சென்னையில், ஒரு மணி நேரமாகப் பெருங்காற்றுடன் பெய்து கொண்டிருந்த சிறு மழையும் ஓய்ந்து மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. மாலை நேரத்து மென் குளிர். படித்துக் கொண்டிருந்த புத்தகப் பக்கங்களுக்கிடையே, உருகிய சருக்கரையில் குழையும் சுக்கின் நறுமணம். கூடவே குமுளிமெட்டின் ஏலக்காய் உடைந்து, கொதிக்கும் அரிசிமாவில் சுருண்டு சுருண்டு எழுந்து காற்றில் தெளிக்கும் நறு நாற்றம். அடுக்களை நோக்கி நடக்கிறேன். உருளியில் மாம்பால் கொதித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய நார் கொண்ட மாம்பழத் துண்டுகள் கூழில் மேலெழுந்து மேலெழுந்து அடங்குகின்றன.
குறிஞ்சியில் தேனும் தினைமாவும் தின்று களித்த முருகனுக்கு மேலமலைச் சாரலில், நாஞ்சிநாட்டில் வைகாசி விசாக மாம்பால் தளிகை. சித்திரை மாதக் கனிகாணலில் மா, பலா, வாழை இடம்பெறும். கோடையில் இயற்கையின் அன்பளிப்பு அவை. அதிலொன்றான மாம்பழத்தோடு அரிசிமா சேர்த்து, தேங்காய்ப் பாலில் குழைத்துக் குழைத்து, சருக்கரை சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் காடிதான் மாம்பால். குமரிப் பகுதியில் வைகாசி விசாக நாளில் மாலை நேரத்தில் செய்யப்படும் சுவையான உணவு. வீடுகளில். கோயில்களில் என எல்லாவிடத்தும்.
மாம்பழம் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து வந்ததாக அறியப் படுகிறது. ஆனால், அது வெகு நெடுங்காலத்துக்கு முந்தியதாக இருக்கலாம். தமிழர் வாழ்வியலோடு மாவின் பிணைப்பு ஏராளம். அகநானூற்றின் பல பாடல்களில் மாமரம் பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சரஞ்சரமாய்த் தொங்கும் கொன்றைப்பூ தொடங்கி மா, பலா, வாழை என மஞ்சள் வண்ணத்தின் பரவல் கோடையில் மிகுதி.
இரண்டாகப் பிளந்த மாவடுவைப் பெண்ணின் கண்களுக்கு உவமையாகக் கொண்டாடிய புலவரும் உண்டு. சின்னஞ்சிறு பூக்கள் பூத்துக்குலுங்கும் மாமரம் இளவேனிலை வரவேற்கும் தமிழ் இலக்கிய அடையாளம். காமனின் அம்பில் இடம் பெறுகின்றது மாம்பூ. பெண்கள் தலையில் சூடாத பூவொன்று காதலில் முகாமையான இடத்தைப் பிடித்தது வியப்பே. கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் 'தேமா' என்றே அழைக்கிறார். யாப்பிலும், சீர் பிரித்துக் கற்கத் துடங்குவதும் நேர் நேர் - தேமா என்றே இனிமையுடன் தொடங்குகிறது. மாம்பழத்திலிருந்து கள் செய்து உண்ட செய்திகளையும் இலக்கியங்கள் பகர்கின்றன. மாம்பழ நிறப் பட்டு, மாங்கா மாலை, மாநிறம் என மாமரம் தமிழர் வாழ்வியலில் எங்கும் நிறைந்திருக்கின்றது. மாம்பழக்கட்டு māmbaḻkkaṭṭu, - புடவை உடுக்கும் வகையிலொன்று; a.mode of wearing saree. என்ற ஒரு செய்தியையும் தருகின்றது பேரகரமுதலி.
ஆனால், இந்த மாம்பால்...
இதைத் தளிகை எனச் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை? அறிந்த நாள் முதலாக மாலையில் பள்ளியிலிருந்து வந்ததும் தட்டில் ஊற்றிச் சுடச் சுடச் சாப்பிட்ட நினைவன்றி, கடவுளைத் தொழுத நினைவு இல்லை.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்