Sunday 26 January 2020

கருவறை மொழி


கருவறையில் பிண்டமாய்
காதுகளின்றிக் கிடந்தபோது,
உணர்வுகளின் முடிச்சின்வழி
தாயின் குருதி - என்
தலையில் சேர்த்தமொழி.

கையிரண்டும் பின்னி
காலிடையே சேர்த்துவைத்து
தலைகீழாய் இருந்தபோது,
தாயின் காதருகே - தந்தை
தலைகோதி சொன்னமொழி.

முன்னே வயிறுதள்ளி
முந்நூறு நாள் தாங்கி
என்னைச் சுமந்தவள்,
முதுகு வலியெடுக்க - அம்மா
என்றழைத்த அருமைமொழி.

மண்ணைத் தொடும்முன்னே
மருத்துவச்சி கைவீழ்ந்து
முதல் மூச்சு இழுக்கையிலே,
"ஆணம்மா" என்றென் - காதில்
அன்பாக அறைந்தமொழி.

முட்டூன்றி நடக்கையிலே
முகம்பார்த்துச் சிரிக்கையிலே
முன்னுச்சி மயிர்கோதி
முதுகிழவி ஆசையினால் - ராசா
என்றழைத்த அன்புமொழி.

பள்ளி வகுப்பறையில்
எழுத்தறியா சிறுவயதில்
சின்னக் கைபிடித்து
சீராய் முகம்பார்த்து - ஆசான்
சொல்லிக் கொடுத்தமொழி.

பள்ளித் தோழருடன்
பழகிக் களித்துச்
செல்லச் சண்டையிட்டு
சிரித்து மகிழ்ந்திருந்த - என்நாவில்
எந்நாளும் நின்றமொழி.

கல்லூரிக் காலத்தில்
காதல் கடிதத்தில்
காமம் செப்பாது
கவிதைச் சொல்லாகி - இன்னும்
மறவாத இன்பமொழி.

தாத்தாவின் சிதைமுன்னே
ஊரும் உற்றாரும்
ஒருசேரக் கூடிநிற்க
அரிசிபோட வாருங்கோ - என்று
அறிவிப்பைச் செய்தமொழி.

அப்பாவை எரித்தசாம்பல்
ஆற்றில் ஒழுகவிட்டு
நோன்பிருந்து சிலநாளில்
கல்லெடுப்புச் செய்கையிலே - காதருகே
தொழுதிடுங்கோ என்றமொழி.

என்வாழ்வாய் இருந்தமொழி,
கருவறைக்கும் கல்லறைக்கும்
நடுவிலாடும் வாழ்வதனில்
இறைவணங்க ஆகாதென்றால் - பிழை
மொழியிலில்லை இறையிலில்லை;
இடைநிற்போர்
உள்ளத்தே உள்ளதையா. 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்