Saturday 10 March 2018

தெரு...

ஒரு ஆங்கிலக் கவிதையும், என் ஆசானின் மொழிபெயர்ப்பும், அதை உண்டு களித்துப் பின் ஊறும் உமிழ்நீராய் என் எழுத்தும்..
============================================

தெரு
----------
பேரமைதியாய்க் கிடக்கிறது இந்தப் பெருந்தெரு.
காரிருளில் நடக்கிறேன் நான்.
காலிடறி வீழ்ந்தெழுந்து விழிகளற்று நடக்கிறேன்.
என் காலடி பட்டுத்
துயிலும் கற்களும் மரணித்தச் சருகுகளும்
மௌனம் கலைத்து ஒலிக்கின்றன.
எனக்குப் பின்னாலும் யாரோ வருகிறார்கள்,
அவர் காலில் மிதிபட்டும் அழுகின்றன
அந்தக் கற்களும் சருகுகளும்.
என்
நடையையும் ஒட்டத்தையும்
நகலெடுக்கிறார் அவர்.
சட்டெனத் திரும்புகிறேன் யாருமில்லை.
கதவுகளின்றி
திக்கெட்டும் இறுக்கி அடைக்கப்பட்ட இருள்.
என்னையறியும் என் காலடிகள்,
நான் வளைவுகளில் ஒழுகியொழுகி
காத்திருப்பார் யாருமற்ற
என்னைப் பின்தொடர்வார் இல்லா
பெருந் தெருவுக்குள்ளே
மறுபடி மறுபடி ஒரு மனிதனைத் துரத்துகையில்,
இடறி வீழ்ந்து எழுந்தவன்
சட்டெனத் திரும்பி
என்னைப் பார்க்கையில் சொல்கிறான்
யாருமில்லை.

சிராப்பள்ளி மாதேவன்
---------------------------------------


தெரு – ஆக்டேவியா பாஸ் கவிதை
----------------------------------------------------------

இதோ, நீண்ட அமைதியான ஒரு தெரு .
நான் மையிருளில் நடந்து, தடுமாறி விழுகிறேன்
மீண்டும் எழுந்து, மீண்டும் பார்வையற்று நடக்க, என் பாதங்கள்
அமைதியான கற்களை, காய்ந்த சருகுகளை மிதித்து ஒலிக்கின்றன.
என்பின்னால் யாரோ ஒருவரும் கற்கள், சருகுகளை மிதித்து ஒலிக்கிறார்;
நான் நடைவேகத்தைக் குறைத்தால், அவரும் குறைக்கிறார்
நான் ஓடினால், அவரும் ஓடுகிறார், நான் திரும்புகிறேன் : யாருமில்லை.
எல்லாமே இருள்; கதவுகளுமில்லை
என் காலடிகள் மட்டுமே என்னை அறியும்.
யாரும் காத்திருக்காத, என்னை யாரும் பின்தொடராத
தெருவுக்கே இட்டுச் செல்லும்
இந்தத் திருப்பங்களில், திரும்பித் திரும்பி,
மனிதன் ஒருவனை நான் பின்தொடர்கையில்,
தட்டுத்தடுமாறி, இடறி விழுந்து, எழுந்த அவன், என்னைக்
காண்கையில் சொல்கிறான் : யாருமில்லை.
- தமிழில் ச. ஆறுமுகம்
https://www.facebook.com/arumughom.pillai


---------------------------------------------------------
The Street - Poem by Octavio Paz

Here is a long and silent street.
I walk in blackness and I stumble and fall
and rise, and I walk blind, my feet
trampling the silent stones and the dry leaves.
Someone behind me also tramples, stones, leaves:
if I slow down, he slows;
if I run, he runs I turn : nobody.
Everything dark and doorless,
only my steps aware of me,
I turning and turning among these corners
which lead forever to the street
where nobody waits for, nobody follows me,
where I pursue a man who stumbles
and rises and says when he sees me : nobody.

http://www.poemhunter.com/poem/the-street-3/

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்