Tuesday 8 February 2022

இன்னொரு பொங்கல்

 


. ==================
. இன்னொரு பொங்கல்
. ==================

காலையில் கடைத்தெருவுக்குச் செல்வதற்காக கீழே இறங்கினேன். கீழ் வீட்டின் முன் ஒரு பண்டிகைக்கான தோற்றம் தென்பட்டது. அவர்கள் குடி வந்து பத்துப் பதினைந்து நாட்களாகின்றன. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மாக்கோலங்களின் வளைவுகள், ஒரு நீண்ட மரபின் செய்திகளை மொழியின்றி சொல்லிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

பளிச்செனத் துலக்கப்பட்ட ஒரு வெண்கலப்பானையில் சருக்கரைப் பொங்கல். அருகே பலவிதமான பழங்கள். செறிவாகக் காணக்கிடைத்த மலர்கள். வெற்றிலை, பாக்கு. பச்சை மஞ்சள் குலை என தைப்பொங்கலுக்கான எல்லா படையல் பொருள்களோடும் தோற்றமளித்தது அந்த நடை முற்றம்.

அங்கே முகாமையாக வைக்கப் பட்டிருந்த் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி என்னை ஈர்த்தது. அந்த வீட்டுப் பெண்மணி பட்டுப்புடவையுடுத்தி வழிபடுதலுக்கான முனைப்பில் இருந்தார். பேசிப் பழக்கமாகவில்லை என்றாலும் கேட்டாக வேண்டுமே.

"என்ன விசேசமுங்க?"

அவருக்கு தமிழில் சரியாகப் பேச வராது போலும். புரிந்து கொள்ளவதே கடினமாக இருக்கும் என்றும் தோன்றியது. அவர்களது மரபை எப்படி நமக்குக் கடத்துவது என்று எண்ணியிருப்பார் போலும்.

"நீங்க தை மாசம் பொங்கல் வைக்கிறீங்கல்ல அதேதான் இது . நாங்க தை அம்மாவாசை முடிந்து ஏழாவது நாள் பொங்கல் கொண்டாடுவோம்."

"அப்படீங்களா?" கேட்டுவிட்டு படியிறங்கிக் கடைத்தெருவுக்கு வந்துவிட்டேன். திரும்பி வரும்போது, எங்கள் வீட்டு வாயிலில் என் துணைவியாரும் அந்தப் பெண்மணியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஊர்ல எல்லா வீட்டிலேயும் பிள்ளைங்க, பேரப்பிளைங்கன்னு எல்லோரும் வந்துருவாங்க. எல்லாவீட்டிலும் கூட்டமா இருக்கும். முற்றத்துல அல்லது மொட்டை மாடியில பொங்கல் இடுவோம். காலைல இருந்து சூரியன் உச்சிக்கு வரதுக்கு முன்னாடி விட்டு முடிச்சிரணும்"

"ஓ.. இந்தப் படையல், பழம் எல்லாம்..."

"ஊர்ல நிறைய வச்சிருப்போம். பண்டிகைங்கிறதால எல்லாம் கடைத்தெருவுல கிடைக்கும்."

"அந்தக் கண்ணாடி?"

"அது கண்டிப்பா வைக்கணுமுங்க"

"சரிங்க.. "

எங்கள் அடுக்ககத்தில் தெலுங்கைத் தாய்னொழியாகக் கொண்ட மூன்று குடும்பங்கள் ஏற்கனவே இருக்கின்றன. "உகாதி" கொண்டாடுவார்கள். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் யாருமே இந்தப் பொங்கலைக் கொண்டாடிப் பார்த்ததில்லை. மனதுக்குள் கேள்வி எழ...

"அம்மா நீங்க எந்த ஊர்?"

"ஆந்ரா"

"ஆந்திராவில் எங்க?"

"அதுவா விசயவாடாவிலிருந்து ரெண்டு மூணுமணிநேரம் போகணும். "

"விசாகப்பட்டினம் பக்கமா?"

"இல்ல.. விஜயவாடாவுக்கு வெஸ்ட்டுல போகணும்"

"சரிங்கம்மா.. நன்றி"

அவர்கள் கொடுத்துவிட்டுப் போன சருக்கரைப் பொங்கலைத் தின்றுகொண்டே கூகுளில் தேடினேன். அவர்கள் சொன்ன பகுதி "தெலுங்கானா" என்றது கூகுள். பொங்கலின் சுவை ஒன்றாக இருந்தாலும் வைக்கப்பெறும் காலமும், வழக்கமும், வேறு வேறு மரபுக் கூறுகளின் தன்மையை உணர்த்துகின்றன. அதனால் தான் மற்ற மூன்று தெலுங்கு பேசும் குடும்பங்களிலும் இந்த வழக்கம் இல்லை போலும்.

"தெலுங்கானா" - தெலுங்கு பேசுபவர் நாடு என்பதற்கான காரணங்கள் அரசியலையும் தாண்டி அதன் மரபுக் கூறுகளுக்குள் கிடக்கின்றன என்றே தோன்றுகிறது.

படம்: இணையத்தில் எடுத்தது
========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
08-02-2022
========================


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்