Saturday 18 January 2020

கடலிலிருந்து கவிதைகள்



இமைகள்
தொட்டுக்கொண்டு விட்டுவிடும்
காலக்கெடுவுக்குள்
எத்தனையோ பிறப்பெடுக்கிறேன்.
எறும்பாய் யானையாய் எருதாய் புலியாய்
பன்றியாய் குரங்காய் அன்றிலாய் குருவியாய்
தும்பியாய் வண்டாய் தேளாய் பாம்பாய்
புல்லாய் மரமாய் கல்லாய் கடலாய்
நிலமாய் நீராய் அவராய் இவராய்
நீங்களாய் நானாய் எல்லாமுமாய்.
உங்கள் உணர்வுகளில்
மூச்செடுத்துக் கொள்கிறேன்.
உங்கள் கனவுகளில்
உடை தைத்துக் கொள்கிறேன்.
உங்கள் மகிழ்ச்சியில்
முகம் துடைத்துக் கொள்கிறேன்.
சில நேரம்,
உங்கள் கண்ணீரால்
என் பேனா நிரப்புகிறேன்.
உங்கள் எழுத்துகளின்
காற்புள்ளிகளில் கருக்கொள்கிறேன்.
அரைப்புள்ளிகளில் வாழ்ந்து முடிக்கிறேன்.
முற்றுப்புள்ளிகளில் சட்டென முகிழ்க்கிறேன்.
இன்னும் பிறக்காத சூல்கள்
தேடியலைகிறேன்.
உங்கள் தொண்டைக் குழிக்குள்
சிக்கிக்கொண்ட சொற்களில்
பாடல் புனைகிறேன்.
நீங்கள் மறந்துபோன
நினைவுகளால் இசைகோர்க்கிறேன்.
உயரப் பறந்து வானம்பாடியாய்
பாடித் திரிகிறேன்.
உள்ளம் களிக்க என்னை மறந்து
உயிர்ப் பந்தாய் விழுகிறேன்;
கடலில் முகந்த நீர்
மழைத்துளியாக
மண் சேர்வது போல்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்