Thursday 31 October 2019

தமிழ்நாடு நாள் - 2019

முந்நீர் மூழ்கிய புகார்ப் பட்டினமும்
முன்னைச் சிந்துவும் மூதாதைக் கீழடியும்
தண்ஆன் பொருனை ஆதிச்ச நல்லூரும்
தென்கரைக் குமரித் தண்கடல் விழுங்கிய
முன்னவர் வாழ்ந்த தண்டமிழ் நிலமும்;
வீரமும் நேர்மையும் விளைந்த நாள்வரை
வரலாறு நெடுகிலும் அயலார் கைகொளாது,
துரோகமும் சூழ்ச்சியும் தொடங்கிய நாள்முதல்
வேங்கடம் ஒழிய குடகடல் மறக்க
பாழான காலங்கள் ஊழாகி முடிய
கூறுசெய்த காலமொன்று குலமறுத்துப் போட
பரங்கியர் கடலேக, ஒன்றியத்தின் உறுப்பாகி;
மொழிவழி என்றுரைத்து கருநாடும் ஆந்திரமும்
பகுதியைப் பற்றிக் கொள்ள - சூழ்ச்சிநிறை
நிலவழி என்றுசொல்லி கேரளமும் மிகுதிகொள்ள;
வடக்கிலும் தெற்கிலும் வலிமை கொண்டு
நிலவெல்லை சரிசெய்ய நின்றவர் திறத்தாலும்
உயிர்நீத்த ஈகியர் உள்ளத்தின் உரத்தாலும்
தானாகக் கிடந்தநிலம் தனிநாடு ஆனதுவே.
கீழடிக்கும் முன்பிறந்த பிட்டங் கொற்றன்
குதிரைமலை எதிரொலித்தக் குரல்சொன்ன பெயராலே
தமிழ்நாடு எனவழகாய் தாய்மண் அழைத்ததுவே.
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பாடுவோம் அந்நாள் இந்நாள் என்றே!!!


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்