Sunday 5 January 2020

தொல்காப்பியம் வரலாற்றுப் பெட்டகமா?


வாழ்வியல் கூறுகளை, இயலை தன்னுள்ளே அடக்கி நிற்கிற தொல்காப்பியம் வரலாற்றுப் பெட்டகமா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஏராளமான வரலாற்றுப் பெட்டகங்களுக்கான திறவுகோல்கள் அதற்குள்ளே இருக்கின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அன்றைய வாழ்வியலின் எல்லா நிலைகளையும்; நிகழ்வுகளாக இன்றி நிலம், உயிர், அறிவு, மொழி, செப்பம், இயல்,இசை, கூத்து, அகம், புறம் என எல்லாவற்றின் அடிப்படைக்கூறுகளாக அடுக்கி வைத்திருக்கிறது அது.

நம் முன்னோர் நடந்தபாதையும், கடந்த பாதையும், தடுக்கி விழுந்த இடங்களும் அங்கே அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. கண்டிப்பாக அவை உதவும். நமக்கு அறிவூட்டும்.

நான் ஏராளமாகப் பெற்றிருக்கிறேன். வேண்டுமானால் ஒன்றைச் சொல்கிறேன் அதன் பிறகு ஒருவர் சிந்திக்க "தொல்காப்பியம்" உதவுமா என்று நீங்களே முடிவெடுங்கள். இல்லை; பதிவை கடந்து சென்று விடுங்கள்.

தமிழகத்தில் ஏராளமான பழங் கோயில்கள் உள்ளன. "அந்த கோயிலுக்குப் போனா அது கிடைக்கும், இந்தக் கோயிலுக்குப் போனா இது கிடைக்கும்" "பரிகாரக் கோயில்" என்பன போன்ற செய்திகள் ஏராளமான கோயில்களைப் பற்றி இருக்கின்றன. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அது போன்ற பெருமை எதுவும் இல்லை. யாரும் 'அங்கு போனால் .. !! " என்று எதுவும் சொவதில்லை? ஏன் தெரியுமா?

காரணம் இதுதான். தஞ்சைக் கோயிலுக்கு தல புராணக் கதை
இல்லை. ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய பெருவுடையார் எந்தக் கதைக்குள்ளும் சிக்கவில்லை. கோயிலைக் கட்டிய போதே அது குறித்தான எல்லாச் செய்திகளையும் கல்லில் வெட்டி வைத்து உண்மை வரலாற்றைச் செம்மையாய் அறிவித்துவிட்டான் மாமன்னன் இராசராசன். தஞ்சை மக்களும் அதை உணர்ந்து பின்பற்றிக் கொண்டார்கள்.

அதனால் கட்டிய வரலாற்றைத் தாண்டி, கட்டுக்கதைகள் நுழையாத கோயிலாய் நிமிர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

தொல்காப்பிய வழியில் இயலை அணுகியபோது சட்டென்று என் மனதில் தோன்றிய கருத்து, நண்பருக்காக இசை குறித்து தொல்காப்பியத்தை அணுகிய போது அண்மையில் முழுமை பெற்றது.

தொல்காப்பியம் அறிவோம். பயன் பெறுவோம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்