Monday 13 May 2019

அகவை


என் கவிதையின் சொற்கள்
பாலைவனங்களின் மணல்வெளியில்
கொட்டிக்கிடக்கின்றன.
நடந்து போனவர்களின் எலும்புகள்,
பறந்து சென்ற பறவைகளின் தூவல்கள்,
தண்ணீரின்றி இறந்துபோன ஒட்டகத் திமில்,
கண்ணீர் பட்டு வெடிப்பேற்ற பாறை,
தொலைந்துபோன ஒலி,
சட்டென விழிக்கிறேன் கனவு கலைந்து.
முன்பெல்லாம்
நான் நடக்க விண்மீன்கள் பின்னால் வரும்.
கொக்குகள் கையில் பூ வரைந்து செல்லும்.
ஆகாயத்தாமரைகள் அடக்கிக் கட்டிய
தெப்பம் நாவாயாகும்.
தோளில் தூக்கிய சப்பரத்தில் சாமிகள் வாழும்.
நான் சொன்னபடி கேட்டது உலகம்.
எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு
கண்ணாடி பார்க்கிறேன்.
வெள்ளை விழுந்த தலையைக் கண்டு
விலகிச் சென்றன கொக்குகள்.
உள்ளம் வளர்ந்ததாலே
தள்ளிப் போயின விண்மீன்கள்.
உலகம் சொல்லும் படி
ஒவ்வொரு நாளும்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்