Wednesday 8 May 2019

படிமங்கள்


கடிதங்கள் காலம் சுமப்பவை.
பிறந்த கதை வளர்ந்த கதை பேசும்,
அனுப்புகை முகவரியில்
ஆயிரம் கதைகளுண்டு.
புலம்பெயர்ந்து சுற்றம் கண்டு
நலம் பயந்த கதைகள் சொல்லும்
பெறுகை முகவரியும்
பேசிடுமே நூறு கதை.
அன்பில் குழைந்ததால் அழகான எழுத்துகள்.
கண்ணீர் வீழ்ந்து கரைந்த ஓரெழுத்து,
மைதீர்ந்து போனதால் மங்கலான கையெழுத்து,
பசைக்குப் பதிலாகப் பாசம் தடவிய காகிதம்,
விரல்களின்றிக் கொஞ்சும் அம்மா,
வியர்வை படாது எதிரில் அப்பா,
தெருவில் நடந்த திருமணம்,
கோயில் கிடா, கொடைவிழா
மறைந்து போன மனிதரின் கதைகள்...
கடிதங்கள்,
சட்டென மறைந்திடும் தொடுதிரையல்ல.
அவை, காலம் சுமப்பவை.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்