தொகை
முதல் ஒலி முதல் குரல்
முதல் சொல் முதல் எழுத்து என
மாந்தர் உலகெங்கும் பேசும் மொழிகள்
ஈன்று புறந்தந்த எங்கள் தமிழே வாழி!
எல்லம் முதற்கொண்டு பல்லூர் மகர்க்கும்
சொல்லின் வேர்தந்து மங்காத தமிழே வாழி!
யாதும் ஊரே யாவரும் கேளிரென
ஓதுவார் தமைப்பெற்று ஓங்கிய தமிழே
வாழி! வாழி!!
பல்லவி
முன்னம் பிறந்த மொழி
எண்ணிற் சிறந்த மொழி
அன்னைத் தமிழ் தானடா!
நெஞ்சில் அதை நிறுத்தி
கண்ணின் இமை போல
காக்க எழு வோமடா!
மண்ணின் இயல்போடும்
தொன்மைப் பண்போடும்/
வாழ்ந்த மாந்தர்களின்
வாழ்க்கை தனைத்தாங்கி /
(முன்னம்)
சரணம்
தெற்கே கடலடியில் போனவொரு நாடுமுண்டு/
பொற்றை அடிமடியில் குமரியென்ற ஆறுமுண்டு/
சங்கம் வைத்துதமிழ் ஓங்கிநின்ற காலமுண்டு/
சாகா இலக்கியங்கள் சேர்த்துவைத்த மன்னருண்டு/
முற்பா அடியெடுத்துப் பாடுகின்ற புலவருண்டு/
கற்றா மனம்போல கசிந்துருகப் பாணருண்டு/
தாயாய் இம்மண்ணில் பன் நூறுமொழி பெற்றெடுத்த/
(முன்னம்)
ஒல்காப் புகழுடைய தொல்பொருளும் கையிலுண்டு/
எல்லோர் மனமகிழும் வள்ளுவனின் சொல்லுமுண்டு/
கல்லா மனிதரையும் பாடிவைத்த பத்துப்பாட்டு/
நல்லூழ் அறிவுறுத்தத் தேடிச்சேர்த்த கீழ்க்கணக்கு/
பொற்றா மரையாகச் சூடிக்கொண்ட எட்டுத்தொகை/
கற்றால் சிறக்குமினி கண்ணிழந்த மாந்தரினம்/
வானாய் இம்மண்ணில் எந் நாளுமிங்கே பாச்சொரியும்/
(முன்னம்)
![Image may contain: 2 people, text that says 'தமிழ் தமிழ'](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/132291411_3530037957073317_5527782340297453684_o.jpg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=KCUp_6pijoIAX-unTLN&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=b37733dc06754936690cf6b8163dea5a&oe=6012AE48)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்