நமக்குப் பள்ளியில் கற்றுத்தரப்பட்டவை அல்ல. மதக் கருத்தியல்கள், மாற்றுச் சிந்தனைகள், வாழும் முறைகள் இப்படி எல்லாமே நாமே தெரிந்துகொண்டோம்.
      ஆனால் அங்கு சில சிக்கல்கள் நடந்தேறிவிட்டன. கரிகாலனை அறிந்துகொள்ளும் முன்னே அலக்சாந்தரைத் தெரிந்துகொண்டோம். மதுரையை அறியாமல் பாபிலோனியாவைத் தெரிந்துகொண்டோம். கல்லணையை எட்டிக்கூடப் பார்த்திராமல் பக்கராநங்கலின் நீள அகலம் அறிந்துவிட்டோம். வள்ளுவரை அறியுமுன்னே சாக்ரட்டீசையும், காரல் மார்க்சையும் கரைத்துக் குடித்துவிட்டோம். இப்படி நிறைய….
     1920 ல், (சிந்து அகழ்வாய்வு தொடங்கப்படுவதற்கு முன்னால்) சிந்துப் பகுதியில் வாழ்ந்திருந்த பண்டைய மனிதர்கள் தமிழரே என்றும் அது சிறந்த நகர நாகரிகம் என்றும், மிகச் செறிவான, செழிப்பான அறத்துடன் கூடிய வாழ்வியல் முறை அங்கே இருந்ததென்றும் ஈழத்தில் சென்று உரையாற்றிய மறைமலையடிகளின் உரையை நாம் வரலாறாக எடுத்துக்கொண்டோமா? சிந்து ஆய்வுமுடிவுகள் வெளிவந்த போது மறைமலைஅடிகள் சொன்னச் செய்திகள் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தது கண்டு ஆய்வாளர்கள் வியப்பெய்தி நின்றார்கள். நாமோ அடிகளையும், அரப்பாவையும் ஒருசேர மறந்து போனோம்.
       சொற்களின் வேர்பிடித்து மொழிகளின் மூலம் தேடிப் பயணித்த தேவநேயப்பாவணரின் மொழிவளர்ச்சிக் கோடு மாந்த இனம் நகர்ந்த திசை யெல்லாம் பயணித்தது. ஆதிச்சநல்லூர்,கொடுமணல்,கீழடி என அடுக்கடுக்காய்ச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது அவற்றை ஆய்வு செய்ய பாவணரைப் படித்து நிற்கிற பிள்ளகள் நம்மிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
     பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரும், மு.இராசமணிக்கனாரும் போர்களின் தடமறிந்து ஊர்களின் எல்லைகளையும், தூரத்தையும் வகுத்துச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் நாம் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தோமா?
    இப்படி எத்தனையோ பேரறிஞர்கள் நம் வரலாற்றின் தடங்களை அறிந்து நமக்கு உரைத்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் நம் இலக்கியங்களை பெருஞ் சான்றாக வைத்துக்கொண்டு ஆய்ந்து இத்தனைப் பேருண்மைகளை எடுத்துச் சொன்னார்கள்.
    இந்த இலக்கியங்களை வெறும் ஓலைக் குவியலாய்ப் பார்த்ததன் விளைவு, கீழடியை மறைத்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறோம். நம் பழம் பெரும் இலக்கியங்களை முதலில் அருங்காட்சியகங்களிலிருந்து வீட்டிற்கு எடுத்து வருவோம். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் நம் வரலாறு சுமக்கும் எழுத்து வடிவங்கள் என்று குழந்தைகளிடம் சொல்வோம். பெட்டிக்குள் பூட்டிவைத்திருக்கும் திருக்குறளை அடுக்களைக்குள் கொண்டு வருவோம். அது பரிமாறப்பட வேண்டியது பதுக்கப்பட வேண்டியதல்ல என்று நம் தலைமுறைக்குச் சொல்வோம்.
    அரப்பாவை மண்ணிலிருந்து அகழ்ந்தெடுக்குமுன் பழம் பாடல்களிலிருந்தும் இருக்கு வேதத்திலிருந்தும் தான் மறைமலையடிகள் தோண்டியெடுத்தார். மணல்மூடி மறைந்து போன கொற்கை சங்க இலக்கியங்களில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அகழப்பட்டது. நம் முன்னோர் படைத்த பாடல்களில் இருந்தே பத்தாயிரம் ஆண்டுப் பழமை எனக் கருதப்படும் “எயிற்பட்டினச் சுவரும்”, பதினோராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமை எனக் கருதப்படும் பூம்புகாரின் முழுகிய சுவர்களும் கடல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
     இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் “சாலமோன் ஞானி எருசலேமில் கட்டிய கோயிலின் தொடக்க விழாவிற்கு பொனீசியர்கள் கப்பலில் உவரிக்கு(Ophir)) வந்து அகில், மயிலிறகு, ஆட்டுமயிர், குரங்கு, தந்தம் முதலியவற்றை வாங்கிப்போனார்கள்” என்கிறது பைபிள். உவரி பாண்டியர்களின் துறைமுகம். பைபிளில் சொல்லப்பட்ட Ophir உவரிப் பட்டினம் என்கிறார் கால்டுவெல் (1880). உவரிக்கு 4000 வயது என்றால் கீழடிக்கு எவ்வளவு?
    “ Korkai was from the earliest times the maritime Capital of Pandiyan kings and the greatest Emporium of India for more than four thousand years until the Mohamadan invasion of the 14th century” Manual of Tinnevelly – Mr.Stuart.  கொற்கை 4000 ஆண்டு கடந்தது என்றால் கீழடி எத்தனை ஆண்டு?
     “இங்கே குதிரைகள் வளர்க்கப் படுவதில்லை. குதிரைகள் வாங்குவதில் இந்நாட்டின் செல்வத்தின் பெரும்பாகம் செலவாகிறது. இங்கு ஏராளமான குதிரைகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. இங்குள்ள நான்கு மன்னர்களில் ஒவ்வொருவரும் 2000 குதிரைகளை வாங்கும் தேவை உடையவர்களாய் இருக்கிறார்கள். – மார்க்கோ போலொ.(1254-1324)
      இறுதியாக, வான்மீகி இராமயணம் பாண்டியனின் தலைநகர் “கவாடபுரம்” என்கிறது. அதன் பிறகு எழுதப்பெற்ற மாபாரதம் பாண்டியன் தலைநகர் “மணவூர்” என்கிறது. கடல்கோளையும், தலைநகர் மாற்றங்களையும் ஏற்கனவே இரண்டும் பதிவு செய்துவிட்டன இனி மாற்றமுடியாது. காலத்தை எப்படி மாற்றினாலும் பாண்டியன் தலைநகரின் காலமும் சேர்ந்தே மாறும்.
     எயிற்பட்டினச் சுவரும், புகாரின் மதிலும், கொற்கையும், காயலும், உவரியும், ஆதிச்சநல்லூரும், பொதிய மலைக் குகையும், பரங்குன்றும், நக்கீரரும், மதுரையும், உறையூரும், கொடுமணலும், மோரல் பாறையும், பேலுக்குறிச்சியும், வட்டக்கல் வீடும் அதன் உட்சுவரின் ஓவியங்களும் நம்மைச் சுற்றிக் காவலாய் நிற்கின்றன.  நாம் மொழியைப் படிப்போம், மூலங்களைப் படிப்போம். அறிந்தவர் அடுத்தவருக்கு உரைப்போம். கேட்டுத் தெளிவோம். வரும் தலைமுறையை வரலாறு அறிந்த தலைமுறையாக மாற்றுவோம். வரலாறு தெளிவோம். அறிவை விரிப்போம். அச்சம் தவிர்ப்போம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்